Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Friday 16 August 2013

இசைபட வாழ்தல், மனிதநேயமற்ற குழுமஅறம்: ஆசிரியர்-கைமண்

மனிதர்களிடையே காணப்படும் பகிர்ந்து வாழ்தல் - பறித்து வாழ்தல், இசைபட வாழ்தல் - பகைபட வாழ்தல் ஆகிய இரு சோடிப் பண்பாட்டுக் கூறுகளே இங்கு அறம் எனும் பதத்தால் குறிப்பிடப்படுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவை சமூக குழுமங்களிற்குள் சிறைப்படுத்திக் காண்பது உருவ-மனிதநேயம் எனப்படுகிறது. சமூகக் குழுமங்களைக் கணக்கில் கொள்ளாமல் மனிதர்களிடையேயான உறவுகளைக் காண்பது அருவ-மனிதநேயம் எனப்படுகிறது. சமூக குழுமங்களெனும் பதம் எதைக் குறிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பார்ப்போம். மனிதன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் வகிக்கிறான். இதனால்தான் அவன் சமூகப் பிராணி எனப்படுகிறான். ஏனைய பிராணிகளிலிருந்து மனிதன் வேறுபடுவது இந்த இடத்தில் தான். இந்த சமூக நிறுவனங்கள் அவனின் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் வடிவமைக்கின்றன. அதே நேரம் அவன் தனித்துவமுள்ள தனிமனிதனாகவும் இருந்து வருகிறான். ஆனால்; இத்தனித்துவம் சமூக நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டதுமல்ல; அத்தனி நபர் சமூக நிறுவனங்களின் கொத்தடிமையும் அல்ல.

மனிதன் சுய விருப்பத்துடனும், சுய விருப்பின்றியும் உறுப்புரிமை வகிக்கும் சமூக நிறுவனங்கள் இரு வகைப்படும். ஒன்று அடிக்கட்டுமான சமூக நிறுவனங்கள், மற்றையது மேற்கட்டுமான சமூக நிறுவனங்கள். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களுக்கான எடுத்துக்காட்டுக்கள்; தொழிற்பிரிவுகளின் அடிப்படையிலான சங்கங்கள், நலன்புரிச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், கலை இலக்கிய மன்றங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் - குழுக்கள், கோவில்கள் இத்தியாதிகள். இவை முறைசார் நிறுவனங்களாகும். இவற்றிலான உறுப்புரிமை பெரும்பாலும் முறைசார் தன்மை பெற்றவைகளேயாகும். சடங்குகள் மரபுகள் ஆகியன முறைசார் தன்மை அற்றவை. அதாவது முறைசாரா சமூக நிறுவனங்களாகும். இரத்த உறவுகள், குடும்பம் ஆகிய இரண்டும் சமூக நிறுவனங்களே. இதில் இரத்த உறவுகள் முறைசாரா நிறுவுனமாகும். குடும்பம் முறைசார்ந்த தன்மையும், முறைசாரா தன்மையும் ஒருங்கே பெற்ற சமூக நிறுவனமாகும். குடும்பம்தான் முதலில் தோன்றிய முறை சார் சமூக நிறுவனமாகும். தனி நபர்களின் நடவடிக்கைகளை வடிவமைப்பதில் குடும்பம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இனவழிக் கட்டுமானங்கள் , மொழிவழிக் கட்டுமானங்கள், மதக் கட்டுமானம், வர்க்கக் கட்டுமானம், தேசக் கட்டுமானம் ஆகியவையே அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களாகும். இவ் அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களையே சமூகக் குழுமங்கள் என அழைக்கிறோம். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களை சமூக ஸ்தாபனங்கள் என அழைப்போம். சமூக குழுமங்கள் தான்  சமூக ஸ்தாபனங்களின் தோற்றுவாயாகும். அரசியல் கட்சிகளும் அரசியல் குழுக்களும் மேற்கட்டுமானத்துக் குரியவையே. இந்த சமூக ஸ்தாபனங்களினதும் அதன் உறுப்பினர்களினதும் அறம் கெட்டுள்ளது என்பதே இன்றைய விசனமாக உள்ளது. அதைப்பற்றி நிறையவே பேசப்பட வேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இது பற்றி வெளிப்படையான பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. இந்நிலை ஏன் உருவானது? இதை எவ்விதம் மாற்றுவது? என்பது தொடர்பான கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. அது நல்லதே, அவசியமானதே. ஆனால் இக்கட்டுரை அரசியல் குழுக்களின் அறம் கெட்டிருப்பது பற்றிப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஏனெனில், பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும். சமூக குழுமங்களைப் பானையென்றும் அகப்பையில் உள்ளவற்றை சமூக ஸ்தாபனங்கள் என்றும் கொள்ளவும். அகப்பையில் உள்ளவை வெறுமனே வெளிப்பாடுகள் தான். வெளிப்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் அவதானிப்போம், பட்டியலிடுவோம். வெளிப்பாடுகளை நோவென்றும் விளைவுகளை நோவின் காரணத்தாலான உடல் உள அவஸ்தைகள் என்றும் கொள்வோம். நோவை உணராமல் செய்ய ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால் அது ஏதாவது நோய்க்கான சிகிச்சையல்ல. வலி நிவாரணியுடன் நிறுத்தி விடக் கூடாது. நோய்க்கான சிகிச்சை அவசியம். அகப்பையில் உள்ளவற்றைப் பட்டியலிட்டது போதும். இனி மாற்றத்தைச் செய்ய பானைக்குள் செல்வோம். அப்போது தான் நோய் நாடலிலும், நோய் முதல் நாடலிலும் வெற்றி பெற முடியும். வாருங்கள் நோய் நாடியும், நோய் முதல் நாடியும் பானைக்குள் செல்வோம் என இக்கட்டுரை அழைக்கின்றது. நோய் முதல் பானைக்குள்தான் உள்ளது. சமூக குழுமங்களின் அறமே பானைப் பண்டமாகும். அப்பண்டத்தை முதலில் புரிந்து கொள்வோம். அதன் இருத்தலை மாத்திரமல்ல அதன் இயங்கியலையும் புரிந்து கொள்வோம். அதாவது இலங்கையின் சமூகக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள உறவு நிலையின் இயங்கியவைப் புரிந்துக் கொள்வோம். அவ் உறவு நிலையின் இன்றைய இயங்கு நியதிகளைப் புரிந்து கொள்வோம்.

சமூக குழுமங்களை நாம் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்பாட்டு மரபு வழி வந்த சமூக குழுமங்கள்; மற்றையது உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் செயற்படும் சமூக குழுமங்கள். இரண்டாவது வர்க்க-சமூக குழுமங்கள் என அழைக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், யாழ்பாணத்தார், வன்னியர், பௌத்த சிங்களவர், கிறிஸ்துவ சிங்களவர், வன்னிச் சிங்களவர், மலை நாட்டுச் சிங்களவர், முஸ்லீம்கள், வடகிழக்கு முஸ்லிம்கள், தென் இலங்கை முஸ்லீம்கள், மட்டக்களப்பார், கொழும்புத் தமிழர், கொவியார்ஸ், வெள்ளாளர், கரவாஸ், கரையார்கள், பறங்கியர்கள், வேடர், பஞ்சமர், குடிமைசாதிகள் நொடியாஸ், முக்குரைவர், முக்கியர், கிறிஸ்தவர், இந்து, சைவர், புலர் பெயர் தமிழர்கள், தமிழர், சிங்களவர் ஆகிய இவ்வித சமூக குழுமங்கள் அனைத்தும் பண்பாட்டு மரபு வழிவந்த சமூக குழுமங்களேயாகும். இவை அனைத்துக்குமான பொதுப் பெயர் என்ன? வர்க்க சமரச-சமூக குழுமங்கள் எனலாம். இக்குழுமங்களின் முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்களின் முதலில் வர்க்க சமரச கோட்பாட்டாளர்களாக ஆக்கப்படுகிறார்கள். இதுதான் இவர்களுக்கான ஞானஸ்நானமாகும். பகைமைப் போக்குக் கொண்ட குழுமங்களின் இருத்தலுக்கான காரணம் இவ்வர்க்க சமரசமே.

குழுமங்களுக்குள்ளான வர்க்க சமரசத்தின் அதிகரிப்பு குழுமங்களிடையேயான பகைமை உறவின் அதிகரிப்பாக அமைகின்றது. இக்குழுமங்களின் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும், தீவிர ஆதரவாளர்களும் வர்க்க நீக்கம் பற்றியும் வர்க்க உறவுகளுக்கு அப்பாற்பட்ட மனித உறவு பற்றியும் பேசிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் வர்க்க சமரசமும், குழும பாசமும் கலந்த இவர்களின் மனித நேயந்தான் வர்க்க சமரச-சமூக குழும உருவ-மனிதநேயம் எனப்படுகிறது. அடுத்த பக்கத்தில் தொழிலாளி வர்க்கம், உதிரித் தொழிலாளி வர்க்கம், விவசாயக் கூலிகள், உழைக்கும் விவசாயிகள், சிறு உடமை உற்பத்தியாளர்கள், ஆடை கசங்கா சேவைத்துறைத் தொழிலாளர்கள், மூளை உழைப்பாளர்கள் பெரும் நில உடமையாளர்கள் அதிகாரத்துவ வாதிகள், முதலாளிகள், சிறு வர்த்தகர்கள், பெரும் வர்த்தகர்கள் போன்றோர் தனித் தனி சமூக குழுமங்களாகச் செயல்படுகிறார்கள். இச் சமூக குழுமங்களே வர்க்க-சமூக குழுமங்களாகும். இவை தான் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அமைந்த சமூக குழுமங்கள். கடந்த 25 வருட கால இலங்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால் வர்க்க மேட்டுக்குடிச் சமூகக் குழுமம் மாத்திரமே (ஆளும் வர்க்கங்களின் கூட்டணி) உணர்வு பூர்வமான செயற்திறன் மிகு சக்தியாக இருந்து வருகின்றது. ஆனால், ஆளப்படும் வர்க்க குழுமங்களோ தமது வர்க்கக் கடமையை மறந்து வர்க்க சுபாவத்தை இழந்து ஒரு வர்க்கக் குழுமம் என்ற முறையில் நீண்ட துயிலில் ஆழ்ந்துள்ளன. சக்திமான்கள் இடையிடையே இவ்வித நீண்ட துயில் கொள்வது வரலாற்றின் தொடர்கதை போலும். கும்பகர்ணன் மீளாத் துயில் கொள்ளவில்லை, நீண்ட துயில் தான் கொண்டான். ஆனால் உழைக்கும் வர்க்க சமூக குழுமங்களின் உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமாக வர்க்க சமரச-சமூக குழுமங்களில் இணைவதே கடந்த 25 வருட கால இலங்கையின் வரலாறாக இருந்து வருகிறது. இவ்விதம் இணைபவர்களில் ஒரு பகுதியினர் வர்க்க மேல்நிலையாக்கம் பெற்று பணக்காரர்களாகிறார்கள். அத்துடன் வர்க்க சமரச-சமூக குழுமங்களின் தலைமை அணியாக மாறுகிறார்கள். அவ்விதம் மாற விரும்பாதவர்களும் மாற முடியாதவர்களும் அதே குண்டாஞ்சட்டிக்குள் நின்று குதிரையோட்டிய வண்ணம் உள்ளார்கள்.

நலமடிக்கப்பட்ட நாய்கள் தமது எஜமானர்களை விட்டுப் பிரிய முடியாதது போல் வர்க்க சமரசப் பார்வையுள்ள அவர்களால் வர்க்க சமரச-சமூக குழுமங்களைவிட்டு விலகிக் கொள்ளவும் முடியாமல், அதை நெறிப்படுத்தவும் வழி தெரியாமல் ஒரு மையத்தை சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். வர்க்க மேல் நிலை பெறும் முயற்சியில் தோற்றுப் போனவர்களும், மேல்நிலை பெற விரும்பாதவர்களும் மீண்டும் தமது வர்க்கத்துக்கு வந்து நீண்ட துயிலில் இருக்கும் தமது வர்க்க-சமூக் குழுமத்தின் தூக்க நிலையை கலைப்பார்கள் என எதிர்பார்ப்போம். கும்பகர்ணன் போர்க்களம் புகுவான் என நம்புவோம். எப்படியோ வர்க்க-சமூக குழுமங்களின் உறங்கு நிலை காரணத்தால் வர்க்க சமரச-சமூக குழுமங்களே சமுதாயத்தின் இயங்கு சமூக குழுமங்களாகவும், இலங்கை சமூகத்தை இயக்கும் சமூக குழுமங்களாகவும் இருந்து வருகின்றன. இதனால் தான் இன்றைய அறத்தின் வாழ்நிலை பற்றிய காரண காரியத் தேடலை வர்க்கச் சமரச-சமூக குழுமங்களின் செயற்பாடுகள், வர்க்க மேட்டுக்குடி சமூக குழுமங்களிலும் செயற்பாடுகள் ஆகிய இரு களங்களில் மாத்திரமே நடத்துகிறோம்.

வர்க்க சமரச-சமூக குழுமங்களுக்கிடையேயான உறவுகள் என்பது என்ன? குஜராத்தில் வாழும் ஒரு இந்துப் பெண்ணும், இஸ்லாமிய இளைஞனும் காதலித்தால் அதை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவு நிலை சீரடைந்து விட்டது என அர்த்தப்படுத்தலாமா? 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் மூதாட்டியை ஒரு சிங்கள இளைஞன் இன வெறியர்களிடமிருந்து காப்பாற்றி, பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து சேர்த்த நிகழ்ச்சியை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என அர்த்தப்படுத்தலாமா?
சிங்கள இராணுவத்திலிருந்து தமிழ் கிராமத்துக்கு தப்பியோடி வந்த (அது தமிழ் கிராமம் என்று தெரிந்தும்) ஒரு சிங்கள சிப்பாயை அக்கிராம மக்கள் புலிகளுக்கும் தெரியாமல், சிறிலங்கா அரசுக்கும் தெரியாமல், அச்சிப்பாயின் கிராமத்துக்கும் தெரியாமல், அச்சிப்பாயின் கிராமத்துக்கே கொண்டு போய் சேர்ப்பித்ததை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என்று அர்த்தப்படுத்தலாமா? அல்லது அக்கிராம மக்கள் சிங்களவனிடம் சரணடைந்துவிட்டார்கள் என அர்த்தப்படுத்தலாமா?
இஸ்லாமியர்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை உருவாகத் தொடங்கிய பிறகும், வன்னிப் பகுதி நாட்டார் வழமைக் கோவில்களை (அநேகமாக இவை மலையக மக்களின் கோவில்கள்) சைவ ஆகமக் கோவில்களாக மாற்றும் முயற்சி துரிதமடைந்து வருகிறது என்று தெரிந்த பிறகும், ஒரு மலையக முஸ்லீம் இளைஞன் தனது கிராமத்து முத்துமாரியம்மன் கோவில் தலைவராகப் பணிபுரிந்து அக்கோவிலை மலையக முறைப்படி சிறப்பாக நடத்தி வந்ததை முஸ்லீம்களுக்கும் சைவ ஆகமவாதிகளுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தப்படுத்தலாமா? சைவ ஆகம தலைமையிடமான புனித நிலமான வைத்தீஸ்வரா கல்லூரிக்கும், அதன் மிக அருகாமையில் இருந்த சிவன் கோவிலுக்கும், நிலம் போதாமை என்று பிரச்சனை இருந்தது. இதனால் ஆறுமுக நாவலரின் பேரன் வழியான ஒருவரின் தலைமையில்தான் வண்ணார் பண்ணை முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பது இனியும் ஒரு இரகசியமா என்ன?

யாழ்பாணத்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஒரு உச்சநிலையை அடைந்து பின்னர் தணிந்து வந்த வேளையில், அகமண முறையைப் பாதுகாப்பதற்காக பனையில் இருக்கும் போதே பனையைத் தறித்து வீழ்த்திக் கொலை செய்யப்பட்டார் ஒரு சீவல் தொழிலாளி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் கொதிப்படைந்திருந்த பஞ்சமர் இளைஞர்கள் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் உயர்சாதி இளம் பெண்கள் சிலர் இவர்கள் கைகளில் தனியாக மாட்டக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதை அவதானித்த வேறு சில பஞ்சம இளைஞர்கள் அப்பெண்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வை பஞ்சம இளைஞர்களில் ஒரு பகுதியினர் சமரசப் பாதையை மேற்கொண்டு விட்டார்கள் என்று அர்த்தப்படுத்தலாமா? இவை எல்லாம் அரசியல் விளம்பரங்களிற்காக நடந்த சம்பவங்களல்ல; அரசியல் உள்நோக்கம் எதுவும் இவற்றிற்கு இருக்கவில்லை; பலன் எதையும் எதிர்பார்க்காமல் நடந்து வரும் பல்லாயிரம் சம்பவங்களில் இவை மிகச் சிலவாகும். இவ்வித சம்பவங்களில் உயிர் நீத்தவர்கள் கூட உள்ளார்கள். பிறர் மேலான அன்பினதும் அருவ மனித நேயத்தினதும் விளைவுகளே இந்நிகழ்வுகளாகும். இவற்றை முன் சொன்ன முறையில் அர்த்தப்படுத்தலாமா? அவர்களின் அருவ மனித நேயப் பார்வையைக் கொச்சைப்படுத்தலாமா? இல்லை, இல்லை யென்பதே இக் கேள்விகளுக்கான பதிலாகும். அவ்விதமானால் இவற்றை எவ்விதம் அர்த்தப்படுத்துவது? இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வர்க்க சமரச-சமூகக் குழும உருவ- மனிதநேயிகளாக அல்லாமல் அருவ மனிதநேயிகளாக இருந்துள்ளார்கள் என்றே அர்த்தமாகும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இடதுசாரிகளாக இருந்திருந்தால் வர்க்க சமரச-சமூக குழும மனிதநேயிகளாக இல்லாமல் வர்க்க சமூக-சமூக குழும மனிதநேயிகளாக இருந்துள்ளார்கள்.

இன்னோர் வகையான எடுத்துக்காட்டை அவதானிப்போம். இளம் பெண் வைத்தியர் ஒருவர், தன் மீது பாலியல் வன்முறை செலுத்த முற்பட்ட ஒரு சிங்கள ஆணை அவ்விடத்தில் வைத்தே அவமானப்படுத்த முற்பட்டார். தான் அவமதிக்கப்படுதலைத் தவிர்ப்பதற்காக அவ் ஆண், “தமிழிச்சி சிங்களவர் மீது பாரபட்சம் காட்ட முற்படுகிறாள்” என்றோர் புரளியைக் கிளப்பிவிடுகிறான். சிங்களவர் அதை உண்மையென நம்புகிறார்கள். அம் மருத்துவர் அவ் ஊரைவிட்டே துரத்தப்பட வேண்டுமென்பது மக்கள் முடிவாகிறது. சிங்கள அதிகாரியும் அம்முடிவை ஏற்று அவளை இடமாற்றம் செய்கிறார். இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் பகைமை உறவை நிரந்தரமானது என்றும் சர்வ வியாபாகமானது என்றும் அர்த்தப்படுத்தலாமா? மனித நேயமற்ற ஒரு சிங்களவன் தனது இச்சைக்கு இணங்க மறுத்தவொரு பெண்ணை பழிவாங்கிக் கொண்டான். அவள் ஒரு றொடிய சாதிய சிங்களப் பெண்ணாகவும் அவன் ஒரு கொவிகம சாதியனாகவும் இருந்திருந்தால் அவளைத் துரத்தியடிக்க அவன் சாதிய மேலாண்மை உணர்வை பயன்படுத்தியிருப்பான். கிறிஸ்துவப் பெண்ணாகவும் சிங்கள பௌத்தனாகவும் இருந்திருந்தால் பௌத்த பேரகங்காரவாதம் பயன்பட்டிருக்கும். சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் இருந்திருந்தால் தமிழ் உணர்வு பயன்படுத்தப்பட்டிருக்கும். இங்குள்ள விவகாரம் அவள் ஒரு பெண், அவன் அருவ மனிதநேயமற்ற ஒரு காமுகன் என்பது தான். இங்கு வேறு எந்த விவகாரமும் இல்லை. ஒரு அருவ மனிதநேயியின் கண்களுக்கு (காமம் என்ற) இந்த விவகாரம் மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. ஆனால் ஒரு வர்க்க சமரச-உருவ மனிதநேயியின் கண்களுக்கு அவன் ஒரு காமுகன் என்பது மட்டும் தெரியாது. வேறென்னவோ எல்லாம் தெரியும்.  ஒரு வர்க்க-உருவ மனித நேயி கூட இந்த இடத்தில் தவறு இழைக்கக் கூடும். இவள் ஒரு உயர் அதிகாரியாக இருந்து அவன் ஒரு கீழ்நிலை ஊழியனாக இருந்தால் இவ்விவகாரம் கீழ்நிலை ஊழியன் பழிவாங்கப்படுகிறான் எனும் விவகாரமாயிருக்கும்.

முன் கூறிய எடுத்துக்காட்டுகளெல்லாம் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தனித்தனிச் சம்பவங்கள். மரங்களைக் கண்டு கொள்ளாமல் மரங்களின் கூட்டுத் தொகுப்பான காட்டை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் உள்ளவர்கள் தனித்தனிச் சம்பவங்களை நிராகரிக்கக் கூடும். அவர்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. காடு (முழுமை) சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எடுத்துக்காட்டாக கொண்டு ஆராய்வோம். 1971 இல் பல ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். மகாவலி கங்கையிலும், மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் இளைஞர்களின் பிரேதங்கள் தூக்கி எறியப்பட்டன. குறை உயிரும் குற்றுயிருமாக பலர் தெருக்களில் டயர் போட்டுக் கொளுத்தப்பட்டனர். கொல்வதிலும், கொல்லப்பட்டவர்களின் விபரங்களைப் பதிவதிலும் அவர்களைப் பற்றிய விபரங்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. 1989, 90 களிலும் இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்தது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், நாட்டை விட்டு ஓட நிர்பந்திக்கப் படுகிறார்கள். வெள்ளைவானின் தொல்லை தொடர் தொல்லையாக அதிகரித்து வருகின்றது. வர்க்க சமரச தமிழ் குழுமத்தினருக்கு இதுவெல்லாம் கண்களுக்குத் தெரிவதில்லை. சிறிலங்கா அரசு தம்முடன் மாத்திரம்தான் முரண்படுகிறது என்று கருதிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களையும் இவ்விதமே நம்ப வைக்க அதிக சிரமம் எடுத்து வருகிறார்கள். அதே போன்று வர்க்க சமரச சிங்களக் குழுமத்தினரின் ஒரு பகுதியினர் தமது அரசு தமக்கு எதிராக நடந்து கொள்வதைக் கண்டுக் கொள்ளவேயில்லை. அல்லது அதைப் பார தூரமாகக் கருதுவதில்லை. இன்னோர் பகுதியினர் சிறிலங்கா அரசின் கரங்கள் தம்மையும் அடக்குகிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவ் அரசு தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கும் வன்முறையை கண்டு கொள்வதில்லை. அது அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அதே போன்று தமிழீழ அரசு தமிழ் பேசும் மக்களுக்கும் பிற தமிழ் அரசியல் குழுமங்களுக்கும் எதிராக எடுத்து வந்த அடக்குமுறைகளைத் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். தமிழீழ அரசு சிறிலங்கா அரசுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளிலேயே தமது கவனம் முழுமையையும் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

வர்கக சமரச குழுமங்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் அவற்றில் பல தத்தமது மக்களிடையே பகை வாழ்தல் எனும் அறநெறியைக் கடைப்பிடிக்காதனவாகவே உள்ளன. ஆனால் சிங்களக் குழுமத்துக்கும் பிற இன, மத வழிக் குழுமங்களும் இடையேயான உறவு நிலையோ நல்லறமாக இல்லை. பதுக்கி அல்லது பறித்து வாழ்தலும், பகைபட வாழ்தலுமே பிரதான உறவு நிலையாக உள்ளது. ஆனால், பகைமையுள்ள குழுமங்களின் உறுப்பினர்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் வெவ்வேறு குழும தனிநபர்களுக்கிடையேயான உறவு நிலையில் பகிர்தலும் இசைபடவாழலுமான அறம் காணப்படவே செய்கிறது. அதாவது தனி நபர்களுக்கிடையேயான உறவில் நல்லறம் காணப்படவே செய்கின்றது. இந்தத் தனிநபர்கள் எண்ணிக்கையில் குறைந்த மிகச் சிறுபான்மையினரல்ல எண்ணிக்கையில் குறைந்தாலும் கணிசமாக தொகையினராகும். யாழ் மாவட்டம் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் பல் இனக் கலப்பு மாவட்டங்களே என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும். வெவ்வேறு சமூக குழும உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையும், குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையும், இரு வெவ்வேறு தளங்களில் இயங்கும் தனித்தன்மையுள்ள இரு வெவ்வேறு சமூக நிகழ்வுப் போக்குகளாகும். இவை இரண்டுக்கும் தனித்தனியான பொறிமுறை உண்டு. வெவ்வேறு சமூக குழுமங்களின் உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையை இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம். குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையை அரசியல் மைய சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம்.

இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள், சடங்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. பகிர்ந்து வாழ்தலும் இசைபட வாழ்தலுமே இங்கு பிரதான போக்காக இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணல், பகையை புறந்தள்ளி நல்லுறவை வளர்த்தல் ஆகியனவே இவர்களின் மந்திரமாக இருக்கும். பண்பாட்டுக் கலப்புகள் மிக எளிதாக நடைபெறும். பகிர்ந்து வாழல் , இசைபட வாழ்தல் அறம் இங்கு உயிரோட்டமானதாகக் செயற்படும். அதே நேரம் பறித்து பதுக்கி வாழும் பண்பாடும், பகைபட வாழும் அறமும், முற்றாக அற்றுப் போயிருக்கும் என்று கூற முடியாது. நல்லறத்துடன் கூடவே அந்நிகழ்வுப் போக்கும் காணப்படும். ஆனால் இத் தீயறத்துக்கு எதிரான போராட்டமும் அந்தந்த மக்களிடையே நடந்து கொண்டேயிருக்கும். இயல்பான உறவு நிலையைத் தீர்மானிப்பது அருவ மனித நேயம், வர்க்க உருவ மனிதநேயம், வர்க்க சமரச உருவ மனித நேயம் ஆகியனவேயாகும். சாதாரன வேளைகளில் வர்க்க சமரச உருவ மனித நேயம் அடித்தளத்தில் மறைந்திருக்கும். அது பிரதான போக்காக இருக்காது. ஆனால் இவ் எதிர்மறை மனித நேயம் மேலாண்மை பெறும் வேளைகளில் வெவ்வேறு குழும உறுப்பினர்களிடையேயான உறவு கெட்டுப் போகின்றது. பறித்து - பதுக்கி வாழலும், பகைபட வாழலும் எனும் வாழ்க்கை நெறி அறமாகின்றது. இவ்வித மேலோங்கல் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் இது வழமையான நிகழ்வல்ல. மக்கள் வர்க்க சமரச சமூக குழுமங்களின் மேட்டுக் குடிகளின் அரசியல் பண்பாட்டு செல்வாக்கிற்கு உள்ளாகும் போது தான் இவ்வித மேலோங்கல்கள் நடைபெறுகின்றன. மக்களுக்கும் மேட்டுக்குடிக்கும் இடையேயான அரசியல் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நல்லறமும் அதிகரிக்கும். அரசியல் தூரம் குறைய குறைய குறிப்பிட்ட தூரம் வரை நல்லறமும் குறையும். அதன் பின் நல்லறம் தீயறமாக மாறத் தொடங்கிவிடும்.

குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையென்பது என்ன? அதை எவ்விதம் வரையறுப்பது. இவ் உறவு ஐந்து வகைப்படும். எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம் . S,T எனும் இரு வர்க்க சமரச சமூகக் குழுமங்களை எடுத்துக் கொள்வோம்.

1. S இன் தலைமைக்கும் (மேட்டுக்குடிக்கும்) T இன் தலைமைக்கும் இடையேயான உறவு.
2. S இன் தலைமைக்கும் T யின் மக்களுக்கும் இடையேயான உறவு.
3. S இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
4. T இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
5. T இன் தலைமைக்கும் T இன் மக்களுக்கும் இடையேயான உறவு.

இந்த ஐந்து உறவுகளின் தொகுப்புத்தான் S.T ஆகிய இரு வர்க்கச் சமரச சமூகக் குழுமங்களுக்கிடையேயான உறவாக அமைகிறது. இரு சமூகக் குழுமங்களினதும் மேட்டுக் குடிகளுக்கு இடையேயான தொடர்பாகவே இது காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் இது இந்த ஐந்து உறவுகளின் தொகுப்பேயாகும். புலிகளின் இராணவ அணி தோற்கடிக்கப்பட்டதன் பின்னேயான இன்றைய சூழலில் இவ் ஐந்து வகை உறவுகளும் எவ்விதம் செயல்படுகிறது என்பதை நோக்குவோம்.

அ) மஹிந்த அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான உறவு நிலை.
புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள். தமிழரின் தலைமை அரசியல் அணியாக திகழ்ந்த புலிகளின் இடம் இன்னமும் எந்த அரசியல் தலைமையாலும் ஈடு செய்யப்படவில்லை. இதனால் மஹிந்த அரசுக்கு உள்ளுர் எதிராளி யாரும் இல்லை.

ஆ) மஹிந்த அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவு
இவ்வுறவு ஆளும் அணியின் நலனுக்கு ஏற்றபடி மிக நன்றாகவே அமைப்பு மயப்படுத்தப்பட்டு வருகின்றது. கீழ்ப்படிவும், பணிவும், சமரசமும் மிக்க அரசியல் தலைவர்களும் அரசியல் குழுக்களும் தாரளமாகவே உள்ளன. இவ் உறவு வளர்ந்தும் வருகிறது. இது இசைபட வாழ்தலல்ல, அடிமைப்பட வாழ்வதாகும்.

இ) மஹிந்த அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு.
யுத்தத்தின் முன்னர் இது மிக நெருக்கமானதாக இருந்தது. யுத்தத்தின் பின்னர் இந்நெருக்கம் மேலும் அதிகரித்தது. ஆனால் தற்போது இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவ வல்லமையைப் பிரயோகிக்கும் அவசியம் தோன்றியுள்ளது. இவ் இடைவெளியை அதிகரிப்பதற்கான காரணிகள் இடைவெளியைக் குறைப்பதற்கான காரணிகளை விட கெட்டியானதாகவும், வளர்திசை நோக்கியதாகவும் உள்ளன.

ஈ) புலிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு
தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான தொடர்பைப்பற்றி எந்தத் தமிழ் தேசியவாதியும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் கண்களுக்கு சிங்களவர்கள் எல்லோருமே பகைவர்கள்தான். தமது அமைப்பின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடிய சிங்கள தனிநபர்களைத் தேடி வருகிறார்கள். கண்டுபிடித்து விட்டால் அவர்களைத் தமது குழுவாதத்திற்குள் அமுக்கி சிங்கள மக்களிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். புலிகள் உட்பட அனைத்துத் தேசியவாதிகளும் இதையே காலங்காலமாக செய்து வருகிறார்கள்.

உ) புலிகளுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு
இது பூஜ்ஜியம் என்று சொல்லக் கூடியளவிற்கே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. தமிழரின் தலைமைக்கு வரக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படும் மாற்றாளர்கள் எவரிடமும் தமிழ் பேசும் மக்களுடனான உறவை வளர்ப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை.

இந்த ஐந்து உறவு நிலைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது சிங்களம் அரசியல்ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தமிழியத்தை விட பலமானதாகவே உள்ளது. ஆகவே சிங்களம் தமிழியம் உறவு எஜமான ஊழியன் உறவாகவே இன்று காணப்படுகிறது. சரணடைவும், தனிமைப்பாடும் விரக்தியுமே தமிழியத்தின் இன்றைய நிலையாக உள்ளது. இராணுவ ரீதியான வல்லமை ஒன்று தான் தமிழியத்தக்கு இருந்ததே தவிர புலிகளின் இராணுவத் தோல்விக்குப் முன்பும் பின்பும் தமிழியம் அரசியல்ரீதியாகப் பலவீனப்பட்டே இருந்துவருகிறது. தமிழியம் பலவீனப்பட்டுவிட்டது என்பதை சிங்களம் புரிந்து கொண்டுள்ளது. சுயமாக தம்மால் இனி எதுவும் செய்ய முடியாது என்பதை தமிழியம் புரிந்த கொண்டுள்ளது. ஆயினும், தமக்கிடையேயான பகைபட வாழும் போக்கை ஊக்குவிப்பதில் சிங்களத்தினதும்; தமிழியத்தினதும் வர்க்க மேட்டுக்குடியினர் மிக மும்முரமாகவே செயற்பட்டு வருகிறார்கள். அவர்களது வர்க்க மேல்நிலையாக்கத்திற்கு இவ்வித பகைமையுறவு அவசியப்படுகிறது. ஆகவே மஹிந்த அரசு இன்னோர் இனப் பேரழிவை ஏற்படுத்தாது என்றோ, இன்னோர் இனப் பேரழிவுக்கு தமிழியம் மீண்டும் காரணமாக இருக்கமாட்டாது என்றோ கூற முடியாது.

தமிழியம் அடிமை நிலையில் இருந்து மீள்வது எப்படி என்பது ஒரு அரசியல் பிரச்சினை. அவ் அரசியல் விவாதம் இக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இங்கு சொல்ல வருவது பெரும்பான்மையான தமிழ் குழுக்களிடமும் அரசியல் உணர்வுள்ளவர்களாக கருதப்படுபவர்களிடமும் காணப்படும் குப்பைத்தனமாக அரசியல் உறவு முறைகளுக்கான காரணம் அவர்களல்ல. அவர்களின் பாசறைகளேயாகும். தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்றின் கூட்டுருவாக்கமும் அவ் வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுமே குப்பைத்தனத்தைக் களைய உதவும். குப்பையில் விளைந்த மாணிக்கங்களை பட்டை தீட்டி மகுடம் சேர்க்க வழிவகுக்கும். அரசியல் அறிவியலார்கள் அரசியல் நிபுணத்துவம் மிக்கவர்கள் இதற்கு விடை காணட்டும். ஆனால் வெவ்வேறு வர்க்க சமரச சமூக குழுமங்களின் மக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் வேலைத் திட்டமல்ல. அது பண்பாட்டுக் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்களை உள்ளடக்கியதாகும். அதுதான் வெளிவர இருக்கின்ற இந்நூலின் விரிவான விவாதத்திற்குரிய பொருளாகும். ஆகவே அதைத் தொடர்வோம்.

[[ தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தினால் லண்டனில் மாதாந்தம் நடாத்தப்பெறும் உரையாடல் அரங்கில்  எஸ்.சிறீதரன் அவர்களால் வாசிக்கப்பட்டது.  ]]
நன்றி: http://shaseevanweblog.blogspot.co.uk/

தேசியமும் மதமும்—04 ஆசிரியர்-கைமண்

பகுதி 1 ‘தேசியமும்சைவமும் சில தகவல்கள்எனும் சென்ற ாதத தொடரின் சுருக்கம்:
தமிழ்த் தேசியம் மதச்சார்பின்மைக் குணாம்சங் கொண்டது என்ற கருத்து உண்மையல்ல. தமிழ்த் தேசியம் தனக்கு எதிரான தேசியத்துடனான வினையாற்றலுக்காக (பதில் வினை) கடைப்பிடித்து வரும் ஒரு அரசியல் தந்திரோபாயமே மதச்சார்பின்மையெனும் அரசியல் நிலைப்பாடாகும். மதச்சார்பின்மையா, மதச்சார்புபெற்றதா என்பது ஒரு தேசியத்தின் பிரதான ஜனநாயகக் குணவியல்புகளில் ஒன்றாகும். இக்குணவியல்பைத் தீர்மானிப்பது அத்தேசியத்தின் முதல்வினைச் செயல்பாடுகளேயாகும். தமிழ்த் தேசியத்தின் இதுவரையான முதல்வினைச் செயற்பாடுகளை நோக்கும்போது தமிழ்த் தேசியத்தின் தலைமைக் குணவியல்பு யாழ்- சைவ- வேளாள இயலாகவே இருந்து வருகின்றது. இது சைவ சித்தாந்தத்துடன் நெருங்கிய பிணைப்புக் கொண்டதாகும். இதனால், தமிழ்த் தேசியம் சாதிய ஒடுக்குமுறைக் குணாம்சத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இதுதான் சென்ற மாதப் பகுதியின் மையக் கருத்தாக இருந்தது.

சென்ற மாதக் கட்டுரை தனது மையக் கருத்தை எடுத்தியம்புவதற்காக இரு உப-மையக் கருத்துகளையும், தேசியம் தொடர்பான ஒரு கோட்பாட்டையும்  மதம் தொடர்பான இரு சமூக நிகழ்வுப் போக்குகளையும் எடுத்தாண்டிருந்தது.
மதச்சார்பின்மை எனும் பதம் அக்கோட்பாட்டின் பொருளை வெளிக்கொணரவில்லை என்பதுவும், சைவ சித்தாந்தம் நிலப்பிரபுத்துவத்தின் சித்தாந்தமாகவே தோன்றி அதிகாரத்துவத்திற்கும் சேவை செய்தது என்பதுவுந்தான் இவ் இரு உப-மையக் கருத்துக்களாகும்.

பிரித்தானிய காலனியல் காலத்தில் இருந்து இன்று வரை யாழ் – மையவாத சைவ வேளாளத் தேசியம் கிறிஸ்துவத்துடன் ஒரு நட்பைப் பேணி வருகிறது என்பதுவும், சைவம், வன்முறையுடன் நெருங்கிப் பிணைந்திருந்தது என்பதுவுமே சென்ற தடவை எடுத்தாளப்பட்ட இரு சமூக நிகழ்வுப் போக்குகளாகும். பின்னைய நிகழ்வுப் போக்கு போகிற போக்கில் வெறுமனே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது . விவரங்கள் போதியளவு தரப்படவில்லை. காரண-காரியத் தொடர்புகளுடன் அந்நிகழ்வுப் போக்கு ஆராயப்படவுமில்லை. காரணத்துடனேயே இது தவிர்க்கப்பட்டது. கட்டுரையின் மையக் கருத்தை அடைவதற்கும் இந்நிகழ்வுப் போக்குக்கும் எதுவிதத் தொடர்புமில்லாததே இதற்கான காரணமாகும். ஆனால் தமிழ்த் தேசியத்தின் குழுவாத வன்முறைக்கும் சைவத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அது மிக நெருங்கிய தொடர்பாகும். இது பற்றிய விவரத்துள் பின்னர் செல்லவுள்ளோம் என்பதைக் கட்டியங்கூறவே இவ்நிகழ்வுப் போக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தேசியத்தின் குணவியல்புகளைத் தீர்மானிப்பது சுயவிருப்புடன் எந்த நிர்ப்பந்தமும் இன்றி, தேசியத்திற்கு உரித்தான மக்களுக்குள்ளே (அகத்தே) நடைபெறும் முதல் வினைகளேயாகும். புறநிலை நிர்ப்பந்தத்தின் காரணத்தால் புறத்தே நடைபெறும் பதில் வினைகளல்ல. இதுவே தேசியம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோட்பாடாகும்.

தேசியமும் – சைவமும் எனும் முதலாவது அத்தியாயத்தின் முதல் பாகமான ‘தேசியமும் – சைவமும் சில குறிப்புகள்’ எனும் தலைப்பின்கீழ் வரும் மையக்கருத்து ஏற்கனவே பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபற்றித் தொடர்ந்தும் விவரிப்பது நிறுத்திக் கொள்ளப்படுகிறது.

ஆனால், அம்மையக் கருத்தை வந்தடைவதற்கு துணைபுரிந்த ‘முதல் வினை, பதில் வினைக் கோட்பாடு’ இனிவரும் இப்பகுதியில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

அடுத்ததாக துணை மையக் கருத்தான செக்குலரிசம் பற்றிய விளக்கம் போதாது என்பது தெரிகிறது. அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள விளக்கம் பரவலாக பலராலும் மறுக்கப்படும் என்பதால் செக்குலரிசம் பற்றி முன்வைக்கப்பட்ட விளக்கத்தை நியாயப்படுத்த மேலதிக விவாதங்கள் தேவை என்பதுவும் புரிகிறது. ஆனால் ஒவ்வொரு தேசியத்திற்கும் அத் தேசியத்திற்குரிய மதத்திற்கும் இடையேயான பரஸ்பர உறவு நிலையைப்பற்றிக் கூறும்போது செக்குலரிசம் ஒரு துனைமையக் கருத்தாக தொடர்ந்தும் வரவே செய்யும், இறுதியில் செக்குலரிசத்தை மையப் பகுதியாகக்கொண்ட தனியான அத்தியாயம் ஒன்று முன்வைக்கப்படும். இதுதான் அனேகமாக இறுதி அத்தியாயமாக அல்லது முடிவுரையாக அமையலாம். இக் கட்டுரைக்கான மகுடமும் அதுவாகத்தான் இருக்கும் ஏனெனில் இலங்கைத் தீவின் மக்கள் எதிர்பாக்கும் பல்தேச அரசின் அல்லது பல தேசிய அரசுகளின் ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு விதியில் (constitution) செக்குலரிசம் பிரதான இடம் வகிக்கும் என்பது நிச்சயமானது ஆகவே செக்குலரிசம் பற்றிய தனியானபகுதி இங்கு தவிர்க்கப்படுகிறது. இரண்டாவது துணை மையப்பகுதியான சைவ சித்தாந்தத்தின் வர்க்கச்சார்பு பற்றிக் கூறியது போதும் எனக் கருதுகிறோம். இது ஒரு வரலாற்று ஆய்வுக்கட்டுரையல்ல. அகத்தை நெறிப்படுத்துவதற்கான அரசியல் வழிகாட்டுக் கட்டுரையேயாகும். ஆகவே சுருங்க வேண்டிய இடங்களில் சுருங்கிக் கொள்வோம்.

ஆனால் காலனியல் காலத்தின் போதும், காலனிக்கு உடன் பிந்திய காலத்திலும் சைவசித்தாந்தமானது, எந்த வர்க்கத்தின் தோழனாக இருந்தது என்பது பற்றிய புரிதல் அவசியமானது. அப்போதுதான் எம்மால் தமிழ்த் தேசியத்தைப் முறையாகப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே இவ்விவகாரத்தை சைவமும் தேசவழமையும் எனும் உப தலைப்பின் கீழ் இதே அத்தியாயத்தில் விவரிப்போம்.

அடுத்ததாக சைவத்தின், வர்க்கச் சார்பு பற்றிய துணைமைய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சைவமும் வன்முறையும் பற்றிய சமூக நிகழ்வுப் போக்கை சற்று விரிவாகவே நோக்குவோம். தமிழ் அரசியலர்கள் அனைவரும் (தீவிரவாதிகள், சமரசவாதிகள், மிதவாதிகள்) வன்முறையாளர்களாக இருப்பதன் காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டாமா?

இவ்விவரங்களின்படி நோக்கில் ‘தேசியமும் – சைவமும்’ எனும் முதலாவது அத்தியாயம் ஆறு பகுதிகளாகப் பிரிகின்றது. அவையாவன:

  1. தேசியமும் – சைவமும் சில தகவல்கள் – (முடிந்து விட்டது) 
  2. தேசிய உருவாக்கத்தில் முதல்வினையும் பதில் வினையும் (இவ்விதழில் வெளிவருகிறது) 
  3. தமிழ்த் தேசியத்தில் சைவமும் கிறிஸ்துவமும் – உறவும் பகையும் 
  4. சைவமும் – வன்முறையும் 
  5. தேசவழமையும் சைவமும் 
  6. தமிழ்த் தேசியத்தின் குணாம்சம் – தொகுப்புரை

அத்தியாயம் 1-  பகுதி 1 தேசிய உருவாக்கத்தில் முதல் வினையும் பதில் வினையும்
 —————————————————————————————————————————————-
பகுதி 2.-(II) பெற்றுக்கொள்வோம் ! துடைப்பத்தை

‘தேசியமும் – மதமும்’ எனும் கட்டுரையின் முதலாவது அத்தியாயமாக தேசியமும் – சைவமும் அமைந்தது ஏன்? தேசியமும் – சைவமும் எனும் அத்தியாயத்தை இவ்வளவு விரிவாக ஆராய வேண்டியது ஏன்? பௌத்தத்தை விட்டு சைவத்தை விமர்சிப்பதா? மூடி மறைக்க வேண்டிய எமது குப்பை கூளங்களை நாமே கிளறிக் காட்டுவதா? இது பௌத்த வன்முறையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியா? இவை தமிழ் தேசியர்களிடம் இருந்து வரும் இயல்பான, மரபு வழிக் கேள்விகளாகும். கேள்விகள் என்ற தோரணையில் வரும் கண்டனங்கள் என்றும் கூறலாம். கேள்விகளாக ஏற்றுக் கொண்டு மீண்டும் பதிலளிப்போம்.

இக் கட்டுரை எதிரிக்கு எதிராகப் போராடுவதற்கானதோர் கருத்தியல் ஆயுதமல்ல, எதிரியை அம்பலப்படுத்தும் ஒரு பிரச்சாரப் பீரங்கியுமல்ல. மாறாக, இது தமிழர்களாகிய நாம் நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு துடைப்பமேயாகும் அல்லது பல்துலக்கும் தூரிகையாகும். பின்னையதே பொருத்தமான உவமானம். பல் தூரிகையைக் கையில் எடுப்பது பிறரின் பற்களைத் துலக்கவல்ல. எமது பற்களைத் துலக்கவே. இது ஒரு தமிழ்த் தூரிகை, ஆகவே தமிழர்களின் பற்களுக்கிடையே உள்ள மாசுகளை அகற்றுவதுதான் இத்தூரிகையின் கடமையாகும். சிங்களவரின் பற்களுக்கிடையே உள்ள மஹாவம்சம் என்னும் மாசை அகற்றுவது இக்கட்டுரையின் கடமையல்ல. இக்கட்டுரை ஏதோ ஒரு காரணத்துக்காக சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்டால், அவ்விதம் செய்யப்பட்டதன் நோக்கம், தமிழ் மக்கள் தங்கள் பற்களைத் துப்புரவு செய்ய பயன்படுத்தும் துரிகைகளையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் சிங்கள மக்களின் பார்வைக்கு முன்வைப்பதாக அமையுமே தவிர, சிங்கள மக்களுக்குத் தேவையான தூரிகையாக இதைக் கொள்ளலாமா, எனக் கேட்பதாக அமையாது. மஹாவம்சத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களிடையே நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. மஹாவம்சம் தமிழ் மக்களின் புற எதிரி, சைவம் தமிழ் மக்களின் அக எதிரி. தமிழ் மக்களின் அக அசுத்தங்கள் நீக்கப்பட்டு அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அது முதல் வினைகளில் ஒன்றாகும். ஆகவேதான், சைவம் பற்றிய விரிவான பார்வை அவசியப்படுகிறது. தமிழ் மக்கள் நின்று, நிதானித்து தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு முன் செல்ல வேண்டும் என்பதே வரலாற்றின் கட்டளையாக உள்ளது. முதல்வினையாற்றுவதற்கான எந்த கால அவகாசத்தையும் மக்களுக்கு வழங்காமல், இன உணர்ச்சிகளை தொடர்ந்து தூண்டி விட்டு பதில்வினைச் செயல்களிலேயே தொடர்ந்தும் மக்களை வைத்திருக்கும் போக்கு முடிவுக்கு வரவேண்டும். உணர்ச்சி மேலீட்டால் அல்ல உணர்வு பூர்வமாக மக்கள் செயலாற்ற வேண்டும்.

ஏனெனில் , சிங்களப் பேரின வாதத்திற்கும், தமிழ் தேசியவாதத்திற்கும் இடையேயான கடந்த 70 வருட காலப் போராட்டத்தில் தமிழ்த் தேசியமும் தமிழ் பேசும் மக்களும் தொடர்ச்சியான தோல்விகளையே சந்தித்து வருகிறார்கள். இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய வேண்டும். தமது கண்ணோட்டங்களிலும் தமக்கிடையேயான உறவுகளிலும் அவர்கள் பாரிய மாற்றங்கள் செய்ய வேண்டும். அதாவது முதல்வினைக் களத்திலும் அவர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அவ் ஆற்றலை வெளிக் கொணரத் தடையாக இருக்கும், நிலவும் கழிவுப் பொருட்களை அகற்றுவதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும் ஆகவே தான் சைவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுபடுகிறது.

பகுதி 2-2 வெற்றி, தோல்வி இரு மாறுபட்ட கண்ணோட்டங்கள் !

தனித்தனிச் சம்பவங்களாக எடுத்து நோக்கினால் ‘தோல்விகள் தொடர்கின்றன’ என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ‘ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தமிழ்த் தேசியம் வளர்ச்சி பெற்றே வருகிறது’ என்பதே பெருமளவிலான தமிழ்த் தேசியர்களின் கருத்தாக உள்ளது. சிலர் அவை `தோல்விகளேயல்ல, பின்னடைவுகள் மாத்திரமே’ என்கின்றனர். ஒவ்வொரு தோல்வியும் அல்லது பின்னடைவும் தமிழ் மக்களுக்கு பெரும் துன்பங்களைக் கொடுத்து வருகிறது, என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் இவ் அழிவுகளை ஈடு செய்யவோ அல்லது துன்பங்களைப் போக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அது சிங்கள அரசின் பொறுப்பு எனத் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் பதில்வினையாற்றுவதற்கான மூலப் பொருட்களாக இவ் அழிவுகள் பயன்படுத்தப்படுகின்றவே தவிர அழிவு நிவர்த்திகளையிட்டு எந்த முதல்வினையாற்றலும் இன்று வரை நடைபெறவில்லை. அழிந்து போனவர்களில், சேதம் அடைந்து போனவர்களில் பெரும் எண்ணிக்கையினர் இன்னமும் அழிந்த நிலையிலும் சேதமடைந்த நிலையிலும் உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். மக்களின் இந்நிலை மக்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நிரந்தர தியாகங்களாக அர்த்தப்படுத்தப்படுகின்றன. ‘இவ்வித தியாகங்கள் இன்றி தமிழ்த் தேசியம் வளர முடியாது’ என்றும் வாதிடப்படுகிறது. ‘தேசத்திற்காக மக்கள் வேள்வித் தீயில் கருக்கப்படுவதில் என்ன தப்பு?’ என்றும் கேட்கப்படுகிறது. ‘சும்மா இருந்தால் சுதந்திரம் வராது’ என்பது அடுத்த அறிவுரை. மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலையையும், தேசத்தின் அரசியல் அந்தஸ்து நிலையையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வெவ்வேறு சமூக நிகழ்வுகளாகக் கருதுவது தான் தேசியர்களின் இவ்வித பார்வைகளுக்கான காரணமா? முன்னையது தேசத்தின் அகநிலை தொடர்பானது, பின்னையது புறநிலை தொடர்பானது. இவை இரண்டிற்கும் (அகத்திற்கும், புறத்திற்கும்) இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்வதில் தமிழ்த்தேசியர்கள் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கருதலாமா? இல்லை, இது அறிவில் உள்ள குறைபாடல்ல, அரசியல் பார்வையில் உள்ள குறைபாடேயாகும். தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியை அளவிடும் அளவுகோல் எது என்பதே இங்குள்ள பிரச்சினை. மனக்கிளர்ச்சிகளையும் (sentimental feelings) இன உணர்ச்சிகளையும் (racial feelings) மையமாகக் கொண்ட பற்பல அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டாலும், அத் தேசத்தின் இறையாண்மை உரிமையின் அளவும், அத்தேச மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலையின் அளவுந்தான் ஒரு தேசியத்தின் வளர்நிலையை அளவிடுவதற்கான அளவுகோல்களாகும். இறையாண்மை, புறநிலை தொடர்பானது. அது பதில் வினைகள் மூலம் எதிர்கொள்ளப்படுவது. மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலையோ, அகநிலை தொடர்பானது. இது முதல்வினை மூலம் எதிர்க்கொள்ளப்படவேண்டியதாகும்.

தமிழ் தேசத்தின் இறையாண்மை உரிமையின் மட்டம் என்னவாக உள்ளது. அதிகாரப் பரவலாக்கல் முழுமையாகவே நிராகரிக்கப்பட்டுவிட்டது. தனித்துவம் பற்றி எவரும் முணுமுணுக்கக் கூடாத முறையில் அனைவரின் வாய்களும் பூட்டுப் போடப்பட்டுவிட்டது. பராம்பரிய தமிழ் பிரதேசத்தின் நிலவளமும், நீர்வளமும் எந்தத் தடங்கலும் இன்றி அபகரிக்கப்பட்டு வருகின்றன. பௌத்த-சிங்கள மயமாக்கல் மிக இலகுவாகவும் மிக வெளிப்படையாகவும் நடைபெற்று வருகின்றன. தமிழ் தேசத்தின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்கு கடமைப்பட்ட இறையாண்மை மிக்க அரசியல் அமைப்புகள் அனைத்துமே தமது இறையாண்மையை இழந்து நிற்கின்றன. சிற்சில அரசுகளில் தங்கி நிற்கும் இறையாண்மை இல்லா அரசியல் அமைப்புகளே பரந்து காணப்படுகின்றன. அவர்களே வணங்கா முடியர்களாகப் பவனி வருகிறார்கள். இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் வளர்ந்துவிட்டதற்கான அடையாளங்களா? இல்லை. 2009 முள்ளிவாய்கால் தோல்விக்குப் பின் தமிழ்த் தேசியம் வீழ்ந்துள்ளது. அது தனது இறையாண்மையை முற்றாக இழந்து காணப்படுகிறது. தனது பதில் வினையாற்றலை தான் விரும்பியபடி பிரயோகிக்க முடியாமல் முடங்கிப் போய் உள்ளது. பிற அரசுகளின் தாளத்துக்கு ஒப்ப தனது பதில் வினையாற்றலை செயற்படுத்தும் அளவுக்குப் பலவீனப்பட்டுள்ளது.

இனி, முதல் வினைக் களத்திற்குச் செல்வோம். மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலையின் மட்டம் என்னவாக உள்ளது? இங்கு வெவ்வேறுபட்ட இருவித மட்ட (level) நிகழ்வுப் போக்குகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இவ்விவகாரத்தைவிட்டு இரு வெவ்வேறுப்பட்ட அரசியல் பார்வைகள் நிலவுகின்றன. இப்பார்வைகள் தம்மைத் தோற்றுவித்த நிகழ்வுப் போக்குகள் போன்று வெறுமனே வெவ்வேறுபட்டவைகளல்ல, ஒன்றை ஒன்று மூர்க்கமாக நிராகரிக்கும் பகைமைத் தன்மை பெற்றவைகளாகும். இவ்வெவ்வேறு நிகழ்வுப் போக்குகள் தமிழ் தேசியத்தை இரு சமூக பொருளாதாரக் கூறுகளாகப் பிரித்துள்ளன. முதலாவது கூறு, ஆரம்பத்தில், மணி ஒடர் பொருளாதாரத்தில் தங்கி நிற்பவர்களை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் படிப்படியாக புலம் பெயர்ந்தோர்களையும், புலம் பெயர்ந்தோரில் தங்கி வாழ்பவர்களையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது.

இரண்டாவது கூறு, தமிழ்ப் பாரம்பரிய பிரதேசங்களில் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளில் தங்கி நிற்போர்களை உள்ளடக்கியதாகும். மிகச் சாதாரண மொழியில் சொல்வதானால் இவ்விரு கூறுகளையும் அந்நிய நாடுகளில் தொழில் புரிவோர், உள் நாட்டில் தொழில் புரிவோர் எனக் கூறலாம். பிரித்தானிய காலனியல் காலத்தில் இருந்தே இவ்விரு பிரிவுகளும் வெவ்வேறுபட்ட இரு அரசியல் பிரிவுகளாக வளரும் போக்கு ஆரம்பித்து விட்டது. இவ் இருபிரிவினருக்கும் இடையேயான அரசியல் முரண்பாடு அவ்வப்போ பெரும் அரசியல் போராட்டங்களாக நடைபெற்று வந்துள்ளன. ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் கூறி இன்றைய நிலைக்கு வருவோம். சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு மிளகாய் மாலை அணிவித்து கோலாகல வரவேற்புக் கொடுத்தார்கள், யாழ் மாவட்ட உள்ளுர் தொழில் புரிவோர். அதே காலப்பகுதியில் அதே சிறிமாவோ அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக யு.என்.பியுடன் இணைந்து பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும், சிறிலங்கா இராணுவத்துள்ளும் வினை புரிந்தார்கள் மணி ஒடர் பொருளாதார அணியினரின் அரசியல் தலைவர்கள்.

அந்நிய நாடுகளில் தொழில் புரிவோர்க்கும், உள்நாட்டில் தொழில் புரிவோர்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு தமிழ்த் தேசியத்தின் அக முரண்பாடாகும். உயர் சாதிய நில உடமையாளர்கள், சைவத்துவவாதிகள், காலனியல் தரகர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகிய அனைவரும் அந்நிய நாடுகளில் தொழில் புரிவோருடன் இணைந்திருந்தனர். இது ஒரு அரசியல் முன்னணி. இதுதான் மணி ஒடர் பொருளாதர முன்னணியாகும். இவர்கள் தவிர்ந்த பிறர் வேறோர் பக்கம், அவர்கள் உள்நாட்டில் தொழில் புரிவோரின் முன்னணியாகும். இவ் இருசாராரும் இடையேயான வினைகள் தான் தமிழ் தேசியத்தின் தொடர்ச்சியான முதல் வினையாகும்.

இன்று இப் பிரிவுகள் இரண்டும் புலம் பெயர்ந்தோர் பிரிவு என்றும், தாயகத்தில் தொழில் புரிவோர் பிரிவு என்றும் உருவெடுத்துள்ளது. முதல் வினை தொடர்கிறது. இதன் அர்த்தம் புலம் பெயர்ந்தோரின் ஆக்கக் கூறுகளும், மணி ஓடர் பொருளாதார முன்னணியின் ஆக்கக் கூறுகளும் ஒன்று என்பதல்ல. மூலக்கூறுகள் வர்க்கக் குணம்ச மாற்றமும் பெற்றுள்ளன. ஆனால் உள்நாட்டில் தொழில் புரிவோரின் முன்னணியின் மூலக்கூறுகளும், தாயகத்தில் தொழில் புரிவோரின் ஆக்கக் கூறுகள் பெருமளவு மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. முன்னர் மணி ஒடர் பொருளாதார அணி வடமாகாணத்திற்குள் மட்டும் செயல்பட்டது ஆனால் புலம்பெயர்ந்தோர் அணி, இலங்கை முழுமைக்கும் பரந்துள்ளது. அது மட்டும் அல்ல புலம் பெயர்ந்தோர் அணி, தமிழ் பேசும் மக்களின் கீழ் மட்டத்தில் கணிசமான தொகையினரையும் தற்போது உள்ளடக்கியுள்ளது அதாவது புலம்பெயர்ந்தோரின் வர்க்கச் சேர்க்கை மணியோடர் முன்னணியினதையும் விட குணாம்சரீதியாக வேறுபட்டது.

இருந்தும் சமூகப் பொருளாதார அந்தஸ்திலும் சமூக பண்பாட்டுக் கூறுகளிலும் அரசிய-பொருளாதார நோக்கிலும் புலம்பெயர்ந்தோர் அணியும் தாயகத்தில் தொழில் புரிவோர் அணியும் முற்றிலும் வெவ்வேறான குணாம்சம் கொன்டவர்களாக மாறி உள்ளார்கள். தாயகத்துத் தமிழர்கள் ஒரு முழுமையான தனி அலகாக (unit) உள்ளனர். இவ் அலகே தேசியம் என அழைக்கப்படுகிறது. ஆனால் புலம் பெயர்ந்தோர் இவ்விதமான ஒரு தனி அலகாக இல்லை. அவ்விதம் இல்லாதிருப்பதற்கான சமூகப் பொருளாதாரக் கூறுகளை நோக்கி அவர்கள் வேகமாக நகர்ந்து வருகிறார்கள் இவர்களுக்கென்று பொதுப் பிரச்சனைகள் உண்டு ஆனால் அப்பிரச்சனைகள் அவர்களைத் தனி அலகாக இணைக்கும் வல்லமையற்றவை. புலம் பெயர்ந்தோர் தத்தமது நாடுகளில் தாம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வதற்காக தமிழீழத் தேசியர் என்றோர் அரசியல் அடையாளத்துடன் தம்மை ஒரு அரசியல் அணியாக ஆக்கிக் கொள்வது அவசியமானதாக உள்ளது. இம் முயற்சியில் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்றும் வருகிறார்கள். ஆனாலும் புலம் பெயர்ந்தோர் அனைவரும் தனியொரு அரசியல் அணியாக அணிதிரள்வது என்றுமே சாத்தியமில்லை. அவர்களின் சமூக பொருளாதார நிலைமை அதை அனுமதிக்காது. பல டசின் (dozen) அரசியல் குழுமங்களாக அணிதிரளலாம். இக்குழுக்கள் சில பத்து முன்னணிகளாக மாறலாம். ஏனெனில் அவர்களின் அரசியல் நோக்கம் மிகவும் குறுகிய பரப்பளவிலானது. “தமிழீழத் தேசியம்” அவர்களுக்கு ஊறுகாய் போன்றது. ஊறுகாய் இல்லாமலும் அவர்களால் உணவு உண்ணமுடியும். சுவைகள் மாறுபடும் (tastes differ). அவ்வளவே. ஊறுகாய்கள் எவ்விதம் சுவை பல ஆயிரம் வகைப்படுமோ புலம் பெயர்ந்தோரின் அரசியல் அணிகளும் அவ்விதமே பல வகைப்படும். அவர்களில் பெரும்பான்மையோர் தமது அவலங்களுக்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிட்டார்கள். தமிழீழத்தில் நடந்த, நடக்கின்ற, நடக்கப்போகின்ற எந்த அவலங்களும் அவர்களின் வாழ்கையின் நிச்சயத் தன்மையை எந்த வழியிலும் பாதிக்காது சிலவேளைகளில் அவை இவர்களுக்கு உதவக் கூடும். இவர்கள் வாழும் நாடுகளின் இறைமைக்கு எந்த ஆபத்தும் இல்லை அது பாதுகாப்பாகவே உள்ளது. இவர்களின் இறைமையும் பாதுகாப்பானதாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழ் தேசியம் வளர்ந்துதான் உள்ளது என்ற இவர்களின் கூற்றுக்கான காரணம் இவர்கள் வளர்ந்து வருவதுதான்.

தமிழ் பேசும் மக்களின் அவலங்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதற்கான காரணமும் இதுதான். அந்த அவலங்கள் அனைத்தும் தியாகங்களாக இவர்களின் கண்களுக்குத் தென்படுவதற்கான காரணமும் இதுதான். புலம் பெயர்ந்தோரின் வாழ் நிலை மட்டத்தையும் அவர்களினதும், அவர்கள் வாழும் நாடுகளினதும் இறைமையின் மட்டத்தையும் அளவு கோல்களாகக் கொண்டு நோக்கில் தமிழ்த் தேசியம் வளர்ந்துதான் வருகின்றது என்பதுவும் உண்மை, எந்த மறுப்பும் இல்லை. ஆனால் தாயக நிலமையைக் கொண்டுதான் இவ் வளர்ச்சி மதிப்பிடப்படவேண்டும் அதுதான் உண்மையான மதிப்பீடாக அமையும். இதன்படி, தமிழ் பேசும் மக்கள் தம்மால் தனித்து நின்று எதிர்கொள்ள முடியாதளவிற்கான அவலங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகும். அதேபோல் தமிழ்த் தேசியம் இதுவரை இல்லாதளவிற்கு தனது இறைமை பறிக்கப்பட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளது தனது இறைமையைப் பாதுகாக்கவும் மீட்கவும் தானே முன்னின்று போராடும் வலுவை இழந்து அன்னிய நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைக்கு தாழ்ந்துள்ளது என்பதே உண்மை .

பாகம் 2-(III) சேணங்கட்டிய குதிரைகள் (தமிழ் மக்கள்)

இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இத்தவறை, அரசியல் பார்வையில் உள்ள குறைபாடாகவே முன்னர் குறிப்பிட்டிருந்தோம். தமிழ்த் தேசியர்களின் சாமனியர்களைப் பொறுத்தவரை இது உண்மை இது அவர்களின் இயல்பான தவறாகும். ஆனால் தமிழ்த் தேசியத்தின் வலது சாரிப் பிரிவினரைப் பொறுத்த வரையில் இது ஒரு திட்டமிட்ட அரசியல் சதியாகும். தமது தேர்களை (இயக்கங்களை) இழுக்கும் சேணம் கட்டிய குதிரைகளாகவே இவர்கள் மக்களைக் கருதுகிறார்கள். தேரோட்டி காட்டும் திசையைத் தவிர வேறு எத்திசை நோக்கியும் குதிரைகள் தமது பார்வையைத் திருப்பக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாகும். இவர்கள் என்பது தமிழ்த் தேசியத்தின் வலதுசாரி அணியினரையே ஆகும். தேரோட்டியையும் (தலைவர்) தாமே நியமனம் செய்து கொள்வார்கள். இதுதான் 80-கள் வரையான நடைமுறையாக இருந்து வந்தது. 70களில் தமிழ் இளைஞர்கள் இந் நடைமுறையை மாற்ற விரும்பினார்கள். புதிய அத்தியாயத்தை எழுத முன்வந்தார்கள். நடந்தவை பற்றியும் நடக்கப்போபவை பற்றியுமான விவாதங்கள் பட்டிதொட்டி எங்கணும் நடைபெற்றன. மாக்ஸியத்தை நோக்கியும் இளைஞர்களின் கவனம் திரும்பியது. சிந்தனைக் களத்தில் இதைத் தமிழ்த் தேசியத்தின் பொற்காலம் எனக் கருதலாம்.

இவ் விவாதங்கள் இருவகையாக நடைபெற்றன. ஒன்று, தேரோட்டியை மையங்கொண்டிருந்தது. தேரோட்டிகளின் தவறுதான் பிரதானமானது, தேரோட்டி மாற்றப்பட வேண்டும், என்பதே இவ்வணியினரின் குறிக்கோளாக இருந்தது. அதாவது வரலாற்றின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் வரலாற்றின் சரியான திசைவழிக்கும் தவறான திசைவழிக்குமான காரணம் தனிநபர்களே என்பதே இவர்களின் கருத்தாக இருந்தது. மேலும் சொல்வதானால் வரலாற்றின் திசைவழி, சமூக நிகழ்வுப் போக்குகள், தனிநபர்கள் ஆகிய முத்தரப்புக்கும் இடையே உள்ள உறவில் தனிநபர்களையே கருவாக, மைய விசையாகக் கருதினர். சமூக நிகழ்வுப் போக்கை முற்றாகவே நிராகரித்தனர். அது சக்தி மிக்க தனிநபர்களின் எடுப்பார் கைப்பிள்ளை எனக்கருதினர். இதனால் கோழைத்தனமும், பகட்டுத்தனமும் மிக்க முன்னாள் தேசியத் தலைவர்களுக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட்டது. தனிநபர் அரசியல் எதிரிகளை இல்லாதொழிப்பதற்கான அரசியல் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஆளுமையும், துணிச்சலும், உயர்ந்த தனிநபர் பண்புகளும் கொண்ட தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்குவதில் துரிதமாகவும் இதய சுத்தியுடனும் செயற்பட்டனர். இதில் வியக்கத்தக்க மக்களின் பாராட்டுக்குரிய பல வெற்றிகளும் பெற்றனர். ஆனால் குதிரையின் சேணம் அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி இவ்வணியினர் சிந்திக்கவேயில்லை.

அடுத்த அணியினர், யாரோ ஒருவரின் தேரை (வரலாற்றை) இழுப்பவர்களாக மக்கள் இருக்கக் கூடாது. மக்கள் தமக்கான தேரை (வரலாற்றை) தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக் கருதுபவர்களாக இருந்தனர். இதுவரை இருந்து வந்த முறையில் தீவிர மாற்றத்தை உருவாக்க முயன்றனர். கோட்பாட்டு மொழியில் சொல்வதனால் இவர்கள் சமூக நிகழ்வின் (ஒருமையின்) முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் இவர்களின் தவறு இவர்கள் மொத்த சமூக நிகழ்வுகளின் (பன்மையின்) முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை. சமூகத்தின் இயங்கு நிலை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சமூக நிகழ்வுப் போக்குகளின் கூட்டுத் தொகுப்பினது கூட்டான இயங்கு நிலையாகும். சமூகத்தில் வினை புரிய வேண்டுமானால் அதன் அனைத்து நிகழ்வுப் போக்குகளிலும் வினைபுரிய வேண்டும். அனைத்து சமூக நிகழ்வுப் போக்குகளிலும் வினை புரிதலுக்கு சம முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதுவுமில்லை. இவ்வித வினை புரிதல்கள் ஒரே விதமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் வினை புரிய வேண்டும். இதைத்தான் “பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்” என மாவோ கூறியுள்ளார்.

இது விடயத்தில் இரண்டாவது அணியினர் விட்ட தவறுகள் என்ன?

பகுதி 2-(IV) அனைத்தையும் கவ்விப் பிடித்திருந்த மதத்தை எவருமே கண்டுகொள்ளவில்லை.

நவகாலனியல் சமூகக் கட்டுமானத்தில் அனைத்து மக்களையும் தழுவிய மைய சமூக நிகழ்வுப் போக்குகள் நான்காகும். அவையாவன, வர்க்கம், சாதியம், மதம், தேசியம். இரண்டாவது அணியினரில் மிகச் சிலர் வர்க்கம் சாதியம், தேசியம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். பலர் சாதியத்திற்கும் தேசியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். மிகப் பலர் தேசியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தனர். இடது சாரிகளாக அறியப்படும் சிலர் வர்க்கம், சாதி இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இவர்களில் எவருமே மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் மக்களைக் கொண்டே மக்களின் வரலாற்றை எழுத வைக்கும் தமது உயர்ந்த இலட்சியத்தில் இவ்வணியினரில் எவருமே வெற்றி பெறவில்லை. மதத்தின் மீது வினைபுரிதலைக் கைவிட்டதுதான், வெற்றி பெறாமைக்கான பிரதான காரணமாகும். இக்கூற்றை சற்று காலந்தாழ்த்தி விளக்குவோம். தற்போது இந்த மாறுநிலைக் காலகட்ட முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

தமிழ்த்தேசியம் இறைமை மிக்கதாக வளரப்போகிறது என்பதை தேசிய, சர்வதேசிய பிற்போக்கு சக்திகள் அனைவரும் புரிந்து கொண்டனர். ஜனநாயக மறுப்புத் தேசியர்களான தமிழர் விடுதலைக் கூட்டணி, விதேசியரான தொண்டமான், ஐரோப்பிய அரசுகளுக்கு மாமா வேலை பார்க்கும் கிறிஸ்துவ மதபீடங்கள், நிலப்பிரபுத்துவ மரபுகளைப் பாதுகாத்துவரும் சைவ மடங்கள், சிங்கள பேரினவாத அரசு, சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகள் , ஐரோப்பிய அரசுகள் சார்புப் புலம் பெயர்ந்தோர் அமைப்புகள், தமிழ் நாட்டின் தமிழ் வலதுசாரி தேசியர்கள், அண்மையிலும் தூரத்திலும் இருக்கும் வல்லரசுகள் ஆகியோரையே அனைத்துப் பிற்போக்குவாதிகள் என்ற கூறுகிறோம்.

இப்பிற்போக்குச் சக்திகள் தமிழ்த் தேசியத்தை திசை மாற்றத் திட்டமிட்டனர். பிஞ்சுகள் காயாகிக் கனிகளாக முன்னரே அவற்றை வெம்பலாக்கும் முயற்சிகளில் தனித்தும் கூட்டாகவும் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிறிலங்கா அரசு, தன் பங்கிற்கு இன உணர்ச்சிகளைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு இன ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. கிறிஸ்துவ மதபீடங்கள் தம் பங்கிற்கு வன்முறைக்கு வழிகாட்டின. வல்லரசுகள் தம் பங்கிற்கு ஆயுதங்களை வழங்கினர். தமிழர் விடுதலைக் கூட்டணி தம் பங்கிற்கு செயற்கையான பதட்டத்தை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சைவ மடங்கள் தம் பங்கிற்கு போராளிகளை அவதாரங்கள் ஆக்கின. இவ்விதம் எல்லோருமாகச் சேர்ந்து தேன்கூட்டுக்கு புகையடித்தனர். தேனீக்கள் தவிர்க்க முடியாமல் கூட்டைவிட்டு அணி அணியாக வெளிவந்தன. (புகையடிக்கப்பட்ட மாம்பிஞ்சுகள் தெருவோரச் சந்தைக்கு வந்தன,) விளைவு தேனீக்கள் கூட்டம் கூட்டமாக நெருப்பில் வீழ்ந்தன. ராணித் தேனீ தனிப்படுத்தப்பட்டாள். கூட்டழிப்பு (இன ஒழிப்பு) நடவடிக்கை சுலபமானது. வெம்பல்கள் தெருவோரம் எறியப்பட்டன. பிற்போக்கு சக்திகள் வெற்றி பெற்றன.

முள்ளிவாய்க்கால் அழிவின் பின் தமிழ்த்தேசியம் அடுத்த மாறுநிலைக் கட்டத்துள் (மூன்றாவது) பிரவேசித்துள்ளது. ஆனால், இன்றைய 2010-கள் அன்றைய 1970-கள் போன்றதல்ல. அன்று எதிர்கால நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இளமைத் துடிப்பும், தேடல் அவாவும், புத்தாக்கச் செயற்பாடுகளும் கரைபுரண்டோடின. ஆனால் இன்று இவற்றில் எதுவுமே காணப்படவில்லை. தமிழ்த்தேசியம் பற்றிய எதிர்கால நம்பிக்கையின்மையும், தன்னம்பிக்கையின்மையும், அனைத்தையும் இட்டுச் சந்தேகமும், தேடலில் அப்பட்டமான சோம்பேறித்தனமும், முதிர்ச்சியின் ஆளுமைக்குப் பதிலாக முதுமையின் சோர்வும், புத்தாக்கத்தில் தயக்கவாதமும் மிக்கதான அழுது வடியும் நிலையையே காண்கின்றோம். இதுதான் யதார்த்தமாகும். இந்த யதார்த்தை ஏற்றுக் கொண்டுதான், புரிந்து கொண்டுதான் அடுத்த நடவடிக்கை பற்றிச் சிந்திக்கவேண்டும்.

அதைவிடுத்து ‘விடுதலை உணர்வு அழிந்ததாக வரலாறேயில்லை’ ‘நியாயம் ஒரு நாள் வெல்லும்’ ‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், சூது விலகும் தர்மம் வெல்லும்’ போன்ற வரலாற்றின் பொதுப் போக்கை அல்லது பொது நியதிகளை வரலாற்றின் அனைத்து நிலைகளுக்கும் பயன்படுத்தி தற்திருப்திப்பட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்விதமான தற்திருப்திகளும் சுய தேற்றல்களும் வேலைக்குதவாது. தேசத்தின் இறைமை பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழ்த்தேசியர்கள் தமது இறைமையைப் பலிகொடுக்கக் கூடாது.

வரலாற்றின் பாதை ஒரு நேர் கோடல்ல. அது பல திருப்புமுனைகளைக் கொண்டது. ஒவ்வொரு திருப்புமுனைக்கும் இடையேயான கால இடைவெளி மிகக் குறுகியதாகவும் இருக்கலாம். மிக நீண்டதாகவும் இருக்கலாம். எகிறிப் பாய்தல் (புரட்சி) எழுச்சி (பரிணாமம்) , வீழ்ச்சி , தோல்வி, பின் வாங்கல், இயல்பான தேக்கம், திடீர் தேக்கம், திடீர் பின்வாங்கல்(எதிர்ப்புரட்சி),  இயல்பான அழிவு, எதிர்பாரா அழிவு, அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய ஊக்குவிப்பு இவ்விதமாக பல திருப்புமுனைகளைக் கொண்டதுதான் வரலாறாகும். சில தலைமுறைகளுக்கு நீடிக்கும் வீழ்ச்சியும் உண்டு (எ.கா. மலையகத் தமிழ்த் தேசியம்) மிகச் சில வருடங்களுக்குள் நடந்து முடியும் பாய்ச்சல்களும் உண்டு (எ.கா. கீயுபப் புரட்சி) வரலாற்றின் பொதுநியதிகளை குறிப்பான கட்டத்திற்குப் பிரயோகித்து தற்திருப்தி கொள்ளக் கூடாது. குறிப்பான கட்டத்திற்குரிய குறிப்பான நியதிகளைப் புரிந்த கொள்ள வேண்டும்.

காதலுக்குரிய தடைகளைத் தூக்கி எறிந்து காதலர்களையும் காதலையும் திரைஅரங்குகளிலாவது வாழ வைக்கத் திராணியற்ற கதாசிரியர்களும் இயக்குநர்களும் காதலர்களைப் பிரித்துவிட்டு அவர்களிடையேயான காதலைக் கொன்றுவிட்டு “காதலர்கள் வென்றதும் இல்லை, காதல் தோற்றதும் இல்லை,” எனச் சுடலைஞானம் பேசுவது போல், “விடுதலை இயக்கங்கள் வென்றதும் இல்லை, விடுதலை தோற்றதும் இல்லை” என்று சுடலை ஞானம் பேசிப் பலனில்லை.

இந்நிலைமை எவ்விதம் வெற்றி கொள்ளப்படும் என்பது பற்றிய சொல்லாடல் இக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்நிலைமையில் இருந்து விடுபடுவதற்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு என்பதுவே இக்கட்டுரையின் சொல்லாடல் பரப்பாகும். தொடர்வோம்.

 எதிர்மறை அம்சங்களே தற்போதைய மாறுநிலைக்கட்டத்தின் தலைமைப் போக்காக இருந்தாலும் நேர்மறை அம்சங்களைக் கொண்ட எதிரோட்டங்களும் இருக்கவே செய்கின்றன. கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது காலந்தாழ்த்தியாவது ஆரம்பித்துள்ளது. ஆனால் 70-கள் எவ்விதம் தனிநபர்களை மையங்கொண்டிருந்ததோ அதே போல் 2010-களும் தனிநபர்களை மையங்கொண்டதாகவே உள்ளது. வளர்ந்து வந்த அன்றைய தமிழ்த்தேசியம் தனக்கு அவசியமான மும்மூர்த்திகளைத் தேடித் திரிந்தது (மூர்த்தி என்பது ஆளுமை; மும்மூர்த்தி என்பது மூவகை ஆளுமையாகும். படைத்தல், காத்தல், அழித்தல்/ஆதிப்பொதுவுடமை சமூகத்தில் தலைமையை/தலைமைத்துவத்தை குறிக்கும் சொல்லே மூம்மூர்த்திகள். பார்பனிய மதமும், அதன் தொடர்ச்சியான இந்துவும் , சைவமும் இதை மூன்று கடவுளர்களாக்கி விட்டார்கள்). வீழந்துள்ள இன்றைய தமிழ்த் தேசியமோ தம்மை அழித்த அந்த ஒரு மூர்த்தி (அழிவு ஆளுமை) – (மூன்று மூர்த்திகளும் இணைந்து செயற்பட்டால் தான் வரலாறு ஆக்கப்பூர்வமான தலைமையைப் பெறுகிறது அழிவு மூர்த்தி மட்டும் செயற்படுமானால் வரலாறு நாகசகாரத் தன்மை பெறுகிறது) – யார் எனக் தேடித் திரிகிறது. ஒவ்வொருவரினது உள்ளுணர்வும் இவ் அழிவில் “உனக்கும் பங்குண்டு” என கூறி வருகிறது ஆனால் இதை எவரும் வெளிக்காட்டாமல் பிறர் மீது பழி சுமத்தி வருகிறார்கள். குற்றவுணர்வாலும், குற்றம்சாட்டும் உணர்வாலும் அல்லலுறுவோர் பலராகும். அடுத்தடுத்து வெளிவரும் ‘சுய நினைவு மீட்புப் படைப்புகள்’ இதற்கோர் எடுத்துக்காட்டாக அமைகின்றன. ஒவ்வொரு படைப்புகளும் தனிநபர்களை மையங்கொண்டதகாவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுவதாகவுமே உள்ளது.

தாழ்வுச் சிக்கல்களும் வேண்டாம், தாழ்வுச் சிக்கலை அடித்தளமாகக் கொண்ட சந்தேகங்களும் வேண்டாம். ஏனெனில் இத் தவறுகள் தனிநபர்களின் தவறுகளல்ல, அல்லது இத் தவறுகளுக்கு எந்தத் தனிநபரையும் பொறுப்பாளர்களாக ஆக்க முடியாது. இதன் பொருள் தனி நபர்கள் தவறே இழைக்காதவர்கள் என்பதல்ல. தனிப்பட்ட வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி தவறிழைக்காதவர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்காதவர், மற்றவர் இனியும் வாழாதவர் (இறந்தவர்). வரலாற்றின் சரியான திசைவழிக்கும், தவறான திசைவழிக்கும் எந்தத் தனிநபரும் காரணமல்ல. தனிநபர்களின் பங்கு வரையறுக்கப்பட்டதும் நிபந்தனைக்கு உட்பட்டதுமாகும். வரலாறு சரியான திசைவழியில் செல்வது. தம்மால் தான் என்று யாரும் கர்வம் கொள்ளவும் கூடாது, வரலாறு தன்னால்தான் கெட்டது என யாரும் தாழ்வுச் சிக்கல் கொள்ளவும் கூடாது. இதற்காக தம்மை நோகவும் கூடாது, பிறரை நொந்துக் கொள்ளவும் கூடாது. தனிநபர்களால் வரலாற்றைச் செதுக்கவும் முடியாது, சிதைக்கவும் முடியாது. அது தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திர நிகழ்வாகும்.

வரலாறு – சமூக நிகழ்வுப் போக்கு – தனிநபர்கள் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு பற்றிய பகுதிக்குள் மீளவும் செல்வோம்.

சமூக நிகழ்வுப் போக்கு சுதந்திரமானது என்பது முன்னர் கூறப்பட்டது. தனிநபர்களின் விருப்பு வெறுப்புடன் ஒப்பிடும் போதுதான் அது சுதந்திரமானதே தவிர, மற்றும்படி அதன் செயற்பாடும் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டதேயாகும். தமக்குள் பகைமையும் சிநேகமும் கொண்ட சமூக நிகழ்வுகள் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் தான் அந்த நிபந்தனையாகும். குறிப்பிட்ட ஒரு காலத்தில் எந்த சமூக நிகழ்வுப் போக்கு வரலாற்றின் பிரதான நிகழ்வுப் போக்காக உருவாகுகின்றது என்பதைத் தீர்மானிப்பது இந்த சார்புநிலைதான். வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வுப் போக்கு முன்னிலை வகிக்கும். இன்னோர் காலகட்டத்தில் இன்னோர் நிகழ்வுப் போக்கு முன்னிலை வகிக்கும். அது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு தேர்வாகும். அவ்விதமானால் தனிநபர்களுக்கும் சமூக நிகழ்வுப் போக்குக்கும் இடையேயான தொடர்புகள் எவ்விதமானவை . தனிநபர்களால் நிகழ்வுப் போக்கில் தமது விருப்பத்தைச் செலுத்த முடியாதா? சமூக நிகழ்வுப் போக்கு தனிநபர்களின் அவசியத்தை நிராகரிக்கின்றதா? எனும் கேள்விகள் எழுகின்றன. இல்லை, ஆம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத இக்கட்டான கேள்விகள்.

இங்கு வரலாறு எனக்கூறப்படுவது, சமூகத்தில் நிலவும் சமூக நிகழ்வுப் போக்குகளின் ஒட்டுமொத்த தொகுப்பையே ஆகும். இவ்விதம் எடுத்துக்கொண்டால், வரலாற்றை சமூதாயத்தின் மனம் அல்லது மூளை என்று கூறலாம். ஆகவே வரலாற்று அறிவு அல்லது வரலாற்று உணர்வு, என்பது சமூக நிகழ்வுப் போக்குகளின் தொகுப்பைப் பற்றிய அறிதலும், புரிதலுமாகும், தெற்காசிய சூழலில் வர்க்கம் சாதியம், மதம், தேசியம் மற்றும் அதனுடைய கிளைச் சமூக நிகழ்வுப் போக்குகள் ஆகியன பற்றிய அறிதலும் புரிதலுமாகும்.

சமூக நிகழ்வுப் போக்கு எனக் கூறப்படுவது எடுத்துக் கொள்ளப்பட்ட அவ்வரலாற்றுக் காலகட்டத்தில் மேலோங்கி நிற்கும் அல்லது முதன்மை வகிக்கும் சமூக நிகழ்வுப் போக்கையேயாகும்.

சமூக அரசியப்பார்வையில், தனி நபர்கள் எனப்படுபவர்கள், மக்கள் திரளின் கூட்டுப்பார்வை நிலையில் இருந்து உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ, உயர்வான முறையில் வேறுபட்டோ அல்லது தாழ்வான முறையில் வேறுபட்டோ நிற்பதுடன் மக்கள் திரளுடன் எந்தப் பின்னிப் பிணைப்பும் இன்றி வாழும் மனிதர்களாகும். இங்கு இரு நிபந்தனைகள் உண்டு. ஒன்று மக்கள் திரளிடம் இருந்து வேறுபட்டிருத்தல், மற்றையது மக்கள் திரளுடன் எந்தப் பின்னிப் பிணைப்பும் அற்றிருத்தல். இவ்வித மனிதர்கள் தனித்து வினைபுரிந்தாலும், கூட்டாக வினைபுரிந்தாலும் இவர்கள் தனிநபர்கள்தான். தனிநபர்கள் என்பதன் அர்த்தம் தனியாக நிற்கும் நபர்கள் என்பதல்ல. தனிநபர் என்பது கூட்டுக்கு எதிரான சொல்லல்ல. அது ஒருமைச் சொல்லல்ல.

தனி நபருக்கு எதிரான பதம் சமூக நபர் என்பதேயாகும். சமூக நபர் என்பவரும் தனிநபர் போலவே மக்கள் திரளின் உணர்வு மட்டத்தில் இருந்து வேறுபட்டவராகவே இருப்பார். ஆனால் தனிநபர் போலன்றி, இவர் மக்கள் திரளுடன் பின்னிப் பிணைந்தவராக இருப்பார். இதுதான் தனி நபர்களுக்கும் சமூக நபர்களுக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமையாகும். எடுத்துக்காட்டுகளுடன் சொல்வதானால் 60-களில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்களிடையே இருந்த சமூகநபர் அரசியல் அமைப்புகளாவன மலையகத் தொழிற்சங்கங்கள், , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீன சார்பு), சமஸ்டிக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய நான்குந்தான் ஏனைய அரசியல் அமைப்புகள் அனைத்தும் தனிநபர் அமைப்புகளே அதாவது குழுக்களே. பெரிய தேசியக் கட்சிகள் கூட வடக்கில் குழுக்களுக்குரிய தன்மையுடனேயே செயற்பட்டன. பெரும் போராட்டங்களை நடத்திய விடுதலைப்புலிகள் கூட ஒரு பெருங்குழுவே. சண்முகதாசனின் தலைமையில் இருந்து விலகிய அரசியல் அமைப்புகளும் குழுக்களே.

அரசியல் கட்சிகள் அல்லாத அரசியல் சமூக நிறுவனங்களில் மதமும், சாதியுமே இரு பெரும் சமூகநபர் அமைப்புகளாகும். மதம் ஒரு சமூகநிறுவனமாகவும் (social institution). அதே வேளை ஒரு சமூக அமைப்பாகவும் (social organisation) இருந்து வருகின்றது. சாதியம் ஒரு சமூக நிறுவனமாக மாத்திரமே நிலவி வருகிறது. காலத்துக்குக் காலம் அது ஒரு சமூக அமைப்பாக முளைவிட்டாலும் (சிறுபான்மைத் தமிழர் மகாசபை , தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்) நிரந்தர ஆயுள் பெற்ற சமூக அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. வர்க்கம் எனும் அரசியல சமூக நிறுவனம் வட மாகாணத்தில் தனது தனித்துவத்தை வெளிக் கொணரும் அளவிற்கான எந்த பரந்த விரிந்த சமூக நிகழ்வுப் போக்கையும் இன்று வரை தோற்றுவிக்கவில்லை. ஆகையினால் அதற்கென்றோர் சமூக அமைப்பு எதுவுமே இது வரை வடகிழக்கில் தோன்றவில்லை. ஆனால் மலையகத் தமிழர் மத்தியில் தொழிற்சங்கம் எனும் சமூக அமைப்பாக திடம் பெற்றுள்ளது. வடக்கில் வர்க்கம், சாதியத்தின் ஊடாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறது. தேசியம் 80-களின் பிற்பகுதி வரை வெறுமனே சமூக அமைப்புகளைத் தான் கொண்டிருந்ததே தவிர (சமஸ்டிக் கட்சி, தமிழர் , விடுதலைக் கூட்டணி) ஒரு சமூக நிறுவனமாக மாறவில்லை. ஆனால் தற்போது தேசியம் ஒரு சமூக நிறுவனமாக வளர்ந்துவருகிறது. அமைப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனி இது வளரும். இவ்விதம் நோக்கில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் முன்னணிப் பிரதேசமாக விளங்கும் வடமாகாணத்தில் செயற்பாடுள்ள சமூக நிறுவனமாக விளங்கி வருவது. மதமும், சாதியமும் மட்டுந்தான். தேசியம் ஒரு பிந்திய வரவே. இவற்றுள் சாதியம் தற்போது தனக்கென்று அமைப்பெதனையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மதமோ பலமிக்க சமூக நிறுவனமாக இருப்பதுடன் பலமிக்க சமூக அமைப்பாகவும் உள்ளது. பலமிக்க சமூக நிறுவனமாக இருப்பதால் மதம், மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் சிந்தனை முறையையும் தீர்மானிக்க கூடிய வல்லமை பெற்றுள்ளது. பலமான அமைப்பாக இருப்பதனால் அனைத்து அரசியல் கட்சியினுள்ளும் தனது செல்வாக்கைச் செலுத்தும் வலுமிக்கதாக இருந்து வருகின்றது. இதனால சமூகத்தில் நடைபெறும் அரசியல் ஒட்டப் பந்தயத்தில் மதம் எனும் ஒட்டக்காரனே முன்னிலை வகிக்கிறான். பௌத்தவீரன் எல்லோரினதும் கண்களுக்குத் தெரிகிறான். இஸ்லாமிய வீரனும் அவ்விதமே ஆனால் சைவவீரனோ அனைவரினது கண்களிலும் மண்ணைத் தூவுவதன் மூலம் தான் காணாப் பொருளாக ஆகியுள்ளான்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகூட(சீன சார்பு), மதத்தின் செல்வாக்கிற்கு விதிவிலக்கானதல்ல. ஆலய, தேநீர் கடைப் பிரவேசம் உடல் சார்ந்த தீண்டாமையே ஆகும். கம்யூனிஸ்டுகள் உடல் சார்ந்த தீண்டாமையையே எதிர்த்தார்கள். அதிலும் பொதுவாழ்வில் உடல் சார்ந்த தீண்டாமை எதிர்க்கப்பட்டது. கோயிலுக்குள் இருக்கும் கடவுளை தரிசிக்கத் தடை போடும் சாதீயத் தடிப்பை விலகி நிற்கத்தான் போரிடப்பட்டதே தவிர கோவில்களுள் இருக்கும் கடவுளர்களுக்கு எதிரான எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இப்போராட்டம் நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை தகர்ப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கப்படாததால் இது வெறுமனே ஒரு முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தமாகவே முடிவடைந்தது.

இவ் இயக்கம் சைவ ஆலய வழிபாட்டு முறையில் ஒரு சீர்திருத்தமாகவும் அமைந்திருந்தது. சைவம், இறையியல் கோட்பாடு என்ற முறையில் சாதிய ஏற்றத்தாழ்வு மனித உடல்களுக்கானதல்ல ஆன்மாவுக்கானது என்றே கூறுகிறது. அதாவது தீண்டாமை உடலுக்கானதல்ல. அது ஆன்மாவுக்கானதே என்பது சைவ கோட்பாடாகும். ஆனால் இக்கோட்பாடு நாயன்மார் காலத்திலேயே மீறப்பட்டது. இதனால் சைவத்தின் ஒரு பகுதியினர் இக்கோட்பாடுகளுக்கு எதிராகப் போரிட்டார்கள். திருமூலர் இதில் பிரதானமானவர். சாதிய மறுப்புவாதியான இவர் கோவிலில் வழிபாட்டு முறைகளில் வைதீக ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அவர் ஒரு சிவபக்தன். அத்துடன் நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் இடையேயான தத்துவார்த்த (மெய்யியல்) முரண்பாட்டுக்கான நடைமுறைப் பிரச்சனைகளில் சாதியமும் ஒன்றாகும். ஆழ்வார்கள். தீண்டாமையை எதிர்ப்பதில் தீவிர ஈடுபாடுகாட்டினார்கள். நாயன்மார்களைப் போல் பேச்சளவில் சாதிய எதிர்ப்பும் செயலில் உடல்ரீதியாக தீண்டாமைப் பாதுகாப்பிலும் ஈடுபட்டவர்களாக இருக்கவில்லை. ஆனால் இறையியல் என்ற முறையில் வைணவ இறையியல் , சைவ இறையியலையும் விட வேதாந்தத்துடன் அதிக நெருக்கம் கொண்டதாக இருந்தது. சைவத்தின் வைதீகப் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகநாவலருக்கு எதிராக சைவத்தின் அவைதீகப் பிரிவைச் சேர்ந்த அருட்பிரகாச வள்ளலார் உள் நுழைவை மறுத்த சிதம்பரம் சிவன் கோவிலுக்கு எதிராக ஒரு புதிய கோவிலையே கட்டினார். அனைவரையும் சமமாக மதிக்கக் கூடிய வழிபாட்டு முறைகளை உருவாக்கினார். அவரால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறைகளும் அதற்கான கோட்பாடுகளும் ‘அருட்பா’ என அழைக்கப்பட்டது. அது அருட்பா அல்ல. மருட்பா என்பதே ஆறுமுக நாவலரின் தர்க்கம் . அதற்கடுத்தாக ஈ.வே. ராமசாமிப் பெரியார் பார்ப்பனிய மதத்திற்கு எதிரான கண்டனக் கணைகள் தொடுத்தார். இவரின் கணைகள் கடவுளர்களையும் மத நிறுவனங்களையும் சாதிய அதிகாரபீடங்களையும் கிலி கொள்ளச் செய்தன. அதே சமகாலத்தில் அம்பேத்காரும் இந்துக் கடவுளர்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிராக பெரும் போராட்டத்தையே நடத்தினார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் 1920களில் இருந்து 1930கள் வரை கல்வியில் தீண்டாமைக்கு எதிராக இயக்கத்தையே நடத்தியது.

“1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம்இ 30ம்இ 31ம் திகதிகளில் யாழ்ப்பாண றிசர்வ் மண்டபத்தில் நடைபெற்ற வாலிபர் காங்கிரஸின் 1-வது மாநாடு நிறைவேற்றிய 10 தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானமாக அமைந்தது, தமிழர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தீண்டாமைக்கு எதிரான குரலாகும். அதை ஒழிப்பதற்கு காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என அத்தீர்மானம் வலியுறுத்தியது. இம் மாநாடு திரு. ஹண்டி பேரின்பநாயகத்தின் தலைமையிலேயே நடைபெற்றது. இக் காங்கிரஸ் உருவாக்கத்திலும் அதைச் செயற்படுத்துவதிலும் இவரே பிரதான பொறுப்பு வகித்தார். “ஹண்டி பேரின்பநாயகமும் அவருடன் இணைந்த நண்பர்கள் சிலரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் தொழில் செய்து வந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் சிற்றுண்டி அருந்தி தீண்டாமைத் திமிர் கொண்டோரின் சவாலை முறியடித்தனர் என்றும் அறிய முடிகிறது ……”

……………“வருடா வருடம் நடைபெற்று வந்த வாலிபர் காங்கிரஸ் மாநாடுகளில் தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களும் தீர்மானங்களும் பிரதான இடத்தைக் கொண்டிருந்தன. இதற்குக் காரணம் வாலிபர் காங்கிரஸ் இளைஞர்கள், இந்திய தேசிய இயக்கத்தின் தீவிர கருத்துக்களால் கவரப்பட்டிருந்தமையும் பரந்த கல்வி அறிவைப் பெற்றிருந்தமையுமாகும். விவேகானந்தர், காந்தி, பாரதி போன்றோரது காலனி எதிர்ப்புக் கருத்துக்களும் சமூக சீர்திருத்த சிந்தனைகளும் இவ் இளைஞர்களை அதிகளவு ஆட்கொண்டிருந்தன.”………………..

………..“1927ம் ஆண்டு கார்த்திகையில் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தார். வாலிபர் காங்கிரஸ் அவரை யாழ்ப்பாணம் அழைத்திருந்தது. காந்திக்கு யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வரவேற்புக் கொடுப்பதற்கான தயாரிப்புக் கூட்டங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வந்தார்கள். சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் சாதி வெறியர்கள் தலையிட்டு காந்திக்கு வரவேற்புக் கொடுக்கும் அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதில் சமத்துவம் கொடுக்கக் கூடாது என வாதிட்டனர். இவ்வளவிற்கும் மத்தியிலும் 26-11-1927-ல் யாழ் முற்றவெளியில் காந்தி வரவேற்கப்பட்டார். வரவேற்புக் கூட்ட மேடையில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் வீற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.” இந்த வரவேற்புக் கூட்டம் விபுலானந்தர் தலைமையிலேயே நடைபெற்றது. 1925-ல் நடைபெற்ற இரண்டாவது மாணவர் காங்கிரஸும் இவரின் தலைமையிலேயே நடைபெற்றது. (1925 – ஏப்ரல் – 26)”…….

…….“1928ல் கீரிமலை வைத்திலிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மாநாடு சமூக ஒருமைப்பாட்டு மாநாடாக நடைபெற்றது. விபுலானந்தர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சுயராச்சியக் கட்சித் துணைத் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி. நாளந்தாக் கல்லூரி அதிபர் ஜி. கே. டபிள்யு. பெரேரா, தொழிற் சங்கவாதி ஏ. ஈ. குணசிங்கா, கௌரவ ஆ. கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை ஓர் நாடளாவிய மாநாடாகக் கொள்ள வைத்தனர்” இந்த மாநாட்டில் சமபந்தி சமபோசனம் என்ற நடவடிக்கையை அமுல்படுத்துவதில் மண்டப உரிமையாளன் பல தடங்கல்களை ஏற்படுத்தினான் என்பது கவனிக்கத்தக்கது……………………….”

…………….“1929ம் ஆண்டு சித்திரை மாதத்தில் காங்கேசன்துறையில் அமைக்கபட்ட பந்தலில் 4வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து வந்திருந்த தமிழ்த் தென்றல் கல்யாணசுந்தர முதலியார் தலைமை தாங்கினார். இம் மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் பங்கு கொண்டனர். வாலிபர் காங்கிரஸின் சமபந்தி, சமஆசனம் என்ற உறுதியான நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது. இது பற்றி 13-4-1929-ல் டெயிலி நியூஸ் பத்திரிகை எழுதுகையில் “யாழ்ப்பாணத்தில் புரட்சிகர நடவடிக்கை” என வர்ணித்தது. இந்த மாநாட்டின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவில் ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்தைச் சேர்ந்தவரும், சமூக நலன் விரும்பும் கல்வி கற்ற இளைஞனுமான திரு. யோவேல் போல் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்…………….

…………….இந்த இடத்தில் யோவேல் போல் பற்றி சிறிது கூறுவது அவசியமானது. அப்போதுதான் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் கால சமூக-அரசியற் பின்னணியை நன்கு புரிந்து கொள்ள முடியும். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தீண்டாமைக்கு எதிராக முனைப்புமிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது “தீண்டத்தகாதோரை” பிரதிநிதித்துவம் செய்யும் தனியான ஸ்தாபனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்ற பெயருடன் 16-7-1927-ல் இது உதித்தது. இது கிறிஸ்துவ பின்னணியிலேயே தோற்றுவிக்கப்பட்டது. “உயர் சமூகத்தை”ச் சேர்ந்த கிறிஸ்தவரான நெவில் செல்லத்துரை என்பவரே இதன் தலைவராக இருந்தார். மிஷனரிக் கல்லூரி இளைஞர்களாய் இருந்த திரு. யோவேல் போல், திரு. டி. ஜேம்ஸ் ஆகிய இருவரும் இணைக் காரியதரிசிகளாக இருந்தனர். 1927-ல் காந்தியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது யோவேல் போல் தலைமையில் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் ஒரு வரவேற்புப் பந்தல் அமைத்தது. இப் பந்தல் சாதி வெறியர்களால் எரிக்கப்பட்டது. யோவேல் போல் மீண்டும் அதே இடத்தில் பந்தல் அமைத்து காந்திக்கு வரவேற்புக் கொடுத்தார். 1928-ம் ஆண்டு இவரின் முன்னெடுப்பில் உடுவில் பெண்கள் பாடசாலையில் சமஆசன சமபோசன இயக்கம் நடைபெற்றது. வெற்றியும் தந்தது. பாடசாலைகளில் சமஆசனம், சமபோசனம் தொடர்பாக இவர் இருமுறை தேசாதிபதியைக் கண்டுள்ளார். இது நடந்தது 1928, 1929-லாகும். இது தொடர்பாக இவர் டொனமூர் ஆணைக் குழுவிடமும் சாட்சிபகன்றார். ……………………..

………….யோவேல் போலின் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் நோக்குடனும் இவ்விதமான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக யோவேல் போலை கௌரவிக்கும் நோக்குடனுமே அவரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தனது நிர்வாகக் குழு அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்தது போலும்.

1930-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு, சமஆசனம், ஆலய பிரவேசம். மிருகபலிநீக்கம் போன்ற சமூகநீதிகளை முன்கொணரும் மாநாடாக இருந்தது. இம்மாநாடு சமூக நீதியை நிலைநாட்டிக் கொடுமைகளைக் களைய முற்படக்கூடிய பல ஆலோசனைகளை முன் வைத்தது. (நன்றி; ‘யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் 1920களில்’ அ. கௌரிகாந்தன், சாளரம் வெளியீடு. முதற்பதிப்பு: பெப்ரவரி 1992)

யாழ்-நிலவுடைமை வர்க்கத்தின் தத்துவார்த்தப் பிரதிநிதியான ஆறுமுகநாவலரின் சிந்தனைக்கட்டுமானத்துக்கு நேரெதிரான சிந்தனைக்கட்டுமானத்தைக் கொண்டிருந்த விபுலானந்த அடிகளார் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் பிரதானிகளில் ஒருவராகும். மேற்கூறிய அதே நூலில் விவேகானந்தர் பற்றிக் கூறப்பட்ட சில கருத்துக்களைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம்.

“சமூக சீர்திருத்தத்தைப் பொறுத்த வரையில் இவர் ஒரு புரட்சிகர சமூக சீர்திருத்தவாதி என்று அப்படியே கூறி விடமுடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாளித்துவத் தன்மைபெற்ற பொருளாதாரம் ஒன்று துரிதமாகத் திணிக்கப்பட்டு வந்தது. பொருளாதார பரிணாமம் (படிமலர்ச்சி) ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானியர்களே இந்த மாற்றத்தைப் புகுத்தி வந்தார்கள். வெளியில் இருந்தே இந்தத் திணிப்பு மேற் கொள்ளப்பட்டது. விபுலானந்தரோ, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸோ, இராமகிருஷ்ண சங்கமோ இந்த மாற்றத்தையிட்டு எதுவும் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டது போலவே தென்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் புதியதோர் மத்தியதரவர்க்கம் துரிதமாகத் தோன்றி வளரத் தொடங்கியது. அதாவது, சமூகத்தின் ஒரு மிகக் கணிசமான பகுதியினர் மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்திற்கு உள்ளாகினார்கள். (upward social mobility) இம் மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்துக்கான ஏணியாகச் செயற்படக்கூடிய புதிய பொருள் உற்பத்தி நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் பரவlலாகத் தோன்றவில்லை. தென் இலங்கையே இதற்கான களமாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதியைப் பொறுத்து கல்விவாய்ப்பொன்றே இதற்கான ஏணியாக இருந்தது. இதனால்தான் 1920-களிலும் 1930-களிலும் வடக்கு கிழக்கில் தோன்றிய சமூகசீர்திருத்த இயக்கங்கள் கல்விச் சீர்திருத்த இயக்கங்களாகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டன. கல்விச் சீர்திருத்த இயக்கம் மறைமுகமான அரசியல் பொருளாதார இயக்கமாகவும் இருந்தது.

யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி அடக்கு முறை கல்வியின் பரவலைத் தடுக்கும் ஒரு பலமிக்க சமூக காரணியாக இருந்ததனால் இக் கல்விச் சீர்திருத்தங்கள், சாதி பேதத்திற்கு எதிராகவும் போர் தொடுத்தன. சம-ஆசனம் சம-போசனத்தின் சமூக உள்ளடக்கம் இதுதான். இலசவக்கல்வி, தாய்மொழிக்கல்வி, கல்வியை அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளின் சமூக காரணிகளும் இவைதான். ஆகவே விபுலானந்தரின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் கல்வி சீர்திருத்தத்தின் ஊடாகவே அமைந்திருந்தன.

…………….விபுலானந்தர் பின்பற்றிய சமூக சீர்திருத்தம் அன்றைய காலகட்டத்திற்கு அவசியமான அனைத்து சமூக பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்று கூறமுடியாவிட்டாலும், அவர் தமிழ் பேசும் மக்களுக்கு அவசியமான ஒரு சமூக சீர்திருத்தத்தைப் பின்பற்றினார் என்பதுவும், அது புரட்சிகரமான கூறுகளைக் கொண்டிருந்தது என்பதுவும் மறுக்க முடியாத உண்மைகள்.”

இந்தியத் தேசியத் தந்தையாக அழைக்கப்படும் காந்தியும் உடல் தீண்டாமை ஒழிப்பில் வினைபுரிந்தவர் தான். தீண்டப்படாதோர் இந்து சமயத்தை விட்டு விலகிப் போகக்கூடாது என்பதற்காக அவர்களை ஹரிஜனங்கள் என அழைத்தார். தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களையும் நடத்தினார். இது சாதியம் தொடர்பாக அம்பேத்கார் புரிந்த முதல் வினைக்கு எதிரான பதில் வினையேயாகும். ஆனால் தேசியத் தந்தை உருவாக்க விரும்பியது இந்து ராஜ்யத்தையேயாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது அம்பேத்காரையும் பெரியாரையும் எதிர்த்து வெளிப்படையான அரசியல் போராட்டங்கள் நடத்தாவிட்டாலும் இவ்விருவருடனுமான ஒரு பனிப்போரை இன்றுவரை நடத்திக் கொண்டே இருக்கிறது .இந்தியத் தேசிய உருவாக்கத்திலான முதல்வினையாற்றலில் இவர்களின் பங்கு குறை கூற முடியாதது என்று கூறுவதற்கில்லை ஆனால் குறைத்து மதிப்பிட முடியாதது.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களின் முதல்வினையாற்றலில் பகைமைக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பதில்வினையாற்றலில் இவர்கள் எதிர்மறைச் செயல்பாடுள்ளவர்கள் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்நிலைப்பாடு பற்றி எதுவும் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் யாழ்ப்பாணப் பாடசாலையிலும், பஸ் வண்டிகளிலும் தீண்டப்படாத மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட உடல் தீண்டாமையை சட்டரீதியாக இல்லாமல் செய்தது. அதே நேரத்தில் இதே சுதந்திரக் கட்சி கொவிகம சாதியினர் தவிர்ந்த வேறு எவரும் இலங்கையின் பிரதமர்களாக வரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

சைவ ஆலயப் பிரவேசம் என்பது சமத்துவம், சகோதரத்துவம் எனும் முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையின் ஒரு பகுதியேயாகும். ஆகவே நவகாலனியல் சமூக அமைப்பில் செயற்பட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் இதயபூர்வமாக தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியது அவசியமே ஆனால் சமதர்ம சமூக அமைப்பை தமது குறிக்கோளாகக் கொண்டவர்களின் கடமை நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை பலவீனப்படுத்தி தகர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர சீர்திருத்தி பலப்படுத்துவதாக இருக்கக்கூடாது

இப்போராட்டங்களுடன் ஒப்பிடும் போது மனித உடல்களுக்கு எதிரான பொதுஇட தீண்டாமையை எதிர்த்து 1960-களின் பிற்பகுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் தன்மையை (ஆலயப் பிரவேசமும், தேனீர் கடை பிரவேசமும்)  சாதிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டமாக இருந்ததா? அதாவது நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை பலவீனப்படுத்தி தகர்ப்பதாக இருந்ததா? அல்லது நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை சீர்திருத்திப் பாதுகாப்பதாக இருந்ததா?

சைவம், மேல்சாதி கீழ்சாதி என மக்களைப் பிரித்துவைக்கும் சித்தாந்தமாக மட்டும் இருக்கவில்லை, சைவர்கள் அசைவர்கள் எனவும் மக்களை இரு கூறுகளாகப் பிரித்தது. தாவர உணவு உயர்வானதாகவும் புலால் இழிவானதாகவும் ஆக்கப்பட்டது, உயர்வான உணவு சைவ உணவானது தாழ்வான புலால் அசைவமானது. தாவர உணவு முதல்நிலைப்படுத்தப்பட்டு அது சைவமானது. புலால் உணவு அதற்கு எதிரானதாக ஆக்கப்பட்டு அசைவமானது. உணவை இவ்விதம் எதிர் எதிர் அணிகளாகப் பிரிக்கவேண்டியது அவசியமற்றது ஆனால் சைவம் சாதிய வேறுபாட்டின் அடிப்படையில் பிரித்தது.

இரு (உயர்ந்த, தாழ்ந்த) கூறுகளாகப் பிரிக்கப்பட்டது மக்கள் மட்டுமல்ல கடவுளர்களும் இரு கூறுகளாக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளர்கள் வர்க்க ஒடுக்குமுறையின் கடவுளர்களல்ல. அவர்கள் மக்களால் உருவாக்கப்பட்ட மூர்த்திகளினதும் மக்களின் மூர்த்திகளினதும் குறியீடுகளே. அவர்கள் மக்களில் ஒருவராகவே இருந்தனர். காதல்/காமம் புரிந்தனர். கள்ளுண்டனர். புலால் உண்டனர். மக்களுடன் ஒன்றுகூடிக் கூத்தாடினர். இக் கடவுளர்கள் நின்று கொல்லும் தெய்வங்களல்ல, அன்று கொல்லும் அரசர்களாகவே கருதப்பட்டனர். குற்றம் புரிந்தவர்களை இறந்தபின்னர் நரகத்துக்கு வா எனக் கூறி அங்குவைத்துத் தண்டனை கொடுக்கும் தெய்வங்களல்ல, நல்லது செய்தோரை மோட்சத்துக்கு அனுப்பும் தெய்வங்களுமல்ல. இத் தெய்வங்கள் குற்றம் செய்தோரை அப்பப்போ தண்டிக்கும் என்றே மக்கள் நம்பினர். தெய்வங்கள் தண்டிக்காவிட்டாலும் தெய்வத்தின் பெயரால் தாம் தண்டிப்போம் என மக்கள் நம்பினர். தண்டிக்கவும் செய்தார்கள். தண்டித்தும் வருகிறார்கள்; அதேபோல் நல்லது செய்தோர் மோட்சம் போவதாக இம் மக்கள் நம்பவில்லை. நல்லது செய்தோரை நடுகல்லாக்கி தம்முடனேயே தங்கவைத்துக் கொள்கின்றனர். அவர்களும் தெய்வங்களாகி விடுகிறார்கள். இவற்றில் சில தெய்வங்கள் சில குடும்பங்களுக்கு மாத்திரமே உரியவர்களாக உள்ளார்கள். அநீதிக்கு எதிரான போராளிகள் தெய்வமாக்கப்படுதலே பொதுவான வழமையாக உள்ளது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்கள் மென்மையும் பால்வடியும் முகமும் கொண்டவர்களல்ல. ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமல்ல இறுக்கமான முகபாவமும் கூர்ந்து நோக்கும் கோபக் கண்களும் உள்ளவர்களாகவோ, இல்லையேல் எந்த உருவமும் இல்லாத கல்லாக உள்ளனர்.

வேதாந்தமும் சைவமும் எவ்வளவு முயன்றும் இத் தெய்வங்களை ஒடுக்கப்படும் மக்களிடையே இருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் இம் மக்களை முற்றாக தம்முடன் இனைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. தமது தோல்வியை தமது வெற்றியாக மாற்றிக் கொண்டார்கள். சைவம், அசைவம் என்ற பிரிவை உண்டாக்குவதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளர்களையும் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளர்கள் அசைவக் கடவுளர்கள் ஆனார்கள். சைவக் கோவில்கள் அனைத்தும் ஆகம முறைக் கோவில்களேயாகும். இக் கோவில்களில் சிவனும், சிவனுடைய குடும்பத்தினரும் மாத்திரந்தான் நடுநாயகர்களாகும். இவர்கள் மட்டும்தான் உள்வட்டத்துள் இடம் பெறுவர். ஏனைய தெய்வங்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் தெய்வங்கள் விளிம்பு நிலையில் அல்லது `கண்ணூறு`, `நாவூறு` படுவதைத் தடுக்கும் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள்.

இவ்விதம் நடந்தும், மக்கள் பணியவில்லை. தமது கடவுள்கள் மேல் உள்ள நம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை. சைவக் கடவுளர்களுக்கு போட்டியாக தமது கடவுளர்களை வளர்த்து வந்தார்கள். தமக்கென்று சொந்தக்கோவில்கள், சொந்த அனுட்டானங்கள், தமக்கென்று சில சடங்குகள் ஆகியவற்றை நடத்தி வருகிறார்கள். சாதியம் சைவத்துடன் போராடி தனக்கென்றோர் புதிய மதத்தை உருவாக்கியுள்ளது. இது நிலப்பிரபுத்துவ சிந்தனைக் கட்டுமானமான சைவத்திற்கு எதிராக சாதியம் நடத்திவரும் முதல் வினையாகும்.

சைவ ஆலயப்பிரவேசங்கள் சைவத் தூய்மையை உடைப்பதற்குத் துணை புரிந்துள்ளதா அல்லது அசைவ அணியினரில் சிலர் சைவ வர்க்கக் கட்டுமானத்துள் பிரவேசிக்கத் துணைபுரிந்துள்ளதா என்பது ஆராயப்படவேண்டும். ஆனால் அசைவர்களின் கோவில்கள் மிகத்துரிதமாக சைவ ஆகமகத் கோவில்களாக மாறிவருகின்றன என்பது மட்டும் உண்மை. குடமுழுக்கு செய்தல் , கலசம் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் மூலம் அசைவம், சைவமயமாகி வருகிறது. வன்னிப்பகுதியில் இம்மாற்றம் மிகத் தெளிவாகவே தெரிகிறது. முன் கதவால் ஆயுதத்தின் உதவியுடன் நுழையும் பௌத்தத்தை நோக்கி மக்களின் கவனத்தைத் திருப்பி அதற்கெதிராக பதில்வினையாற்றக்கோரும் யாழ்-சைவ-வெள்ளாளத் தேசியம், சத்தம் சந்தடியின்றி அசைவத்தை சைவமயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சைவ-வேளாள மேலாண்மையை வடமாகாணம் முழுமையும் பலப்படுத்துவதே அதன் நோக்கமாகும். இது தேசிய உருவாக்கத்தை வளர்ப்பதற்கான ஒரு முதல்வினையல்ல. தேசிய உருவாக்கத்தை சிதைப்பதற்கானதொரு முதல்வினையாகும்.

தொகுப்பாகக் கூறுவோமானால் வர்க்கப்போராட்டமும், மதசார்பின்மையை ஆதரித்தும் மத ஆதிக்கத்தை எதிர்த்துமான எந்தப் போராட்டமும் (சமூக நிகழ்வுப் போக்கு) வடகிழக்கு மாகாகணங்களில் தனித்துவ நிகழ்வாக நடைபெறவில்லை. சாதியம், தேசியம் ஆகிய இரு சமூக நிகழ்வுப் போக்குகளின் ஊடாகவே பிற அனைத்து சமூக நிகழ்வுப் போக்குகளும் தம்மை வெளிப்படுத்தியும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்தும் வருகின்றன. இவை இரண்டினும் செயற்பாடுகளுக்கு அடித்தளமாக இருந்து வருவது மதமேயாகும்.
பகுதி 2-(V) தேசிய உருவாக்கத்தில் முதல்வினையும் பதில் வினையும் முடிவாக வளரும்

நன்றி:  எதுவரை on August 11, 2012

தேசியமும் மதமும்—03 ஆசிரியர்-கைமண்

த்தலைப்பு பலருக்கு விதண்டா வாதமாகத் தென்படலாம். சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தலாம். இலங்கையில் தேசியமும் பௌத்தமும் என்று கூறுவது நியாயமானது. ஏனெனில் அது நீண்ட காலமாக இருந்து வருவது . தேசியமும் இஸ்லாமும், என்று கூறுவதும் நியாயமானது. ஏனெனில் அது சமீபத்தில்தான் பிறப்பெடுத்துள்ளது. இதற்கு இணையாக தேசியமும்-சைவமும் என்று கூறுவதில் என்ன நியாயமுண்டு. தமிழ்த் தேசியத்திற்கும் சைவத்திற்கும் ஏதாவது தொடர்புகள் இருந்தனவா? பலர், இல்லையே என்பார்கள். சிலர், இருந்ததுதான், ஆனால் அது தான் சர்.பொன்.ராமநாதன் அவர்களுடன் மறைந்துவிட்டதே என்பார்கள். எல்லோருமே ஏகமனதாகக் கூறுவது  ”தமிழ்த் தேசியந்தான் மதசார்பற்ற தேசியமாயிற்றே” என்பதாகவே இருக்கும். இது உண்மையே. பௌத்த – சிங்கள தேசியவாதத்தின் எதிர்வினையாகச் செயற்படும் போது தமிழ்த் தேசியம் மத சார்பற்றதுதான். எதிர்வினையென்பது தற்காப்புச் செயற்பாடாகும். இதற்கான அரசியல் தற்காப்பு அரசியல். வட்டுக்கோட்டை மாநாடுவரை தமிழ்த் தேசியத்தின் தற்காப்பு அரசியல் மதசார்பற்றதுதான். பல குறைபாடுகளை உடையதாக இருந்தாலும் இம்மதசார்பின்மைக் கொள்கை முற்போக்கானதுதான். இராமநாதன் அவர்கள் தனது முன்முயற்சியில் இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைத்த போது கூட மதசார்பின்மையையே பின்பற்றினார். இதன்படி பார்த்தால் சைவ மறுமலர்ச்சி இயக்க தலைவர் ஆறுமுக நாவலர் கூட தேசிய அரசியலில் மதசார்பற்றவர்தான். இது விடயத்தில் இவர் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தை அனகாரிக தர்மபாலா அவர்களைப் போல் செயற்படவில்லை. இதற்காக தமிழர்கள் பெருமைப்படல் நியாயமானதே.

ஆனால், இலங்கைத் தமிழ்த் தேசியம் வட்டுக்கோட்டை மாநாட்டுடன் தமிழீழத் தேசியமாக பரிணாம தேய்வுறுகின்றது. தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒரணியில் பிணைத்து வைக்கும் தன்மை பெற்றிருந்த இலங்கைத் தமிழ் தேசியம் கோலோச்சிய இடத்தில் தமிழ் பேசும் மக்களைப் பிரித்து வைக்கும் தன்மையுள்ள தமிழீழத் தேசியம் கோலோச்ச ஆரம்பிக்கின்றது. இதுவே அகச்சிதைவு தேசியம் எனப்படுகிறது. இவ் அகச் சிதைவு தேசியம் கூட இலங்கை அளவிலான தற்காப்பு அரசியலில் மதச் சார்ப்பற்றதாகவே இருந்து வந்தது. பௌத்த சிங்களத் தேசியத்தைப் போல் செயற்படவில்லை.

சரி, இவற்றை ஒத்துக் கொண்டால் எதற்காக தேசியத்தையும் சைவத்தையும் இணைக்கவேண்டும்?

தேசியம் என்பது எப்போதும் எங்கேயும் ஒரு அரசியல் எதிர்வினை (பதில் வினை) மாத்திரமல்ல. அது  ஒரு முதல்வினை என்பதுவே முக்கியமானது. முதல்வினை என்பது ஒரு தேசமாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சியாகும். முதல்வினை உள்ளிருந்து உருவாவது, அதாவது ஓர் அரசியல்-பொருளாதார மக்கள்-திரள் தம்மை தேசக் கட்டுமானமாக ஆக்கிக் கொள்வதற்கு அவசியமான அகத்(உட்) தயாரிப்புகளைச் செய்தல். முதல்வினை அக முரண்பாடுகள் சார்ந்தது. முதல்வினை சுய உருவாக்கத்துக்கானது. பதில்வினையோ, புற முரண்பாடுகள் சார்ந்தது  தற்பாதுகாப்புக்கானது. முதல் வினை அம்மக்கள் குழுவின் சொந்த முடிவு, பதில்வினையோ புற எதிரியின் செயற்பாட்டிற்கு அமைவான முடிவு. 

இதனால் ஒரு தேசியத்தின் குணவியல்புகளை உருவாக்குவதுவும் வளர்த்தெடுப்பதுவும் அதன் முதல்வினையேயாகும். இக்குணவியல்புகள்தான் தேசியத்தின் உண்மையான தன்மையாகும். அவைதான் அத் தேசியத்தின் நிரந்தரக் குணவியல்புகளாகும். ஆனால், பதில்வினைக் களத்தில் அதாவது தற்பாதுகாப்புக் களத்தில் தேசியம் தனது குணவியல்புகளாக வெளிக்காட்டிக் கொள்ளும் குணவியல்புகள் தந்திரோபாயங்களேயாகும். இத்தந்திரோபாயங்களில் சில உள்ளதை உள்ளபடியே காட்டுவதாக இருக்கலாம். சில உள்ளதைக் காட்டாமலே இருக்கலாம். இன்னும் சில உள்ளதை வேறொன்றாகக் காட்டுவதாகவும் இருக்கலாம். இதையே பசுத்தோல் போர்த்திய புலி என்பார்கள் அல்லது புலித்தோல் போர்த்திய பசு என்பார்கள்.

இவ்வித பசுத்தோல் தன்மையுடைய மதச்சார்பின்மைக்கான காரணம்:

தமிழ்த் தேசியங்களின் ‘மதச்சார்பின்மைக்கு’  சைவ ஆளும் வர்க்கமும் கிறிஸ்துவ ஆளும் வர்க்கமும் முதல் வினையாற்றுவதில் ஒன்றுபட்டிருந்ததுவும் ஒரு காரணமாகும். இவர்கள் இருவரும் பிரித்தானிய தரகர்களாக இருந்தமை மற்றைய காரணமாகும். இதில் முதலாவதே பிரதான காரணமாகும். சைவ மறுமலர்ச்சி இயக்கம் ஆங்கில மொழிக்கோ, கிறிஸ்துவ மதத்திற்கோ எதிரானதாக அமையவில்லை மாறாக ஆரியத் தொன்மைக்கும், யூதத் தொன்மைக்குமிடையில்  பொது அடையாளங்களைத் தேடும் முயற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தது. பிரித்தானியர்களிடம் நற்பெயரெடுக்க இத்தேடல் உதவியாக இருந்து வந்தது. யாழ் குடாநாட்டில்  நிலவிய சாதி அமைப்பையும், அதைப் பேண உதவிய தேச வழமையையும், வெள்ளையர்களைப் பகைத்துக் கொள்ளாத முறையில் பாதுகாப்பதே இந்நட்பின் பிரதான குறிக்கோளாக இருந்து வந்தது.

சைவ ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கிறிஸ்துவர்களாக மாறியது, கண்டு கொள்ளப்படவில்லை. அது ஒரு வர்க்க சமரசமாகவே கருதப்பட்டது. ஆகவே மதம் மாறியவர்கள் சாதியத் தூய்மையிழந்தவர்களென்ற படிமம் யாழ்பாணத்தில் உருவாக்கப்படவில்லை. மதம் மாறிய வெள்ளாள வர்க்க மேட்டுக் குடியினர்  நிர்வாகத்துறையில் நல்ல பதவிகளும் பெற்றார்கள் . மதம் மாறாதிருந்த சைவ வெள்ளாள வர்க்க மேட்டுக்குடியினரும் இதற்குச் சளைத்தவர்களாக இருக்கவில்லை. பிரித்தானிய நிர்வாகத்துடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு மத பேதமின்றி பர்மா, சிங்கப்பூர், பிரித்தானியா என்று விரிந்திருந்தது.

ஆகவே ஒரு தேசியத்தின் உண்மைக் குணவியல்புகளை அறிந்து கொள்ளவேண்டுமானால் முதல் வினைக் களத்தில்தான் அலசித் தேட வேண்டும். பதில் வினைக் (எதிர் வினை) களத்தில் தேடக்கூடாது. தமிழ்த் தேசியத்தின் மத சார்பின்மை பசுத்தோல் போர்த்திய புலியேயாகும். இக்கொள்கை பதில் வினைக் களத்தில் வினைபுரிவதற்கு அவசியமான ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான ஒரு உருவ மறைப்பேயாகும். முதல் வினைக்களத்தில் தமிழ்த் தேசியத்தின் செயற்பாட்டை நோக்குவோமானால் தமிழ் தேசியத்தின் உண்மைக் குணவியல்பு தமிழ் வெள்ளாள சைவத் தேசியந்தான் என்பது புரியும்.

இன-சாதி-மதவாதத் தேசியம்

இதனாலேயே தமிழ்த் தேசியமானது தேசியவாத படிமங்களுள் அமிழ்ந்திராத படித்தவர்களாலும், தமது வாழ்நிலையைப் புரிந்து கொண்ட பாமரர்களாலும் யாழ்மையத் தேசியம் என அழைக்கப்படுவது வழமையாக உள்ளது. இது பற்றி சற்று விரிவாக நோக்குவோம். வடபகுதித் தமிழர், கிழக்கு மாகாணத் தமிழர், மலையகத் தமிழர், இஸ்லாமியர் எனும் நான்கு தனித்துவ சமூகக் குழுமங்களினதும் பொதுவான அரசியல் பொருளாதாரக் கட்டுமானம் ஒன்றேதான் எனும் கருத்தையே தமிழ்த் தேசியவாதிகள் 50 களின் முற்பகுதியில் இருந்து முன்வைத்து வருகின்றனர். அரசிய – பொருளாதார ரீதியாக இவ்விதமான பொதுக் கட்டுமானம் ஒன்று இன்று வரை உருவாகவில்லையானாலும் பொதுவான அரசியல் கட்டுமானம் ஒன்று வட்டுக்கோட்டை மாநாடு வரை நீடித்தது. இது சிங்கள ஏகபோகத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட தேசியங்களின் ஒரு அரசியல் ஐக்கிய முன்னணியே யாகும். வடபிரதேசமே இவ் அரசியல் முன்னணிக்குத் தலைமை தாங்கியது. தமிழ்த் தேசியர்கள் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாதுவிட்டாலும் இதுவே உண்மை. நாற்பது வருடங்கள் கழிந்தும் தேசிய அரசியலில் வலுமிகு, யாழ்-வெள்ளாளருக்குச் சமனாக பிற தேசியங்களோ, தமிழ்ப் பிரதேசங்களோ வளரவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?

தேசியமாக உருவாவதற்கான முதல் வினையாற்றலில் (யாழ்பிரதேசம்) பிரித்தானியர் காலத்தில் இருந்தே தீவிர ஈடுபாடு கொண்டதாக இருந்து வருவதே இதற்கான பிரதான அகநிலைக் காரணியாகும். தனித்துவ மிக்க புறநிலைக் காரணிகளும் இருந்தன. பிரித்தானிய காலனியல் காலத்தில் இருந்து சிங்கள தேசியத்தின் எழுச்சி வரை கல்வித் துறையிலும், நிர்வாகத் துறையிலும் யாழ் வெள்ளாளர் முழு இலங்கைக்கும் முன்னிலை வகித்தது முக்கியதுவமிக்க புறக்காரணியாகும்.

இவர்கள் நிர்வாக சேவைத் துறைப் புலமையாளர்களாகவும், காலனியல்-சிவில் நிர்வாகச் சேவையில் உயர் நிலையில் இருந்த கடைநிலை வரையான அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் இருந்து வந்தார்கள். காலனியல் சட்ட நுணுக்கங்களில் ஞானம் மிக்கவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் விற்பன்னர்கள், பிற பிரித்தானிய காலனியல் நாடுகளுக்குச் சென்று அறிவுத் தொழில் புரிந்து செல்வமீட்டி வந்தவர்கள், கல்வித்துறையில் முதலீடு செய்வதிலும், கல்வியை மூலதனமாகக் கொள்வதிலும் திறன் மிக்கவர்கள் ஆனால் தாம் ஈட்டிய செல்வத்தை தொழில் முதலீடாகக் கையாளும் திறனில் பின்தங்கியவர்கள். இப்படிப்பாளிகளின் தோற்றம் டச்சுக்காலமாகும்.
ஆனால் முதல் வினையாற்றுவதற்கான ஆற்றல் பெற்றிருந்தமைக்கு இது ஒரு காரணியாக இருந்ததே தவிர, முதல் வினை ஆற்றுவதற்கான அடிப்படைக் காரணியாக இருக்கவில்லை. அடிப்படைக் காரணி எந்த வெள்ளையராலும் புறத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதல்ல. அது தமிழ்நாட்டு வெள்ளாளர்களால் கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாண நில உடமையாளர்களாலும், அடிமை உடமையாளர்களாலும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்ததொரு ‘புனித’ யாழ்ப்பாணச் சரக்காகும். அந்தச் சரக்குதான் சைவ சித்தாந்த அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்ட யாழ்-சமூகக் கட்டுமானமாகும். சுரண்டலுக்கும், அதிகாரத்துக்கும், துணைபுரியும் இவ்வளவு அருமையான இவ்வளவு மதி நுட்பமான ஒரு ஆளும் வர்க்கச் சித்தாந்தம் இலங்கையின் எப்பிரதேசத்தவரிடமும் இல்லை. `சோழர்கள் எமக்களித்த சீதனமான` சைவ சித்தாந்தம் பற்றி மிக விரிவாக இனி வரும் பகுதிகளில் நோக்குவோம்.

ஆறுமுக நாவலரை ஒரு சைவ மத மறு சீரமைப்பு வாதியாக மட்டும் கருதுவது தவறு. இது அவரைக் குறைத்து மதிப்பீடுவதாகும். தமிழ் சைவ வெள்ளாளத் தேசியத்தின் கண்ணோட்டவியல் தலைவர் அவர்தான். சைவத்தையும், தமிழ்த் தேசியத்தையும் இணைத்த தத்துவார்த்த ஆசானும் அவர்தான்.

சரி, வட்டுக்கோட்டை மாநாட்டின் பின்னர் யாழ்-மையவாத இலங்கைத் தமிழ் தேசியம் என்னவானது?

தமிழீழம் எனும் அகச்சிதைவுக் கோட்பாடு தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்ததையும், இதன் விளைவாக இலங்கைத் தமிழ்த் தேசியம் எனும் பசுத்தோல் போர்த்தியிருந்த யாழ்-மையவாத தேசியம் எனும் புலி இன்று பிற தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நிற்பதையும் யாவரும் அறிவர். பேசப்படும் இப்பொருளை விடுத்து பேசாப் பொருளுக்குப் போவோம்.

முஸ்லீம் மக்களை  அடித்துத் துரத்தியதை, ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவித்து விட்டதாகத் தான் பேசப்படுகிறதே தவிர, மதச்சார்பின்மையுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுவதில்லை.

அதாவது இது ஒரு நடைமுறைத் தவறாகத்தான் பேசப்படுகிறதே  தவிர  கொள்கைத் தவறாகப் பேசப்படுவது அரிதாகவே உள்ளது. பேசுவோம், மதச்சார்பின்மை எனும் பசுத்தோல் அப்புறப்படுத்தப்பட்டதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறலாமா? நிச்சயப்படுத்த முடியாது. ஆனால் அந்தக் கோணத்திலும் சிந்திக்கவேண்டும் என்றும் சிலர் கூறலாம். கட்டுரை ஆசிரியரின் கருத்து அதுவல்ல, என்பதேயாகும். அவ்விதமானால் மேலே, முற்பகுதியில் மதச்சார்பின்மை இருந்தது என்றும் அது மெச்சத்தக்கது என்றும்  கூறியது தவறாகுமா? மதச்சார்பின்மை என்ற பதம் இன்று எந்தச் சமூக நிகழ்வைக் குறிக்கிறதோ அந்த அர்த்தத்தை ஏற்றுக் கொண்டுதான் மதசார்பின்மை மெச்சத்தக்கதே என்று கூறப்பட்டது. ஆனால் மதச்சார்பின்மைக்கு என்ற பதத்திற்கு இன்று வழக்கில் உள்ள கருத்து தவறானது. மதம், சார்பு என்ற இரு சொற்களுக்கு நடைமுறையில் என்ன கருத்து உள்ளதோ அதை வைத்துக் கொண்டே தற்போதைய கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு அரசு அல்லது ஒரு கட்சி எந்த மதத்தையும் சாராமல் நடுநிலையாக நிற்றலும், மத நிறுவனங்களுக்கு அரசு அதிகாரத்தில் உள்ள தொடர்புகள் அனைத்தையும் நீக்கி விடுவதுமே மதச் சார்பின்மை என்றே  புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல.

சமூக விழுமியங்களையும் ஒழுக்க நெறிகளையும் தீர்மானிப்பதில் மதத்திற்கோ, மத நிறுவனங்களுக்கோ எந்த உரிமையும் கொடாது விடலே மதச் சார்பின்மையாகும்.Secular  எனும் சொல்லுக்கு மதச் சார்பின்மை எனும் பெயர் வைத்தது மிகத் தவறு. இவ் அர்த்தத்தில் நோக்கினால்  இந்து மதத்தில் இருந்து நால்வர்ணக் கோட்பாடு நீக்கப்படவேண்டும், புண்ணியம்-பாவம் மோட்சம் – நரகம், இறுதிக்கால விசாரணை, தண்டனை, திருமணத்துக்கும், சாவு வீட்டிற்கும் குருமாரின் அருள் பெறுதல் அவசியம் போன்ற அனைத்து ஒழுங்குமுறைகளும் நீக்கப்படவேண்டும். எந்த மதமும் இவ் ஒழுங்குமுறைகளை நிர்பந்திக்கக் கூடாது. மத நிறுவனங்கள் இவ்வித கடமைகளில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும். மதம் தனிமனிதர்களின் நம்பிக்கை, அந்நம்பிக்கையை சமூகத்தின் பொதுவிதியாக மாற்ற முற்படக் கூடாது. மக்கள் தாமாக மனமுவந்து வழங்கும் காணிக்கைகளைத் தவிர வேறு எந்த வருமானமும் மத நிறுவனங்களுக்கு  இருக்கக்கூடாது. இந்த காணிக்கைகள் கூட மத நிறுவனங்கள் தத்தமக்கென்று உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கை கட்டுமானங்களைக் காட்டி பயமுறுத்திப் பெறுபவைகளாக இருக்கக்கூடாது. நாஸ்தீகப் பிரச்சாரங்களுக்கு எந்தப் தடங்கல்களும் யாராலும் செய்யப்படக் கூடாது. இவைதான் செக்குலரிசமாகும்.

அரசோ, அரசியல் கட்சிகளோ எந்த மத நிறுவனத்தையும் சாராது இருப்பது மட்டும் செக்குலரிசமல்ல. வேண்டுமானால் அது மதச் சார்பின்மையாக இருக்கலாம். ஆனால் செக்குலரிசம் அல்ல. சைவம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் ஒரு போதும் செக்குலரிசத்தை ஏற்றுக் கொள்ளமாட்டா. அதிலும் சாதிய அமைப்பைக் கட்டிக் காக்கும் மதமாக இருக்கும் சைவமே செக்குலரிசத்துக்கு எதிராகப் போராடும் போர்த் தளபதியாக இருக்கும். காரணம் பிற இரு மதங்களும் சாதியமைப்பை மதக் கோட்பாடாகக் கொண்டவையல்ல. இதனால் முதலாளித்துவ சமூக மாற்றத்தைக் கூட சைவ சித்தாந்தம் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
நிலப்பிரபுத்துத்தை கட்டிக் காத்து வந்த கிறிஸ்த்துவத்தின் விழுமியங்களை அழிப்பதற்காக, தனது வளர்ச்சி நிலையில் இருந்த ஐரோப்பிய முதலாளித்துவம் ஏந்திய சித்தாந்த ஆயுதமே செக்குலரிசமாகும்.

ஆனால் இன்றோ நிலப்பிரபுத்துவ விழுமியங்களில் தங்கியுள்ள தரகு முதலாளித்துவ கட்சிகளும், அரசுகளும் மதத்தையே தமது பிரதான சித்தாந்த ஆயுதமாகக் கொண்டுள்ளன. இருந்தும், பல மதப்பிரிவுகள் வாழும் நாட்டில் மதக் கலவரங்களை தடுப்பதற்காக மதச் சார்பின்மைக் கோட்பாட்டைப் பின்பற்றுவதாக பாசாங்கு செய்கின்றன. பல மதப்பிரிவுகள் வாழும் ஒரு நாட்டில் தரகு முதலாளித்துவ அரசும், தரகு முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் ஏதோவொரு மதத்தை சார்ந்தே இயங்குகின்றன. அரசியல் கட்சிகள் இவ்விதம் வேடம் போடுவதற்கு பாராளுமன்ற ஜனநாயகமும் ஒரு காரணமாக உள்ளது.வாக்குப் பொறுக்கி அரசியல் அவர்களை இவ்விதம் நடிக்க வைக்கின்றது.

யாழ் ஆளும் வர்க்கம் தமிழ்த் தேசியத்துள் முதல் வினையாற்றல்  என்ற நிகழ்வுப்  போக்கையும் தமிழ்த் தேசியத்தின் ஊடாக பதில் வினையாற்றல் என்ற நிகழ்வுப் போக்கையும் நடத்திக் கொண்டே வந்தது. ஆனால் கல்வி சார் நடுத்தர வர்க்கத்தின் போர்க் குணமின்மையினாலும், ஊசலாடல் தன்மையினாலும் இவ்விரு நிகழ்வுப் போக்குகளும் மிகவும் மந்தமான முறையிலேயே நடந்து வந்தன. ஆனால் புலிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் வினையாற்றல், பதில் வினையாற்றல்  ஆகிய இவ்விரு நிகழ்வுப் போக்குகளும் துரிதமடைந்தன. தமிழீழ அரச, அரசாங்க கட்டுமானங்கள் நிறுவப்பட்டன. இவை முதல் வினையாற்றலின் நிகழ்வுப் போக்குகளாகும். எதிரியுடனான யுத்தமும் பெரியளவில் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இவை பதில் வினையாற்றலின் நிகழ்வுப் போக்குகளாகும். இவை எல்லோரும் அறிந்தவை. இவற்றை போற்றுவாரும் உளர், தூற்றுவாரும் உளர். போற்றலும், தூற்றலும் தொடர்கிறது. ஆனால் புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட முதல் வினையாக்கத்தில் மிக முக்கியமானது யாழ்ப்பாணத்தின் சமூக  அதிகார அடுக்கில் மாற்றத்தைச் செய்ய முற்பட்டதாகும். இம்முயற்சி யாழ் சமூகக் கட்டுமானத்தின் வடிவையே மாற்றுவதற்கானதாகும்.

இது ஓர் அடிப்படை மாற்றமல்ல, நிலவும் கட்டுமானத்தை குலைத்து புதிய கட்டுமானத்தை ஆக்குவதல்ல ஒரு சமூகப் புரட்சியல்ல, ஆனால் முற்போக்குமான சமூக சீர்திருத்தமாகும். கரையார் சமூகத்தினரை, அதிகாரத்துவ அடுக்கின் உச்சநிலைக்குக் கொண்டு வர எடுத்த முயற்சியே இதுவாகும். இம் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருந்தால், தமிழ்த் தேசியத்தின் குணவியல்பு பாரிய மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும். தமிழ்-சைவ-வெள்ளாளத் தேசியம், தமிழ் – சைத்திரியர் தேசியமாக மாறியிருக்கும் அல்லது வெள்ளாள – சைத்திரிய கூட்டுத் தேசியமாக மாறியிருக்கும். மாற்றம் நன்றாகத் தான் இருந்திருக்கும்.  ஆனால் இம்மாற்றத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்திய மாற்றத்தை தக்க வைக்கவும் பாசிச வன்முறை தமிழ் மக்கள் மீது எல்லையற்று பாய்ந்திருக்கும்.  கம்பூச்சிய படுகொலைக் களங்கள் யாழ்குடா நாட்டிலும் ஏற்பட்டிருக்கும். எப்படியோ இந்த மாற்றத்தை  தமிழ் – சைவ – வெள்ளாளத் தேசியம் தடுத்தி நிறுத்தி விட்டது. அத்தேசியம் வெள்ளாள-சைத்திரிய கூட்டைக் கூட அனுமதிக்கத் தயாராய் இல்லை. இயக்க மோதல்களை இந்தப் பின்னணியில்  புரிந்து கொள்ளல் அவசியம். அவனைப் பிடித்து இவனைப் பிடித்து அலுவல் பார்த்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் முதல் வினையாற்றலின் விளைவா? அல்லது பதில் வினையாற்றலின் விளைவா?  அதாவது அது தமிழீழ உள்நாட்டுப் போரின் விளைவா? அல்லது இலங்கையின் உள்நாட்டுப் போரின் விளைவா? என்பதைப் புரிய அதிக காலம் எடுக்காது.

சைவம் பற்றிய விளக்கத்திற்குப் போகும் முன்னர் தமிழ்-சைவ-வெள்ளாளத் தேசியத்தின்  முதல் வினை நடவடிக்கைகள், யாழ்பாணத்துள் இத்தேசியத்திற்கு எதிரான மக்கள் திரள் ஒன்றை உருவாக்கி வரும் வரலாற்றைப் பார்ப்போம்.

தமிழ் – சைவ- வெள்ளாளத் தேசியர்கள் தமது முதல் வினையின் மூலம் புதியதோர் அடக்குமுறை வடிவத்தை யாழ்பாணத்தில் அறிமுகப்படுத்தி வருவதை நோக்குவோம். ஒவ்வொரு சாதியக் குழுமமும் ஒரு வர்க்கத்தின் அல்லது வர்க்கத் தட்டின் மக்கள் திரளாக இருந்த நிலமை இன்று மாறி வருதலே பொதுவான போக்காக இருந்து வருகின்றது. ஒவ்வொரு சாதியக் குழுமமும் தமக்குள் வர்க்கத் துருவச் சேர்க்கை அடைந்து வருகிறது. பஞ்சமர் மத்தியிலும் குடிமைச் சாதியினரிடையேயும், பிற, புற சாதியினரிடையேயும் வர்க்க மேட்டுக்குடியினர் தோன்றி வருகிறார்கள். அதுபோல் மேட்டுக்குடி சந்ததியினரிடையே வர்க்கப் பஞ்சமர்கள் தோன்றி வருகிறார்கள். இதனால் வருங்காலத்தில் சாதியெனும் மக்கள் திரள்களை, வர்க்கத் திரள்கள் என்று கூற முடியாது. முன்னாளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக இருந்தனர் என்று சொல்லக் கூடிய நிலைக்கு சில சாதிப்பிரிவினர் வந்துவிட்டனர்.  அவ்விதமானால் , இவ்வளர்ச்சிப் போக்கினால் சாதி குழுமங்கள் தனியான மக்கள் திரளாக இருப்பதற்கான தன்மையை இழந்து வருகின்றன என்று கருத முடியுமா?

இல்லை. வர்க்க ரீதியான மக்கள் திரளுக்கான தன்மையை இழந்து வரும் அதே வேளையில் புதிய வகை மக்கள் திரளுக்கான தன்மையைப் பெற்று வருகிறார்கள்  என்பதே உண்மை. அந்தப் புதிய வகை எது?

தேசம் எனும் மக்கள் திரள் எவ்விதம் முரண்படும் வர்க்கங்களையும், சமூகத்தட்டினரையும் உள்ளடக்கியதாகவும் உடன்படும் வர்க்கங்களையும், வர்க்கத்தட்டினரையும் உள்ளடக்கியதாகவும் பல இன மத மொழிக் குழுமங்களையும் உள்ளடக்கியதாகவும் உள்ளதோ, அதே போன்றதோர் மக்கள் திளராக சாதி எனும் குழுமம் பரிணாமம் பெற்று வருகிறது. இதுவே அந்தப் புதிய வகை மக்கள் திரளாகும். இதை இவ்விதம் விளங்கிக் கொள்வோம். ஒவ்வொரு சாதிக் குழுமத்திலும் உள்ளடங்கியுள்ள வர்க்கக் கூறுகள் மாற்றமடைந்து வருவது மறுக்க முடியாத உண்மை. அதே வேளை சமூகத்தின் ஒட்டு மொத்த அதிகாரமும் இன்னமும் மேட்டுக்குடி சாதியினரின் மேல் தட்டு வர்க்கத்தினரின் கைகளில் தான் உள்ளது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இதனால் காலனியல் அடக்குமுறை இன்னமும் தொடர்கிறது. காலனியல் கால மிலேச்சத்தன வடிவத்திலோ, அல்லது நவ காலனியல் கால அரை மிலேசத்தன வடிவத்திலோ, அல்லது நவீன தாரளவாத பொருளாதாரத்திற்குப் பொருத்தமான நவ-மிலேச்சத்தனமாகவோ தொடர்கிறது. சாதி அடக்குமுறையினதும்,  ஓரங்கட்டலினதும் வடிவம் மாத்திரமல்ல குறிக்கோளும் மாறுகிறது. முன்னர் சாதியடக்குமுறை ஒரு தொழில் அடக்குமுறையாக இருந்தது. அடக்கப்படுவோரின்  உழைப்பின் உபரியை தமதாக்கிக் கொள்வதே ஒடுக்குமுறையாளர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் தற்போதோ இது  இரண்டாம் பட்சமான குறிக்கோளாக மாறியுள்ளது.

சைவசித்தாந்தம்

சைவசித்தாந்தம் தமிழ்நாட்டின் தயாரிப்பு என்றோர் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் வடக்கில் இருந்து வந்த சித்தாந்தத்தமே. வடக்கில் வேதாந்தத்தில் ஏற்பட்ட ஒரு தத்துவார்த்த சீர்திருத்தமே சிவ வழிபாடாகும். வேதத்தை ஜனரஞ்சப்படுத்துவது அல்லது வேதத்தை பிராமணர்களின் கைகளில் இருந்து விடுவித்து அதை அவேதர்களிடையே ஜனரஞ்சகப்படுத்துவதே இம் மதச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும்.

“கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் குஜராத் மாநிலத்தில் காரோஹணம் என்ற ஊரில் பிறந்த லகுளீசர் என்பவர் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தார். இவரது சித்தாந்தம் பாசுபத சித்தாந்தம். இதில் காளாமுகம், காபாலிகம் என்ற பிரிவுகளும் உண்டு.காரோஹணம் என்ற ஊர் சிவலிங்க வழிபாட்டின் முக்கியத் தலமாக விளங்கியது. பாசுபதச் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்களும் காரோஹணம என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டன. தமிழகத்தில் நாகைக் காரோஹணம், காஞ்சிக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம் என்ற சைவத்தலங்கள் இருந்ததை அப்பர் குறிப்பிடுகிறார். முதலாம் மகேந்திரவர்மன் தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில் காஞ்சியில் காபாலிகர் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். எனவே அப்பர் காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ பாசுபதம், காளாமுகம், காபாலிகம் ஆகிய லிங்க வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்ட மதங்கள் தமிழகத்தில் நுழைந்திருக்க வேண்டும்.

லகுளீசருக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய லிங்க புராணம், லகுளீசத் தத்துவத்தின்படி இறைவனை எம்முறையில் வழிபட வேண்டும், இறைவன் எத்தன்மை உடையவன் அவனுடைய பெயர்கள், எந்தெந்த பொருட்களினால் சிவலிங்கம் செய்து வழிப்படலாம் என்பன போன்ற விவரங்களைக் கூறியிருக்கிறது. பாசுபத யோகத்தையும் லிங்க புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. எனவே பாசுபதர்கள் யோகிகள் என்பது தெளிவாகிறது.
லிங்க புராணம் சிவனை ருத்ரன் என்று வர்ணிக்கிறது. சிவன் திரிசூலத்தை உடையவன் என்றும் எட்டு வகை ஆயுதங்களை உடையவன் என்றும் கூறுகிறது.

மகாபாரதத்திலும் ருத்ரன் தக்கனுடைய யாகத்தை அழித்தது பற்றி கூறப்பட்டிருக்கிறது. வேதங்களும் ருத்ரன் கொடிய ஆயுதங்களைத் தாங்கியவன் என்றும் வேள்விகளை அழிப்பவன் என்றும் கூறுகின்றன.
வேத, உபநிடதங்களில் கூறப்பட்ட ருத்ரன், வேதங்களில் வேத வேள்வி செய்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறைவன் அல்லன். சமகாலத்தில் ஆரியரல்லாத மக்களால் வணங்கப்பட்டவன் ருத்ரன். அதனால்தான் அவனைக் கொடியவனாகவும், தாழ்ந்தவனாகவும் வேதங்கள் சித்தரித்துக் கூறின.பின்னர் உபநிடதங்களும், பிராம்மணங்களும் ருத்ரனை முழு முதல் கடவுளாக ஏற்றுக் கொன்டன. இந்த ருத்ர வழிபாட்டு முறையைத் தான் கி.பி.2-ஆம் நூற்றாண்டில் லகுளீசர் புதுப்பித்தார். பாசுபத சைவம் என்னும் சைவ மறு மலர்ச்சியை ஏற்படுத்தி லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தார். இந்தக் கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியது தான், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோர் உருவாக்கிய சைவ மதமாகும் (சோழர் ஆட்சியில் அரசும் மதமும் -ஆ. பத்மாவதி).

சைவமும் வேதத்தின் ஒரு பிரிவுதான். சைவம் தமிழர்களின் படைப்பல்ல, தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதுமல்ல, அதுவும் வட இந்திய இறையியலின் தொடர்ச்சி தான். சைவத்தின் தோற்றம் பற்றி டாக்டர்.அ.பத்மாவதி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

“சோழர் ஆட்சி தொடங்குவதற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர், கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த அப்பரும், ஞானசம்பந்தரும் பக்தி இயக்கத்தை உருவாக்கினர். இந்தக் கால கட்டம்தான் பக்தி இயக்கக் கால கட்டம் என்றழைக்கப்பட்டது. வட நாட்டில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் செல்வாக்குப் பெற்று வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம் ஆகிய மதங்களின் தத்துவச் சாராம்சங்களையும், அம்மதங்களின் சமண பௌத்த மதங்களுக்கு எதிரான கொள்கைகளையும் வேத உபநிஷதங்களில் ருத்ரம்-சிவன் பற்றிக் கூறியுள்ளகருத்துக்களையும் ஆகமங்கள் கூறுகின்ற சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய தந்திர வழிபாட்டு முறைகளையும் எடுத்துக் கொண்டு இவையனைத்தும் கலந்த ஒரு புதிதான சமயத்தை நிறுவி, தலங்கள் தோறும் மேற்கூறிய கருத்துக்கள் அடங்கிய பாடல்களைப் பாடியவர்கள் அப்பரும், ஞானசம்பந்தரும் ஆவர். சமண பௌத்த மதங்களுக்கு எதிரான கருத்துக்களையும் பாடல்கள் மூலமாக வெளப்படுத்தியதன் விளைவாக மக்களுக்கு அம்மதங்கள் மீது எதிர்ப்புணர்ச்சியை வளர்த்தனர். அதனால் சமணமும் பௌத்தமும் தங்கள் வலிமையை இழந்தன. நசுக்கப்பட்டன. சைவம் பலம் பெற்றது.” (சோழர் ஆட்சியில் அரசும் மதமும் -ஆ. பத்மாவதி பக்கம் 10-11)

சைவ சித்தாந்தத்திற்கும் அரசு கட்டுமானத்துக்கும் இடையேயான உறவு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

“கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்த மெய்கண்டார் என்பவர் ஒரு சிறந்த தத்துவ நூலை எழுதினார். அவர் இந்நூலை எழுதியபோது மூன்றாம் இராஜராஜன் என்னும் சோழ மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.அவர், தாம் எழுதிய தத்துவ நூலில் இறைவனாகிய `பதிக்கும்` உயிர்களாகிய ‘பசு| விற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், வினைப்பயனில்  அழுந்தி பதியிலிருந்து விலகி நிற்க்கும் உயிரானது மீண்டும் ‘பதி| யை அடைய என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், ஆன்மாவின் தன்மைகள் யாவை, வினையின் தன்மைகள் யாவை, பதியாகிய இறைவன் எத்தன்மை உடையவன் என்பது பற்றியெல்லாம் விளக்க முற்படுகின்றார்.

ஆன்மாவானது;
  1. அரசனாகிய இறைவனோடு எப்போதும் ஒன்றாகி நிற்க வேண்டும். 
  2. அரசன் பணியே தன் பணி என்று கொள்ளவேண்டும். 
  3. ‘பசு` வாகிய ஆன்மாவிற்கும் ‘பதி| யாகிய அரசனுக்கும் நடுவே நிற்கும் பாசத்தை நீக்கி அவன் தாளை அடைவதற்கு இறைபணி (அரச பணி) சிறந்த வழியாகும். இந்த இறைபணியே இன்பத்தைக் கொடுக்க வல்லது. அந்த இறைபணியே சிவப்பேற்றினைக் கொடுக்கும். (பக்கம் 169- 170 சோழர் ஆட்சியில் அரசும் மதமும் -ஆ. பத்மாவதி)
மேலும் தொடர்கிறார்;

“இத்தத்துவத்தில் மெய்கண்டார் ‘பதி` யின் தன்மைகளாகக் கூறும் கருத்துக்கள் அரசனுக்கும் பொருந்தி வருவதாக அவர் கருதுகிறார் என்றே தோன்றுகிறது.

  1. தன்னைச் சார்ந்தாரைக் காப்பாற்றுபவன்.
  2. நல்ல குடிமக்களின் துன்பத்தை அரசனே முன்னின்று போக்குவான்.
  3. குடிமக்கள் தீய காரியங்கள் செய்துவிட்ட போதிலும் அவனை வணங்கினால் அவன் அருள் புரிவான். அவன் அருளாகிய அன்பு கிடைத்தால் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியோடு வாழலாம்.
என்ற கருத்துக்களைப் பொதிந்து கூறியிருக்கிறார்.அதுபோல்;
  1. உயிர்களும் அரசன் பணியே தங்கள் பணி என்று நினைக்க வேண்டும்.
  2. அரசன் எச்செயலில் ஈடுபடுகிறானோ அச்செயலையே சார்ந்து நிற்க வேண்டும்.
  3. மன்னனுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க சுயநலம். பேராசை போன்ற வினைகளை ஒழித்து விட்டால் மன்னனின் அருள் பெற்று வாழலாம். மன்னனுக்குச் செய்யும் சேவையே உண்மையான இன்பம். அந்த இன்பமே நிரந்தரமான இன்பமாக அமையும் என்ற கருத்துப்படக் கூறி ஆண்டானாகிய அரசனுக்கு நாட்டு மக்கள் அனைவரும் அடிமையாகி பதி-பசு போல் நிற்கவேண்டும் என்று கூறுகிறார் மெய்கண்டார்.”
இப் பதின்மூன்றாம் நூற்றாண்டு சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்று வந்த காலமாகும்.

“கோயில்களின் சொத்துக்குப் பொறுப்பாளர்களாக-கோயில் நிலங்களின் மேற்பார்வையாளர்களாக- வெள்ளாள நாட்டார்களே நீடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோயில் குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்கக் கூடிய வலிமையும் அவர்களுக்கு இருந்தது. “கோயிலை ஆட்டிப்படைத்த இவர்கள் சர்வ வல்லமை உள்ளவராக விளங்கினர். அவ்வாறு இருந்தபடியாலேயே கோயிற் பட்டர்கள், வெள்ளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றனர். கோயிலின் பேரில் சாதாரண மக்களைத் தண்டிக்கவும், நிலங்களை விற்கவும், அடிமைகளாகப் பெறவும் நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. சோழப் பேரரசிலேயே மிகப் பெரிய குற்றங்கள் இராசத் துரோகமும், சிவத் துரோகமுமாகும்.
கோயில் பொறுப்பாளர்களாகிய நாட்டார்கள் கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விடும்போது சிவனடியாராகிய சன்டேஸ்வரரே குத்தகைக்கு விடுவதாகப் பத்திரம் எழுதினர். குத்தகை எடுப்போர் தாங்கள் கடவுளின் நிலத்தையே குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்ற உணர்வை ஏற்படுத்த இம்முறை பயன்பட்டது.”

பக்தி இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று. மக்கள் கண்டு உணர்ந்து பரவச நிலையடையக் கூடிய உருவ வழிபாட்டை உருவாக்குவதாகும். மக்களின் சிந்தை ஒரு உருவை நோக்கிக்  குவிக்கப்பட்டது. அந்த உருவந்தான் அந்தப் பொருள்தான்  சிவன். இந்த உருவ வழிபாடுதான் மக்களை அதுவும் பாமர மக்களை ஒரு பரவச நிலைக்கு ஆளாக்கவல்லது. இந்த சிவன் எனும் குறியீடு தொன்மைக்கால அவேதர்களின் வீரபுருஷனின் குறியீடாக இருந்தது. இவன் மக்களின் கதாநாயகன், மக்களின் நண்பன். மக்களின் நண்பன் என்ற முன்னைய படிமத்தை பயன்படுத்தியே எஜமானிய சிவனை உருவாக்கினார்கள். பின்னர் இப்படிமம் மன்னனைப் பற்றிய படிமமாகியது. சைவர்களுக்கு சிவன், வைணவர்களுக்கு விஷ்ணு.

உருவம், அருவம் என்பது பற்றி அடுத்து வரும் பந்தியில் நோக்குவோம். வேதாந்திகளின் உருவமற்ற  அருவமான பிரமனும் ஒரு மாயைதான், சைவர்களின்  உருவமான சிவனும், வைணவர்களின்   உருவமான விஷ்ணுவும் மாயைகள்தான். பிரமம் எனும் மாயைக்கு சமூக அதிகாரம் கொடுப்பதற்காக வேதாந்திகள், உண்மையான உயிர்களையும், உலகத்தையும் மாயைகள் ஆக்கினார்கள். இதன் மூலம் உண்மையான உலகையும், உயிர்களையும் அதாவது உருவங்களை மாயை எனும் இறைவனுக்கு, அதாவது உருவமற்ற  அருவத்துக்கு அடிமையாக்கினார்கள். மறுபக்கத்தில்  பக்தி இயக்கமோ சிவனெனும் மாய உருவத்தை வைத்தே பசு (ஆன்மா) எனும் மாயையைத்  தோற்றுவித்தது. இதன் மூலம் உண்மைப் பொருளான மனிதன், மாயப்பொருளான பசுவாகவும் (ஆன்மா), உருவமற்ற மாயப்பொருள்  சிவனாகவும் (பதி) மாற்றப்பட்டான்.  இதைச் செய்து முடிப்பதற்காக பக்தி இயக்கமானது களப்பிரர்களினது ஆளுமைக்கு உட்பட்டிருந்த பௌத்த, ஜைன மத மன்னர்களையும்  பார்பானியர்களினதும் ஆளுமைக்குட்பட்டிருந்த வைதீக  மன்னர்களையும், எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டியது.

பண்பாட்டுக் கட்டுமானத்தில் நடந்த இந்த நிலப்பிரபுத்துவ எழுச்சி- கலாச்சார புரட்சி- கடுமையான வாத விவாதங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.  பல்லவர்களின் படைகளுக்கு துணை போவது என்ற நிலையையும் தாண்டி சைவ சித்தாந்தவாதிகளும் அவர்களின் தலைவர்களான நாயன்நார்களும் தாமே வன்முறையாளவர்களாகவும் இருந்தார்கள். பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்த நாயன்மார், சிவனைப் பழிப்பவர்களின் நாவை வெட்டி அறுத்த நாயன்மார், நாயன்மாரையே உயிருடன் எரித்த நாயன்மார், கண் பிடுங்கிக் கொடுத்த நாயன்மார் என வன்முறைப்பட்டியல் நீள்கிறது. அரச பயங்கரவாதிகளினதும், அரசு எதிர்ப்புப் பயங்கரவாதிகளினதும் புலனாய்வுத்துறை; முகாம்களில்  இரகசியமாக நடைபெறும் வன்முறைகளை நாயன்மார்கள் வெளி வெளியாகவே நடத்தினர். பக்தி இயக்கம் கூட்டு வன்முறையிலும் ஈடுபட்டது. ஜைனர்களும், பௌத்தர்களும் கழுவேற்றப்பட்டார்கள். பௌத்த, ஜைனப் பள்ளிகள் மட்டுமல்ல துறவிகளும் தீக்கிரையானார்கள்.  குடும்ப சதி, அரண்மனைச் சதி ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் கொல்லப்பட்டார்கள். இராச்சியங்கள் கைமாற்றப்பட்டன.
பக்தி இயக்க கால வன்முறை கோழைத்தனமானதாகவும், காட்டுமிராண்டித்தன்மை பெற்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகவும் ‘நேர்மை’ அற்றதாகவும் இருந்தது. நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்துக்கு பணிந்தும், பயந்தும் வாழும் போக்கை உருவாக்க பக்தி  இயக்கத்தினர் பயங்கரவாதத்தையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதாவது மக்கள் அச்சுறுத்தி வைக்கப்பட்டனர். பயங்கரவாதத்தின் குறிக்கோள் மக்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி வைப்பதுதான்.

மக்கள் நிலப்பிரபுத்துவ கட்டுமானத்துடன் பகைபட வாழ்வது ஆரோக்கியமான வாழ்வாக இருந்திருக்கும். அப்போதுதான் மக்கள் தமக்குள் இசைபட வாழ்ந்திருக்கமுடியும். ஆனால் பக்தி இயக்கமோ மக்கள் நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்திற்கு அடி பணிந்து வாழும் போக்கை ஏற்படுத்தியது. அதற்காக மக்கள் தமக்குள் பகைபட வாழ வழிநடத்தப்பட்டார்கள். பிற மதங்களுக்கு எதிராக பக்தி இயக்கம் வன்முறையைப் பிரயோகித்ததன் நோக்கம் அதுவேயாகும்.
பயங்கரவாதத்திற்கு இரு நோக்கங்கள் உண்டு. ஒன்று மக்களை அச்சுறுத்துவது. இதுதான் பிரதானமானது, மற்றையது மக்கள் தமக்குள் பகைபட வாழலை ஊக்குவிப்பது. பக்தி இயக்கம் இந்த இரண்டு கடமையையும் கச்சிதமாக நிறைவேற்றியது.

நாம் யார்க்கும் அடிமையல்லோம்  என்று முழங்குவதன் மூலம் மக்களுக்கும் மன்னனுக்கும் இடையே  இருந்த உறவை சுமூக உறவாகப் பேணி வந்த கருத்தியல் கட்டுமானத்தைத் தகர்த்தார்கள். வீரயுகத்திற்கு அடுத்ததாக வந்த அறநெறிக்கால கருத்தியல்களே அந்தக் கருத்தியல் கட்டுமானதாகும். நாம் நன்கு அறிந்த திருக்குறளும், கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரும் இக்கருத்தியல்  கட்டுமானத்தை உருவாக்கிய நூல்களில் சிறப்பானவையாகும்.

அறநெறிக்கால கருத்தியல் கட்டுமானத்தைத் தகர்ப்பதன் மூலம், தமிழ்நாட்டின் பண்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு எதிர்புரட்சியை நடத்தினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள் நிலப்பிரப்புத்துவ . அரசியல் கட்டுமானம் தனது குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே பண்பாட்டுக் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்கள்  செய்யப்பட்டுள்ளன. பல்லவர்களின் இராணுவம் களப்பிரர் கால அரசியல் கட்டுமாணத்தைத் தகர்க்க, பக்தி இயக்கம் பண்பாட்டுக் கட்டுமானத்தைத் தகர்த்தது.

ஆனால், பிரமம் (பதி) மற்றும் ஆன்மா (பசு) என்ற இரண்டில்லை, இருப்பது பிரமம் ஒன்று தான் என்றும், அந்த ஒன்றிலிருந்து தான் ஆன்மா உட்பட அனைத்தும் தோன்றியதென்றும், மீண்டும் அவை அந்த ஏக பிரமத்தில் ஒடுங்குகின்றது என்றும், பிரமம் தவிர அனைத்துமே மாயை என்றும் , இந்த மாயமான பிரமம்  ஒரு சடமல்ல, சக்தியுமல்ல அது ஒரு சித்து என்றும் கூறிய  வேதாந்திகளோ அருவ இறைவனைக் கட்டுப்படுத்தும் பிராமணர்களைத் தோற்றுவித்தார்கள். அருவத்தைக் கட்டுப்படுத்த ஒரு உருவம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த உருவத்தைக் கொண்டு மன்னனெனும் உருவத்தை பிராமணர்களுக்கு (இந்த உருவத்திற்கு) அடிமையாக்கினார்கள்.
ஆனால் உருவத்தை அருவமாக்கும் வித்தகம் மிக்க சைவமும் , வைணவமும் உருவமான மன்னனை கட்டுப்படுத்தும் உருவமான பிராமணர்களை ஏற்கவில்லை. பிராமணர்களின் அதிகாரத்துக்கு எதிராக  சைவ இயக்கம் முனைப்புக் காட்டி வந்ததன் காரணமாம் இதுதான்.

பிராமணர்களை ஏற்காத முறையில் சைவமும் வைணவமும் வைதீகத்தை விட உசத்தியாகத் தென்படலாம். ஆனால் இது உண்மையல்ல. வேதர்களின் பிரம்மத்துக்கு ஈடான ஆன்மாவை இவர்களும் ஏற்றுள்ளார்கள். அது எவ்விதம் என்பதை இதற்கு அடுத்ததாக நோக்குவோம்.

சைவமும் வைணவமும் வேதாந்தத்தை முழுமையாக நிராகரித்தவர்களல்ல. “உலகம் உண்மை, உயிர்களும் உண்மை  எனக் கொள்வதால் சைவசித்தாந்திகளைப் போலவே இராமானுசரும், மெய்ம்மைவாதி ஆகிறார். அவர்களைப் போலவே இவரும் ஒரு பன்மைவாதி. வேதாந்திகளைப் போல பிரமாணம் ஆறு எனக் கொள்ளாது சைவசித்தாந்திகளைப் போலவே இராமானுசரும் பிரமாணம் மூன்று என்றே கொள்ளுகின்றார். அன்றியும் வேத உபநிடதங்களை மட்டுமே பிரமாணமாகக் கொள்ளாது. சைவ சித்தாந்திகளைப் போலவே இராமானுசரும் புராணங்களையும் ஆகமங்களையும் பிராமாணமாகக் கொள்ளுகின்றார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சைவ சித்தாந்திகளைப் போலவே இராமானுசரது மதமும் இறைவனுக்கே முதன்மை வழங்கி அவனையே நடுநாயகமாகக் கொண்டு இயங்குகின்றது” (இந்திய தத்துவ ஞானம் பக்330).

வேதாந்திகளின் அடிப்படைக் குணாம்சமான வேத உபநிடதங்களை சைவமும், வைணவமும் ஏற்றுக் கொள்கின்றன. வேறென்ன வேண்டும்.
“சைவ சித்தாந்தக் கோட்பாட்டைச் சமூக வரலாறாக நோக்கும் பொழுது அதன் முக்கிய சமூகப் பண்பாக எடுத்துக் கூறப்படுவது அதன் வேளாளச் சார்பு ஆகும். இவ்வேளாளச் சார்பு சில வேளைகளில் பிராமண எதிர்ப்புத் தொனிகளையுடையதாகவும் காணப்பட்டது.

இந்தக் கட்டத்திலே சைவ சித்தாந்தமானது இராமாநுசர், பசவர் ஆகியோரின் நெறிமுறைகள் போன்று அக்காலச் சமூக அமைப்பு முறைமைக்கு முற்றிலும் எதிரானதாக அமையவில்லை. சைவ சித்தாந்தம், சாதியமைப்பை ஏற்றுக் கொண்டது. ஆனால் சாதியால் வரும் தீட்டு உடலுக்கேயுரியது. அது ஆன்மாவுக்குரியதல்ல என்றது. சரியை, கிரியை, யோகத்துக்கு மேல் உண்மையான ஞானம் பெறுவதற்கு நற்சாதியும் அவசியம் என்றது” (சித்தியார் -275).

சமூகக் கண்ணோட்டத்தில் சைவ சித்தாந்தத்தின் மிக முக்கியமான அமிசம். இது அங்கீகரிக்கும் வழிபாட்டு முறைமைகளும் அது சுட்டும் முத்தி நிலைகளுமாம்.

சைவசித்தாந்தத்தில் வழிபாட்டு மார்க்கங்களாகக் குறிப்பிடப்பெறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குள்ளும் சமூகத்தின் சகல மட்டங்களிலுமுள்ள மக்கள் யாவரும் இடம் பெறுவர். ஆயினும் சரியை பற்றிக் குறிப்பிடும் சிவஞான சித்தியாரின் சுபக்கச் செய்யுளை நோக்கும் பொழுது (செய்யுள் 270) அது கோயிலுக்குட் செல்லத்தக்கவர்க்கே உரியதாகக் கொள்ளப்படதாக உள்ளதெனினும் பெரிய புராணத்திற் பேசப்பட்டுள்ள நாயனார்கள் பலர் கோவிலுட்புக முடியாதவர்களே. சாதி வரன்முறையை ஏற்றுக்கொள்ளும் சைவ சித்தாந்திகள் சாதிகள் உடலோடு அழியும் என்பர்.
சரியை, கிரியை, யோகம் வழியாகப் பெறுவது பதமுத்தி என்பதும் ஞானமே சாயுச்சியத்தை தருமென்பதும் சித்தாந்தக் கொள்கையாகும். இதில் உள்ள முக்கியத்துவம் என்னவெனில் நால் வகையினருக்கும் முத்தி கிடைப்பதை இத்தத்துவம் உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறு உறுதிப்படுத்துகின்ற வேளையில் ஒவ்வொரு படிநிலையிலும் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு முத்திநிலை கிடைப்பதாகவே கூறுகின்றது. இந்த வேறுபாட்டைக் குறிப்பிட்ட சொற்களே நன்கு உணர்த்துகின்றன.

“சாலோகம் என்பது ஒரே உலகம் அல்லது இறைவன் இருக்கும் இடத்தை அடைதல், சாமீபம் இறைவனுக்கு அண்மையை அடைதல், சாரூபம் ஒரே ரூபம், சாயுச்சியம் எனப்படுவது  இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை” (இந்திய தத்துவ ஞானம்) இதனால் முத்திநிலை என்பது எல்லோருக்கும் சமமான நிலை அன்று என்பது புலனாகிறது. மோட்ச ராச்சியம் (The Kingdom of Heaven)எனும் எண்ணக்கருவுக்கும், சைவசித்தாந்தம் கூறும்  முத்திநிலைகட்கும் வேறுபாடு காணப்படுகிறது. பூவுலகத்திலே காணப்படுகின்ற படிநிலை வரன்முறை வேறுபாடு (Hierarchy) முக்தி நிலையிலும் பேணப்படுவது சுவாரசியமான ஒரு சமூக உண்மை யாகும். சைவசித்தாந்தத்தில் உண்மையான பிரதான முக்தி சாயுச்சியமேயாகும். சாலோக, சாமீப , சாரூபமுத்தி நிலைகளைப் பெற்ற ஆன்மாக்கள மீண்டும் பிறந்தே இறுதியில் சாயுச்சிய நிலைய அடையவேண்டுமென்பர்.”
சைவ வைதீகமும் ஆன்மா பற்றிப் பேசுகின்றது. சைவ சித்தாந்தம் ஆன்மாவுக்கு சாதியில்லை. அது உடலுக்கே உரியது என்கிறது. உடல் அழிய சாதியற்ற ஆன்மா விடுதலை பெறும் என்கிறது. அதாவது, சாதியுண்டு ஆனால் அது ஆன்மாக்கில்லை உடலுக்கு மாத்திரமேயுண்டு என்பதுதான் சைவ சித்தாந்தத்தின் கோட்பாடு.  இதனால் தான் சாதி சமத்துவப் போராளிகள் இன்று வரை உடல் நீக்கம் செய்யப்படுகிறார்கள் போலும். அவர்களின் சாதியற்ற ஆன்மா  விடுவிக்கப்படுகிறது போலும். சைவசித்தாந்தத்தை வேதாந்தத்தின் மூத்த புதல்வன் என்று சொன்னால் மட்டும் போதாது, தந்தையை மீறிய தனயன் என்றும் கூற வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு பார்ப்பனியம் ஒரு அந்நியத் தத்துவந்தான். இதனால் அவர்கள் வேதாந்தம் தமது மரபில் இல்லை என நிம்மதி பெருமூச்சு விடக்கூடும். ஆனால் சீர்திருத்தப்பட்ட வேதாந்தந்தான் சைவ சித்தாந்தம். சைவ வைதீகர்களுக்கு எதிரான போராளிகளாகிய சித்தர்கள் பற்றியும் இராமலிங்கர் பற்றியும் கற்போமானால் இது மேலும் புரியும்.

வேதாந்தம் மனித உடலையும், அவ்வுடலுடன் தொடரப்பட்ட அனைத்து பூதங்களையும் மாயை என்று மாயாவாதம் பேசியது. சைவ சித்தாந்தமோ உடலும் அதனால் உணரப்படும் பூதங்களும் உண்மையென்றது. ஆனால், இந்த உண்மைப் பூதங்களை, சைவம் இருகூறுகளாகப் பிரித்தது. தீட்டு உடல்,  தீட்டு பூதங்கள் ஒரு புறம், புனித உடல் புனிதப் பூதங்கள் மறுபுறம் என இரு கூறுகளாக மனித உடல்கள் பிரிக்கப்பட்டன.  ‘அறிவியல் பூர்வமான’ தர்க்கம்!
பார்ப்பானியர்கள் ஆண்டான் அடிமை மதிப்பீட்டில் நிற்க, பக்தி இயக்கத்தவர்களோ நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு நகர்ந்துவிட்டார்கள்.  இதன் மூலம் ஆன்மீகத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டார்கள்.

நன்றி:  எதுவரை on July 7, 2012