Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Sunday 11 August 2013

தேசியமும் மதமும்—02 ஆசிரியர்-கைமண்

நுழைவாயிலில் சில நிமிடங்கள்…….(இப்பகுதி கட்டுரைத்தொடரின் மறைமுக அங்கமாகும். இதனை வாசித்து `தேசியமும் மதமும்-02` இற்குள் செல்வது நல்லது என நாம் கருதுவதால் இங்கே இணைத்துள்ளேன். `எதுவரை` இணையத்தளத்தில் இப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு தனியாக `கருத்துக்கள்` என்ற தலைப்பில் உள்ளது. yakgnam.blogspot)

ஆய்வைத் தொடர்வதில் வாசகர்களின் பங்களிப்பை உயிரோட்டமுள்ள பங்களிப்பாக மாற்றுவது எவ்விதம் என்பது தொடர்பாக என்னிடம் தெளிவான வேலைத்திட்டம் எதுவுமில்லை. தமிழ் இணையத் தளங்களில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் பின்னூட்டல் முறை வினைத்திறன் மிக்கதென நான் கருதவில்லை. ஆக்கபூர்வமான விளவை ஏற்படுத்துவதில் அது ஒரு நேர்மறை விவாத மேடையாக அமையமாட்டாது என்பதே எனது நம்பிக்கையாகும்.ஆனால் நான் அவ் விவாத மேடையையிட்டு எதிர்மறைக் கருத்துகளுடையவனாகவே உள்ளேன் என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறேன்.

அச்சமா? ஐந்தோர் ஐந்து, அஞ்சுவதற்கு அஞ்சு. இது ஐந்தில் பதிந்தது.

அவ்விதமானால் வாசகர்களின் பங்களிப்பை உயிரோட்டமுள்ள பங்களிப்பாக மாற்றுவது எவ்விதமென்ற கேள்விக்கென்ன பதில்? ஒரு யோசனையை எதுவரை இணையத்தள ஆசிரியர் குழுவுக்கும், வாசகர்களுக்கும் இத்தால் பிரேரிக்க விரும்புகிறேன். “தேசியமும் மதமும்- கருத்துப் பரிமாற்றமேடை” என்றோர் தனியான பகுதி இதே இதழில் ஆரம்பிப்பது. இது அனைவரின் பார்வைக்கும் உரியது ஆனால் அனைவரின் பங்குபற்றலுக்கும் உரியதல்ல. வரையறைக்கப்பட்டவர்களிடையேயான கருத்துக்கள் பகிரங்கமாக  பரிமாறப்படும். இதன் செயற்படுவிதிகள் எவ்விதம் இருக்கும் என்பதை உரையாடிக் கொள்வோம்.

முரண்பாடு கொண்ட வெவ்வேறு சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் தமக்குள் விவாதித்துக் கொள்வதால் எந்தப் பலனுமில்லை. அது பிணக்கத்தை வளர்க்குமே தவிர இணக்கத்தை வளர்க்காது.  ஆகவேதான் இது விவாத மேடை என அழைக்கப்படாமல் கருத்துப் பரிமாற்ற மேடையென அழைக்கப்படுகிறது. அத்துடன் இக் கட்டுரை ஒரு தூய தத்துவார்த்தக் கட்டுரையுமல்ல, தூய அரசியல் கட்டுரையுமல்ல. இது தத்துவார்த்த அரசியல் கட்டுரையாகும். வாசகனை குறிப்பிட்ட ஓர் அரசியலை நோக்கி அழைத்துச் செல்லாமல், குறிப்பிட்ட ஒரு தத்துவார்த்தத்தை நோக்கிச் செல்ல வழி சமைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இதில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. வெவ்வேறு தத்துவங்கள் தமக்குள் விவாதித்து கொள்வதற்கான மேடைகளை உருவாக்குவதற்கான தருணம் இதுவல்ல. ஒரே தத்துவ அல்லது ஒத்த தத்துவ அணியைச் சேர்ந்தவர்கள் தமக்குள் சினேக பூர்வமாக உரையாடிக் கொள்வதற்கான தருணமே இதுவாகும்.

வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளுக்கிடையேயான வேறுபாட்டை  விளங்கிகொள்ள சிலநிமிடங்களை ஒதுக்குவோம்.

‘………’ ஒரு குறிப்பிட்ட சிந்தனைப்பள்ளியால் நடத்தப்படும் ஒரு பருவ இதழல்ல. அதேபோல் ஒரு குறிப்பிட்ட அரசியல் கோட்பாட்டின் வழினின்று நடத்தப்படும் ஒரு இதழுமல்ல. இதனால் இவ்விதழின் வாசகர்கள் பல்வேறு சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவர்களையும், எந்த சிந்தனைப்பள்ளியையும் சேராமல் தற்போதுதான் அதற்கான தேடலில் ஈடுபட்டுள்ளவர்களையும், சிந்தனைப்பள்ளியொன்றின் முக்கியத்துவத்தை இன்னமும் புரிந்துகொள்ளாத அரசியல் செயற்பாட்டாளர்களையும்  உள்ளடக்கியதாக இருக்கலாம். அத்துடன் இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகளும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டனவாகவும் இருக்கும். இதனால் ஒரே இதழில் ஒரு சொற்பதம் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கொண்டனவாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இக்காரணங்ளினால் பிரதான அல்லது அடிப்படைச் சொற்பதங்கள் பற்றிய குறிப்புகளை இடையிடையே முன்வைக்கவேண்டியது அவசியப்படும்.( இதழும், வாசகர்களும், எழுதுபவரும் ஒரே/ஒத்த சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சொற்பதங்கள் ஒரு விவகாரமாக இருக்கமாட்டாது.)
சில எடுத்துக் காட்டுகள்:
காலமும் விசும்பும் பற்றிய ஒரு ஆய்வு மாணவன் அது பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடன் வீதியால சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு வழிப்போக்கன் அவ்விளைஞனிடம் நேரம்( time) பற்றி ஒரு கேள்வி கேட்டானம். மாணவன் ஆர்வத்துடன் (Time )காலம்பற்றி விவரித்தானாம். வழிப்போக்கன் சினந்து ஒரு பைத்தியத்திடம் நான் விளக்கம் கேட்டது எவ்வளவு தப்பாகப் போய்விட்டது எனத் தன்னை நொந்து கொண்டு சென்றானாம். அந்த நிலை இக் கட்டுரை வாசகனுக்கும் ஏற்படக்கூடாது.
‘எரியும் பிரச்சனையை’ அணைப்பதற்காக எங்கிருந்தாகிலும்சரி ஒரு சிரட்டைத்தண்ணீராவது கிடைக்காதா எனப் பரபரப்பாக இதய சுத்தியுடன் அலைந்து திரியும் ஒரு தேசியவாதச் செயற்பாட்டாளனுக்கு அவனது எல்லைக்குள் கிணறு தோண்ட/வெட்ட வழிகாட்டினால் என்ன நடக்கும்? மழையில் நனைந்து கொண்டிருக்கும் குரங்கிற்கு கூடு கட்டச்சொல்லி அலோசனை கூறிய தூக்கணாங்குருவி தனது கூட்டையிழந்து தனது குடும்பத்துடன் மழையில் நனைந்த கதை தொடரவேண்டுமா? அந்த நிலை இக்கட்டுரைக்கும் ஏற்படக்கூடாது.
வாசகர்களின் புரிதல்தரம் ஏற்றத்தாழ்வாக இருப்பது ஒன்றும் பிரச்சனையல்ல. அது இயல்பானது. அவ்வேற்றத்தாழ்வைச் சமன்படுத்த பல்வேறு வழிவகைகள் உண்டு. ஆனால் சிந்தனையோட்டத்தில் வாசகர்கள் ஏக தன்மை பெற்றவர்களாக இல்லாவிட்டாலும் ஒத்த தன்மை பெற்றவர்களாகவாவது இருக்கவேண்டும். இதழின் வாசகர்கள் அவ்விதம் இருப்பர் என எதிர்பார்க்க முடியாதெனபது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இவ்வாய்வு நாஸ்தீகப் படையொன்றை உருவாக்கும் முயற்சியா? என  பின்னூட்டலில் ஒரு சந்தேகம் கிளப்பப் பட்டுள்ளது. ‘இலங்கையின் நாஸ்திகம்’, ‘தமிழ்நாட்டின் பகுத்தறிவு வாதமும் பிரிவினையும்’ எனும் உபதலைப்புகள் இவ்வாய்வில் இடம் பெறுகின்றன. அவை நாஸ்தீகம் பற்றி விரிவாக ஆராயும். சிந்தனையோட்டத்தில் ஒத்த தன்மையின் அவசியம் பற்றிக் கூறுவதற்கு நாஸ்தீகம் எனும் பதத்தை எடுத்துக் கொள்வோம். நாஸ்தீகம், Rationalism, மார்க்ஸிஸம் ஆகிய மூன்றூம் ஒரே சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த சிந்தனையோட்டங்களல்ல.
மார்க்ஸிஸத்தை ஒரு அணியிலும் நாஸ்தீகம், Rationalism ஆகிய இரண்டையும் இன்னோர் அணியிலும் வைத்துப்பார்த்தால் இவ்விரு சிந்தனைப் பள்ளிகளும் எதிரெதிர் பள்ளிகளாகவே காணப்படுகின்றன. இவற்றிடையே உள்ள ஒத்ததன்மைகளைவிட ஒவ்வாத் தன்மைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் ஆஸ்திகப் பள்ளியுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது இம்மூன்று சிந்தனை பள்ளிகளிடையேயும் ஒத்ததன்மை காணப்படுகிறது. இம்மூவரும் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக உள்ளார்கள். ஆகவே ஒரு நாஸ்தீகப் பத்திரிகையில் சில வரையறுப்புகளுடன்  Rationalist –உம் மார்க்ஸிஸ்டும் எழுதலாம். அப்பத்திரிகை வாசகர்களும் அதைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு ஆஸ்தீகப் பத்திரிகையில் இவர்களால் எழுதடியாது. ஆஸ்தீகப் பத்திரிகை வாசகர்களும் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
நீதிக்கட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை இவர்களின் சிந்தனையோட்டம் தமிழ்நாட்டில் ‘பகுத்தறிவு’ எனும் பதத்தாலேயே அடையாளப்படுத்தப்ட்டு வருகிறது. அவர்களின் சிந்தனையோட்டத்தை அப் பதத்தால் அடையாளப்படுத்தலை இவ்வாய்வு தவிர்த்துள்ளது. பகுத்து அறிதல் என்பது ஒரு அறிதல்முறை. எதையும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளல்தான் மனிதனுக்கு முன்னாலுள்ள ஒரே வழி என்பதே முறைசார் / நிறுவன மதங்களின் ‘உயரிய’ போதனையாகும். எதையும் அறிய வேண்டிய அவசியமில்லை, எதுவும் மனிதனால் அறியப்படவும் முடியாதது என்பதே முறைசார் மதங்களின் போதனைகளாகும். புற உலகம் மனிதனால் அறியப்படக்கூடியது, அறியப்படவும் வேண்டியது என்பதே லோகாயதவாதிகளின் நிலைப்பாடாகும். புற உலகையும், உலக நிகழ்வுப்போக்குகளையும், மன உலகையும் அறிந்து கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட ஒரு அறிதல் முறைதான் பகுத்தறிவாகும். இது நடந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னராகும். சாங்கியர் காலத்திலாகும்.
பகுத்தறிவு இந்திய மக்களுக்குப் புதியதொன்றல்ல. தொன்மைக்கால லோகாயதமான சாங்கியமும் பகுத்தறிவுதான். வேதம் x பகுத்தறிவுப் போராட்டம் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகும். பகுத்தறிவுக்கு எதிராக ஆதி சங்கரர் பின் வரும் போர்ப்பிரகடனத்தை வெளியிடுகிறார்.
“சங்கரர்: சாத்திரங்களில் இருந்து அறியவேண்டியவற்றை பகுத்தறிவால் அறிந்து விடலாமென்பது இயலாது. மனிதனின் எண்ணங்கள் வரையறையற்றவை. புனித நூலகளை மறுத்து தனிமனித எண்ணங்களைச் சார்ந்து நிற்பதற்கு திட்டவட்டமில்லை. சில அறிவாளிகள் பேராபாயத்துடன் முயற்சி எடுத்து அமைத்த வாதங்களை அவர்களைவிட சமார்த்தியசாலிகள் தவறானவையெனக் காட்டிவிடுகிறார்களே!  இந்த சமார்த்திய சாலிகளையும் வேறுசிலர் மறுத்துவிட முடிகிறது. மனித அபிப்பிராயங்களின் இந்த நிச்சயமற்ற தன்மையினால் பகுத்தறிவை மட்டும் அறுதிப் பிரமாணமாக ஏற்கமுடியாது.
ஆகவே பகுத்தறிவால் அடையும் அறிவு நிலையற்றது. அது செம்மையான அறிவாக முடியாது. வேதமோ அனாதியானது. அது எல்லா அறிவுக்கும் ஊற்றானது. நிலையான அறிவுக்களஞ்சியமாக வேதத்தை ஏற்கமுடியும். ஆகவே வேதத்தில் காணப்படும் அறிவின் முழுமையை முக்காலத்தவர்களாலும் மறுக்கமுடியாது.”(13421121)
பைபிளைப் பற்றி கிறிஸ்துவம் சொல்வதும் இதைத்தான், திருக்குறான் பற்றி இஸ்லாம் சொலவதும் இதுதான். சங்கரரின் கூற்றில் பகுத்தறிவென்பது ஒரு அறிதல் முறையென்பது தெரிகிறதுதானே. சங்கரர் கூறியது சுமார் 1200 வருடங்களின் முன்னால். “சில அறிவாளிகள் பேராபாயத்துடன் முயற்சி எடுத்து அமைத்த வாதங்களை அவர்களைவிட சமார்த்தியசாலிகள் தவறானவையெனக் காட்டிவிடுகிறார்களே!  இந்த சமார்த்திய சாலிகளையும் வேறுசிலர் மறுத்துவிட முடிகிறது. மனித அபிப்பிராயங்களின் இந்த நிச்சயமற்ற தன்மையினால் பகுத்தறிவை மட்டும் அறுதிப் பிரமாணமாக ஏற்கமுடியாது.” சங்கரரின் இக்கூற்று சரியானது. அதுதான் அறிவியலின் வளர்ச்சி விதியாகும். இவ்விதியைச் சங்கரர் கிண்டலடிக்கின்றார். இது அறிவியலின்மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் குணவியல்பு என்கிறார். இது அறிவியலின் பலவீனமல்ல, இதுதான் அறிவியலின் பலமாகும். இது எவ்விதம் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, வரலாற்று ஆய்வுகள் பற்றி ரொமிலா தாப்பர் அவர்களின் வழிகாட்டல்களை இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.
“வரலாறு இயற்கை அறிவியலைக்காட்டிலும் இடைப்படவேண்டியது என நான கருதுகிறேன். இன்று அறிவியலில் ‘முற்றிலும் உண்மை’ என்று எதுவுமேயில்லை. அது மாறிக்கொண்டேயிருக்கிறது.  வரலாற்றை ஒரு கோணத்தில் இருந்து ஆராயும்போது ஒன்றைப் புரிந்துகொள்கிறோம், ஆனால் அடுத்த பரம்பரை வேறு கோணத்தில் ஆராய்ந்து வரலாற்றை வேறு விதமாக அறியமுற்படலாம். புதிய சான்றுகளும் இடைப்படுதல்களும் வரலாற்றில் புகுத்தப்படவேண்டும்.
வரலாறு பற்றிப் பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவிப்பதால், பாரபட்ட்சமற்ற வரலாறே சிறப்பிக்கப்படவேண்டும். நாளையே புதிய ஆதாரங்கள் கிடைத்தால், வரலாறு அதை முற்றிலும் எதிர்கொள்ள வேண்டும், அல்லது அதற்கேற்றாற்போல் மாறுதல்கள் செய்யப்படவேண்டும். வரலாறு குறித்த விவாதங்கள் தொடரவேண்டும்.”  (மதச்சார்பின்மையும் நமது எதிர்காலமும்- இந்திய மாணவர் சங்கம்-பக்கம்32)
இந்திய உபகண்ட அறிவியலின் பல துறைகள் பகுத்தறிவு எனும் இவ்வறிதல் முறையையே அன்று பின்பற்றினர். இவ்வறிதல் முறை, பொருட்களின் இயக்கத்தினைப்பற்றி குறைவான புரிதல்களைக் கொண்டதாகவும், ஒரு பொருள் தனக்குள்ளும், அது பிற பொருட்களுடனும் எண்ணிலடங்கா சார்புநிலைகளைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பற்றிய மிகக் குறைந்த புரிதல்கள் கொண்டதாகவுமே இருந்தது.  பொருள்முதல்வாதம் வளர்ந்தளவிற்கு இயக்கவியல் வளராதது, பொருள்முதல்வாதமும் இயக்கவியல்வாதமும் முறையாக பொருத்திப்பார்க்கப்படாதது ஆகியவையே இதற்கான காரணங்களாகும். அன்று இதுவே பிரதான அறிதல் முறையாக இருந்தது, இன்று அதுவும் ஒரு அறிதல் முறையாக இருக்கின்றது. ஆனால் ‘பகுத்தறிவுப் பள்ளியினர்’ என்று தமிழ் நாட்டில் அறியப்படுபவர்கள் பகுத்து அறிதலெனும் அறிதல்முறையைப் பின்பற்றுபவர்கள்ளல்ல. இவ் அறிதல் முறையில் அவர்கள் மிகமிகப் பலவீனமானவர்கள். உண்மையிலேயே அவர்கள் மரபு நிராகரிப்பாளர்கள். சமுக மரபுகளையிட்டு இரு விதமான ஒருமுனைவாதக் கருத்தோட்டங்கள் உள்ளன. ஒன்று, வலது ஒருமுனைவாதம், அதன் பெயர்தான மாறாமரபியல்வாதம் (Fundamentalism), மற்றையது இடது ஒருமுனைவாதம், அதுதான் ‘பகுத்தறிவுவாதம்’ எனும் தமிழ்ச் சொல்லால் தவறாக அழைக்கப்படும் Rationalism ஆகும். மனித சமுதாயத்தில் மனிதர்களின் சமுதாய நடவடிக்கைளையும், தனிநபர் நடவடிக்கைகளையும்  நெறிப்படுத்தும் அதியுயர் சமுக நிறுவனம் மரபுகள்தான். அதுதான் முதலில் தோன்றிய முறைசாரா சமுக நிறுவனமாகும். இது ஒன்றுதான் சாகாவரம்பெற்ற அமரத்துவமான முறைசாரா சமுக நிறுவனமாகும். மனித சமுகம் இருக்கும்வரை மரபுகளும் இருக்கும். மரபுகள் மக்களின் படைப்பாகும். அவை தொடர்ந்து படைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தலைமுறையினரும் தத்தமது பங்கிற்கு புதிய மரபுகளைத் தோற்றுவித்த வண்ணமும், முன்னைய மரபுகளை சீர்திருத்திய வண்ணமும் உள்ளனர். பழையன கழிதலும் புதியன புகுதலுமெனும் நிகழ்வுப் போக்கு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. இது தொடரப்படவும் வேண்டும்.
வர்க்கப் போராட்டம் சர்வவியாபாகமானது. மரபுகளையும் அது விட்டு வைக்காது. இதானால் மரபுகளும் வர்க்கமயப்படுத்தப்பட்டு வருகின்றன. வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்துக்கான உள்ளாற்றல் கொண்டிருக்கும்வரை, எவராலும் மரபுகளை வர்க்கநீக்கம் செய்ய முடியாது.  மரபுகளை மட்டுமல்ல சமுகப்பிராணியான மனிதன் உட்பட எவரையும் எதையும் வர்க்க நீக்கஞ்செய்யமுடியாது. செய்யவேண்டியது, சுரண்டும் வர்க்கம் அவற்றை தன் வர்க்கமயப்படுத்த எடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதுவும், மரபுகளை உழைக்கும் மக்கள் மயப்படுத்துவதுமேயாகும். ஆனால் வர்க்கங்கள் ஒழிந்தபின்பும் மரபுகள் வாழும், வளரும்.
மரபுகளைப் பொறுத்த இடது ஒருமுனைவாதக் கருத்துக்கள் எதேச்சதிகாரத்துக்கு இட்டுச்செல்லும், வலது ஒருமுனைவாதக் கருத்துக்கள் அராஜக வாதத்திற்கு இட்டுச்செலும்.
‘பகுத்தறிவு’
அறிவுத் துறையில் நேர்மறை அர்த்தமுள்ள ‘பகுத்தறிவு’ எனும் சொல்லை Rationalism எனும் சொல்லுக்கு இணைவைக்க விருமபவில்லை. ஆகவே அதன் ஆங்கிலப் பதமே பயன்படுத்துகிறது. இதற்காக யாருமென்னை மன்னிக்கத் தேவையில்லை. புறத் தூய்மையைவிட அகத்தூய்மையே என்றும் உயர்ந்தது என்பதனால், மொழித்தூய்மையையும் விட கருத்துத் தூய்மைக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சொல்லுக்கும் அதுகூறவரும் கருத்துக்கும் இடையே எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு முரணற்ற பொருத்தம் இருக்கவேண்டும். மொழிக்காக கருத்தில்லை கருத்துக்காகத்தான் மொழி. தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் ‘பெரியோர்களும்’, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தற்காக பெருமைப்பட்டு வானத்தில் நடக்கும் கலைஞர்களும், இந்நூல் ஆசிரியருக்காக வெட்கப்பட்டு சொல்லாக்கத்தில் ஈடுபடட்டும். அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாததே இன்றைய நிலையாக உள்ளதனால், இதுவரை அது மேற்கொள்ளப்படாததற்காக  அவர்கள் மன்னிக்கபடுகிறார்கள். கட்டுரை தொடர்கிறது. ஏனெனில் உழைக்கும் மக்கள் ஆட்சிக்குவருவார்கள் அப்போது அவர்கள் தமது தாய் மொழியான தமிழையும் சிங்களத்தையும் செம்மைப்படுத்துவார்கள். மக்களுக்கான பொருளாதரத்தையும் மக்களுக்கான பண்பாட்டையும் உருவாக்கப்போகும் அவர்களால்தான், கருத்துக்கும் மொழிக்கும் இடயேயான ஒற்றுமையைப் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்ளமுடியும்..
நாஸ்திகம்
பகுத்தறிவுக்கு அடுத்ததாக, நாஸ்திகம் எனும் பதத்தை எடுத்துக் கொள்வோம். நாஸ்திகம் என்பது கடவுள் எதிர்ப்புக் கோட்பாடு என்பதே பொதுவான புரிதலாகவுள்ளது. அப்புரிதலுடன் இப்பதம் இங்கு பயன்படுத்தப்படவில்லை. நாஸ்தீகம் கடவுள் எதிர்ப்புக் கோட்பாடல்ல. அது நிறுவன மத எதிர்ப்புக் கோட்பாடேயாகும். நிறுவன மதத்தை எதிர்க்க வேண்டுமானால், அதன் மையமான அல்லது அத்திவாரமான கடவுளையும் எதிர்க்க வேண்டியுள்ளது. கடவுளை எதிர்ப்பதற்காக மதத்தை எதிர்க்கவில்லை, மதத்தை எதிர்ப்பதற்காக தவிர்க்க முடியாமல் கடவுளை எதிர்க்கிறார்கள். கடவுளை எதிர்ப்பதானது ஒரு தத்துவார்த்தப் பிரச்சனை, மதத்தை எதிர்ப்பதென்பது ஒரு அரசியல் பிரச்சனை.
கடவுளையும் மதத்தையும் பற்றி மார்க்ஸியப் பள்ளி என்ன கூறுகிறது என்பதை நோக்குவோம்: 1844-ல் எழுதப்பட்ட  On Hegel’s philosophy of law எனும் தனது நூலில் மார்க்ஸ் கூறுவது,  “மதம் ஒரு பிரமை ஏற்படுத்தும் சூரியனைப் போன்றது. மனிதன் தனது மானுடத்தைச் சுற்றி வராதவரை அது மனிதனைச் சுற்றி வருகிறது. ஆகவே, பரலோகத்தின் உண்மை மறைந்ததுமே இந்த வாழ்க்கையின் உண்மையை நிலைநாட்டுவதே புதிய உலகைப் படைக்கும் வரலாற்றின் பணியாகும். இப்படிச் செய்வதால், சொர்க்கத்தைக் கண்டிப்பது உலகை(நிலவும்) கண்டிப்பதாக, மதத்தைக் கண்டிப்பது சட்டத்தைக் கண்டிப்பதாக, கடவுள் தத்துவத்தைக் கண்டிப்பது அரசியலைக் கண்டிப்பதாக மாறிவிடுகிறது.” இக்கூற்று ‘பகுத்தறிவுவாதிகளுடனும்’, நாஸ்திகர்களுடனும் மார்க்ஸிற்கு இருக்கும் ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. ஆனாலும், இங்கு, கடவுளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு தத்துவார்த்தப் போராட்டமாகத்தான் பார்க்கிறாரே தவிர, அதை சிலைகளுக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கவில்லை. இந்த தத்துவார்த்தப் போராட்டங்களும் நிகழும் அரசியல் நெறிமுறைகளைக் கண்டிப்பதாக அமைய வேண்டும் என்கிறார்.
மார்க்ஸ்  தொடர்கிறார்;“மனித இனத்திற்கு மனிதன் ஒரு தலைசிறந்த சக்தியாகும். ஆகவே மனிதனை வீழ்ச்சியுற்றவனாகவும், அடிமையாகவும், அலட்சியப்படுத்தப்பட்டவனாகவும் ஆக்கிவிட்ட எல்லா நிலைமைகளையும் ஒழித்துக் கட்டவேண்டும். இதுவே மதத்தைக் கண்டிக்கும் கடைசிப் பாடமாகும்.” (விஞ்சான லோகாயதம்- பக்கம்50). மனித சுயமரியாதைபற்றி மார்க்ஸ் பேசுகிறார். அதே நேரம் சுயமரியாதை இழப்புக்குக் காரணமாயிருந்த எல்லா நிலமைகளையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்று கூறுகிறார். எல்லா எனும் சொல்லை அழுத்திப் படிக்கவும்.  நிலவும் சமுகக் கட்டுமானத்தையும், அதன் அதிகார அடுக்குக் கட்டுமானங்கள் அனைத்தையும் ஒழிக்கவேண்டும் என்கிறார். ‘பகுத்தறிவுவாதிகள்’ இந்த எல்லா என்ற எல்லைவரை மார்க்ஸுடன் பயணிக்கமாட்டார்கள். தேசியவாதிகளும் அவ்விதமே. பல சந்தர்ப்பங்களில் நடுத்தர வர்க்கத் தேசியவாதமும் நாஸ்திகவாதமும் ஒன்றிணைவதுண்டு. இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள் நிஹிலிஸம் எனும் தத்துவார்த்த வடிவில் அதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மதமும் தேசியவாதமும் இங்கும் சந்தித்துக் கொள்கின்றன. தமிழ் நாட்டு ‘பகுத்தறிவு’-ம், நாஸ்திகமும், தனித் திராவிட நாட்டுக் கோரிக்கையும் ஒரு தந்தையின் பிள்ளைகளே. ‘இலங்கையின் நாஸ்திகம்’, ‘தமிழ்நாட்டின் பகுத்தறிவு வாதமும் பிரிவினையும்’ ஆகிய தலைப்புகளின் கீழ் இவை ஆராயப்படும்.
மார்க்ஸுக்கும் பகுத்தறிவுக்கும் இடையேயான உறவுநிலை எனும் பகுதிக்குள் மீண்டும் செல்வோம்;இணைவைக் காட்டும் மார்க்ஸ், அதே நேரம் ‘பகுத்தறிவு’ இயக்கத்துடனான தனது மனநெருடலையும் முன்வைக்கிறார். “எந்த விதத்திலும் கண்டனமெனும் ஆயுதம் உண்மை ஆயுதங்களால் செய்யப்படும் கண்டனத்திற்கு இணையாக முடியாது. நாம் பௌதீக சக்தியைத் தோற்கடிக்க வேண்டும், ஆனால் சித்தாந்தம் மக்களைத் தழுவும்போது பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது.” (விஞ்சான லோகாயதம்- பக்கம்50)  கண்டனமெனும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு வாழ்நாள் பூராவும் பத்திரிகைகளிலும், விவாத மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் அலங்காரப் பவானி வராதீர்கள் என்கிறார். அதுமட்டுமல்ல, இக்கண்டன ஆயுதங்கள் மக்கள் மத்தியில் ஒரு சித்தாந்தை வளர்ப்பதாக அமையவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
முறைசார் மதம் எனும் பதத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வாய்வில் முறைசார் மதமெனும் பதமே பயன்படுத்தப்படும். ஏனெனில் மதமெனும் சிந்தனைப்பள்ளி இரு வகைப்படும். ஒன்று மக்களின் படைப்பான முறைசாரா மதம், மற்றையது ஆளும்வர்க்கத்தின் முறைசார் / நிறுவனமய மதம். ஆதிப்பொதுவுடமைகால மக்கள் தமது கடவுளர்களை உருவாக்கிக் கொண்டார்கள். தனிச்சொத்தின் தோற்றத்துடன் படிப்படியாக ஏற்றம்பெற்ற அளும்வர்க்கம், அரசு இயந்திரத்தை உருவாக்கியது. அதனுடன் கூடவே மதமெனும் நிறுவனத்தையும் உருவாக்கியது. மக்களின் கடவுளர்கள் இந்த மதத்தினுள் சிறைபிடிக்கப்பட்டார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள். இந்திய பார்ப்பனியம் சிறைப்பிடித்தது, இலங்கையின் பௌத்தம் அழித்தது. ‘இலங்கையின் பௌத்தமும் தொன்மைக்காலக் கடவுளர்களும்’ எனும் உபதலைப்பு  இவ்விவகாரத்தை விளக்கும். நிறுவன மதவாத சிந்தனைப் பள்ளியே இந்து மெய்யியலென அழைக்கப்படுகிறது. இந்து மெய்யியல்பள்ளி மீண்டும் இரு கூறாகப் பிரிகிறது, ஒன்று பக்திமார்க்கப் பள்ளி மற்றையது ஞானமார்க்கப்பள்ளி. இவ்விரு பள்ளிகளுக்கும் இடையே பேதமில்லை, பகைமையுமில்லை. ஆனால் பக்திமார்க்கப்பள்ளியினரால் ஞானமார்க்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வேதாந்த மகரிசி ஞானமார்க்கத்துக்குரியவர். அவரின் கோவில் அறிவுக் கோவில். ஐயப்பன் சாமி பக்தி மார்க்கர்களின் கடவுள். ஐயப்பன் பக்தர்களையும், அறிவுக்கோவிலின் பக்தர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரு பள்ளிகளின் வேறுபாடு புரியும். ‘இலங்கைச் சைவமும் பக்திமார்க்கமும்’ எனும் உபதலைப்பில் இவ்விவகாரம் மேலும் விரிவாக நோக்கப்படும். ஆகவே மதம் எனும் பொது சொற்பதத்தை சமுகவியல் மாணவன் தவிர்க்கவேண்டும்.
வெவ்வேறு பள்ளிகளைத் துல்லியமாக இனங்காட்ட சொற்பதங்களினதும், மொழிநடையினதும் முக்கியத்துவம்பற்றி  எ.எம்.எ.அஸிஸ் எனும் இலங்கை முஸ்லீம் அறிஞர் ஒருவர் கூறுவதைக் கேட்போம்.
“இஸ்லாமியப் பண்பினை நன்கு விளக்குவதற்குச் சில அறபுச் சொற்களைக் கையாளுதல் எத்துணை அவசியமோ அத்துணை அவசியமானது சில தமிழ்ச் சொற்களைக் கையாளாமல் தவிர்த்தலுமாகும். சொற்பொருள் வரலாற்றில் இந்துசமயக் கோட்பாடுகளுக்கியத் தோன்றிய சொற்களையும், அவற்றை விளக்கத் தோன்றிய சொற்களையும் பிரயோகிப்பின், அவை இஸ்லாமியக் கோட்ப்பாடுகட்கு ஒவ்வாது நிற்கும். அல்லாஹ்வைப் பற்றிப் பேசும்பொழுது ‘அவதரித்தல்’, ‘காட்சியளித்தல்’, ‘இரண்டறக்கலத்தல்’ போன்ற பதங்கள் கையாளப்படுமேல் அது இஸ்லாத்தின் ஏகதெய்வக் கோட்பாட்டிற்குத் திரையிட்டுவிடும்.”(இலங்கையில் இஸ்லாம், எ.எம்.எ.அஸிஸ் நூன்முகம்)
ஒரு சிந்தனைப் பள்ளியென்ற முறையில் இஸ்லாத்தின் தனித்துவம்பற்றி மேலும் சில சிந்தனைத் துளிகள்:
“சிற்பான்மைக்கான வரைவு இலக்கணத்தில் அடிக்கடி முன்வைக்கப்படும் இனம், மொழி என்ற பதங்களினால் முஸ்லீம் சிறுபானமையினரை வர்ணிக்க முடியாதென்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் சமயத்தால் பிணைப்புண்டு கிடக்கும் சமுதாயம் என்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இலட்சியத்தினால்  தமது இன ஒருமைப்பாட்டை அவர்கள் கட்டியெழுப்பியுள்ளனர் என்றும் அவர் எடுத்துக்காட்டினார். தமக்குள் பல இனத்தவர், பல மொழிபேசுபவர் இருப்பதனால் இன, மொழி அடையாளங்களைக் கைவிட்டு சமய சகோதரத்துவ இலட்சியத்தை அல்லது ‘ஐக்கிய உம்மா’ என்ற இஸ்லாமிய சமுக அமைப்பை உருவாக்கிக் கொள்வதையே முஸ்லீம்கள் இலட்சியமாகக் கொண்டுள்ளனர் என்ற கருத்தையும் எ.எம்.எ. அஸிஸ் விளக்கினார்.” இலங்கையில் இஸ்லாம், எ.எம்.எ.அஸிஸ், அறிமுகம் பக்கம் 21)
இன, மொழிக் குழும அடையாளங்களை நிராகரித்த இஸ்லாமியத் தேசியவாதிகளும், இன, மொழிக் குழும அடையாளங்களையே தமது தேசியத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழ், சிங்களத் தேசியவாதிகளும் ஒரே சிந்தனைப்பள்ளியின் மாணவர்களாக இருக்கமுடியுமா? இவர்கள் தமக்குள் விவாதம் நடத்தினால் அது எங்குபோய் முடியும். பிணக்கத்திலா? இணக்கத்திலா?
இவ் இரு கூற்றுகளையும் நிபந்தனைகளின்றி ஏற்றுக்கொள்ளும்படி இக்கட்டுரை கூறவில்லை. தமிழ், சிங்களத் தேசியவாதப் பள்ளியும் இஸ்லாமியத் தேசியவாதப் பள்ளியும் எவ்வளவு தூரத்துக்கு வேறுபட்டிருக்கின்றன என்பதை எடுத்தியம்பவே இம் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன, அவ்வளவே. இஸ்லாமியர்களின் மதத் தேசியம் பற்றி ‘பண்பாட்டுத் தேசியமும், தேசியப் பண்பாடும்’ எனும் தலைப்பின் கீழ் விவாதிக்கப்படும்.
அடுத்ததாக வரும் இரு தொடர்களுக்கான தலைப்புகள் இவ் இரண்டாவது தொடரின் முடிவில் தரப்பட்டுள்ளது. அத்துடன் சேர்த்து ஆய்வுக்கான உபதலைப்புகளில் சிலவும் கீழே தரப்பட்டுள்ளன. ஆய்வை மேற்கொள்ளும் போதுதான புதிய தலைப்புகள் உருவாகும். ஒத்துளைப்பு நல்கக் கூடியவர்களுக்கு இத்தலைப்புகள் பலனுள்ளவையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இடையிடைய சொற்பத விளக்கங்கள் இடம்பெறும் என்பதை நினைவு படுத்தித் தொடர்கிறேன்.


முன்னுரை பாகம் 1

பௌத்தமும் தேசியமும்– சில தகவல்கள்

த்தலைப்பிலான ஆய்வின் அவசியம் என்னவென்பதை மேலும் வலியுறுத்துவதற்காக, தேசியம், மதம் ஆகிய இரண்டும், கடந்த கால இந்திய உபகண்ட வரலாற்றில் எவ்விதம் இணைந்திருந்தன என்பதைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்களை முதலில் அவதானிப்போம். இப்பகுதியைத் தொடர் கட்டுரைக்கான முன்னுரையாகக் கருதலாம். கட்டுரை எழுதி முடிக்கப்பட முன்னர் முன்னுரை எழுதுவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால், ஆய்வை மேற்கொள்வதில் வாசகர்களின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதால் முன்னுரை அவசியப்படுகிறது.

தெற்காசியப் பிராந்தியம் சுமார் 5000 ஆண்டுகால பாரம்பரியமுள்ள ஒரு முழுமையாகும். இம் முழுமையை ஆக்குவதிலும் இன்னமும் அதைப் பாதுகாத்து வருவதிலும் பிரதான பங்குவகித்து வருவது பண்பாட்டுக்-கட்டுமானந்தான். தெற்காசியப் பிராந்தியக் கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொண்டால்தான் இலங்கையின் நிகழ்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். இந்தியாவே பௌத்தத்தினதும், சைவத்தினதும் தாய்மண் என்பதை மறுப்பார் உண்டா? ஆகவே முதலில் இந்தியாவை எடுத்துக் கொள்வோம்.

……“எனினும், இந்தக் கேள்வி (ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சி இந்தியாவில் ஏற்படாதது ஏன்?) இந்திய வரலாற்றில் அறிவியலின் வளர்ச்சி பற்றியது மட்டுமல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்வது போல் ‘பிரிட்டிஷ் காலத்துக்கு முந்தைய இந்தியாவின் கௌரவமற்ற, தேக்க நிலையிலான காட்டு வாழ்க்கை’ என்பதன் கேள்வியாகும். இந்தியாவின் கிராமிய சமுதாயம் (மார்க்ஸ் அவற்றைப் பார்த்தது போல்) ‘ ஜாதி மற்றும் அடிமை வேறுபாடுகளால் கறைபடுத்தப்பட்டிருந்தது.’ மார்க்ஸ் மேலும் கூறுகிறார்: அப்படிப்பட்ட மிருகத்தனமான மிருக வழிபாடு, இயற்கையின்மீது இறையாதிக்கம் செலுத்தவேண்டிய மனிதன், ஹனுமானுக்கும்(குரங்கு), பணத்திற்கும், பசுவுக்கும்(சபலா) பயபக்தியுடன், மண்டியிட்டு அடிபணிவது போன்ற உண்மைகளில், தன்னுடைய தாழ்ந்த நிலையைக் காட்டிக்கொண்டான்.’ இதனுடைய அரசியல் விளைவு, நாடு தன்னுடைய சுதந்திரத்தை இழந்ததென்று மார்க்ஸ் கூறுகிறார்.” (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-10)

“(ஐரோப்பிய) மொழிகளுக்கும், மதங்களுக்கும் ஆதரவாக இருந்ததாக மார்க்ஸ் கூறுகிற நமது நாட்டிற்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது என்பதைக் கவனிக்கும்போது, நமது நாடு பழைய நிலைகளிலிருந்து வீழ்ச்சியுற்று, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பிருந்த நிலைக்குத் தாழ்ந்தது ஏன்? எப்படி? என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்: ‘பிராமண மேலாதிக்கத்தின் கைகளில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் தோல்வி, கருத்துமுதல்வாதத்திடம் பொருள்முதல்வாதம் அடைந்த தோல்வி, ஆகியவை இந்திய நாகரிகத்தினதும் இந்தியக் கலாச்சாரத்தினதும் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. இது இறுதியில் தேச சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது.” (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-10)

கருத்துமுதல்வாதத்திடம் பொருள்முதல்வாதம் அடைந்த தோல்வி, என குறிப்பிடப்படுவதன் பொருளென்ன?

இ.எம்.எஸ். நம்பூதிரிபார்ட் அவர்களிடமே இதற்கான விளக்கத்தைக் கேட்போம்.

“மறுபுறத்தில் இந்தியாவில் இந்த இரண்டு தத்துவார்த்தப் பிரிவினருக்கு இடையேயான போர், ஒன்றின் தோல்வியிலும் (லோகாயதவாதம் / பொருள்முதல்வாதம்) மற்றதன் ஆதிக்கத்திலும் (வேதாந்தம் / கருத்துமுதல்வாதம்) முடிவடைந்தது. எனினும் இதுவோர் சமத்துவமற்ற போர். சமூக அரசியல் அமைப்பின் (ஜாதி ஆதிக்க ஆட்சி) முழுச்சக்தியும் கருத்து முதல்வாதத்திற்கு சாதகமாகவும், பொருள் முதல்வாதப் பிரிவுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. நம் நாட்டில் வெற்றியடைந்ததும், வீழ்ச்சியடைந்ததும், வெறுமனே இரண்டு தத்துவங்களல்ல; அவை இரண்டும் இரு சமூக வர்க்கங்கள். இவ் வர்க்கங்கள் முன்சொன்ன இரு தத்துவங்களையும் தமது ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயுதங்களாகப் பயன் படுத்திய இரு ஜாதிகளாகும். தோல்வி கண்ட லோகாயதவாதம் / பொருள்முதல்வாதம் அடக்கியாளப்பட்ட ஜாதியின் தத்துவார்த்த ஆயுதம். வேதாந்தம் / கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்திய ஜாதியின் ஆயுதம். ஆகவே, சங்கரரினதும் அவரின் தத்துவத்தினதும் வெற்றி, பிராமணர் மற்றும் ஆதிக்கஜாதிகளின் வெற்றியாகும். இந்திய சமூகத்தின் மற்றப் பகுதியின் தோல்வியாகும். (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-11)

மறு பகுதியின் தோல்விதான் இந்தியாவின் தோல்வியாகிறது. பார்ப்பனிய குடும்பத்தில் இருந்து தோன்றிய சகோதர மதங்கள் அனைத்தினதும் தத்துவார்த்த ஆயுதம் வேதாந்தமே. பார்ப்பனிய மதக்குடும்பங்களின் வெற்றி ஒரு நாட்டின் (இந்தியா) தோல்வியாக முடிகிறது.

அவரே சொல்கிறார்: “…….அதைவிட துரதிருஸ்டமானது, சமநிலையற்ற போரில் பொருள்முதல்வாதிகளுக்கு ஏற்பட்ட தோல்வி, ஆயிரம் ஆண்டு அறிவுத்துறையினதும், சமூக-அரசியல் துறையினதும் பின்னடைவின் ஆரம்பமாகவும், நமது நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதிலும் முடிந்ததுதான்.” (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-13)
மதம், தேசியம் ஆகிய இவ்விரண்டுக்கும் இடையேயான இத்தொடர்பை யாராலும் மறுக்கமுடியுமா?

தோல்வி கண்ட தத்துவார்த்தங்களில் பௌத்தமும் ஒன்று என்பதை மறக்கக்கூடாது. பௌத்தத்தை தோற்கடித்தமையே வேதாந்தம் பெற்ற வெற்றிகளில் மிகப் பெரிய வெற்றியாகும். தொன்மைக்கால பொருள்முதல்வாதக் கருத்துப் பள்ளிகளான நியாயம், வைகசிகம், சாங்கியம், யோகம் (சாங்கியத்தின் துணைப்பள்ளி), மிமாம்சம், லோகாயவாதம் போன்றவை மதங்களாக்கப்படவில்லை. இவற்றை மதங்களாக்க யாராலும் முடியவில்லை. ஆனால் பொருள்முதல்வாதத்திற்கு மிக அருகாமையில் இருந்த பௌத்தம் மதமாக்கப்பட்டு விட்டது. முதலில், பௌத்தத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தின் ஊடாக பௌத்தத்தில் துளியளவிலிருந்த கருத்துமுதல்வாதக் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டன. அதில் பெருமளவிற்கு இருந்த பொருள்முதல்வாதக் கருத்துக்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. பின்னர் பௌத்தம் ஒரு மதமாக்கப்பட்டது. அதற்கடுத்ததாக, அம்மதம் உடற்பல வன்முறைமூலம் தோற்கடிக்கப்பட்டது. இந்தியாவினதும் இந்திய மக்களினதும் தோல்வியை உச்சநிலைக்குக் கொண்டு போனது பௌத்தத்தின் தோல்விதான். இரு பிறப்பாளர்களால் மறுபிறப்புக் கொடுக்கப்பட்ட பௌத்தந்தான் மஹாயன பௌத்தமாகும்.

ஸ்ரீ லங்கா தேசியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி சற்று நோக்குவோம். ஸ்ரீ லங்கா அரசும், சிங்கள மக்களும் இந்திய எதிர்ப்புக் கொண்டவர்கள் என்பது, ஸ்ரீ லங்காவின் இந்தியத் தொடர்பை அவதானித்து வருபவர்கள் அனைவருக்கும் தெரியும். இதுவரை இந்தியா ஸ்ரீ லங்காவின் பொருளாதரத்தை சுரண்டுவதில் ஒரு பெரும் பாத்திரம் வகித்ததில்லை. இலங்கைப் பொருளாதாரத்துக்கு எதிராகச் செயல்பட்டதும் இல்லை. அவ்விதமிருக்க  இந்தியாவையிட்டு ஏனிந்த அச்சம்? ஏனிந்த சந்தேகம்?

சிங்கள மக்களின் மரபுவழி சுயசார்புப் பொருளாதாரத்தை சீரழித்த பிரித்தானியாவையிட்டுக்கூட இவ்வளவு வெறுப்பில்லை. இந்திய எதிர்ப்பு ஸ்ரீ லங்காத் தேசியத்தின் மரபுவழிக் குணாம்சமாக மாறியது ஏன்? எவ்விதம்? இலங்கையின் நிலையை இந்தியாவும் புரிந்தே வைத்துள்ளது போலும். இதனால்தான் ஒரு மனநோயாளியுடனான உறவைக் கையாள்வதுபோல் மிகப்பவ்வியமாகவும். அளவுக்கு அதிகமான நிதானத்துடனும் இலங்கையுடனான உறவைப் பேணிவருகிறது போலும்.

தமிழ் நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளை ஒட்டிய வெறுப்பான நினைவுகள்தான் இதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. படையெடுப்புகள் நடந்தது உண்மை, ஆனால் அவற்றில் பல இலங்கை மன்னர்களின் ஒத்துழைப்புடனேயே நடந்துள்ளன. அண்ணனை எதிர்க்க தம்பியும், அப்பனை எதிர்க்க மகனும், கணவனை எதிர்க்க மனைவியும், மாமனை எதிர்க்க மருமகனும் தமிழ் நாட்டு மன்னர்களின் உதவியை நாடியதாகத்தானே வரலாறுள்ளது. சிங்கள மன்னர்களிடம் தமிழ்நாட்டுத் தளபதிகளும், தமிழ் மன்னர்களிடம் சிங்களத் தளபதிகளும் பணிபுரிந்துள்ளார்கள். இலங்கையின் பாரம்பரிய குடிகளான நாகரையும் இயக்கரையும் அடக்குவதற்கு இந்தியத் தமிழ் மன்னர்களினது உதவியும் பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை மக்கள் அனைவருமே வந்தேறுகுடிகளின் வம்சாவழியினர்தான். இஸ்லாமியர் தவிர அனைவரும் இந்திய வம்சாவழியினர்தான். அதிலும் அனைவரும் அவேதர்கள்தான். வேதர்களின் குடியேற்றங்கள் இங்கு நடைபெறவில்லை. மன்னர்கள் காலத்துக்குகாலம் பார்ப்பனியர்களை அழைத்து வந்தாக வரலாறு உண்டு. அனால் அவர்கள் இங்கு(இலங்கையில்) ஒரு தனிப்பரம்பரையாக(சமூகக்குழுமமாக) உருவாகவில்லை.

யாழ்ப்பாணத்து ஐயர்மாருக்கு, இந்திய பார்ப்பனியர்களுக்கு இருக்கும் சமூக-அரசியல் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. இந்திய ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரமே இவ் ஐயர்மாருக்கும்  இருந்தது. இதிலிருந்து ஒன்று கவனிக்கப்படவேண்டும். இலங்கை, பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படவில்லை. இந்தியப் பார்பனியத்தின் அகண்ட பாரதக் கனவு இலங்கைத் தீவில் எடுபடவில்லை. பார்ப்பனியச் சமூகக் கட்டமைப்பையும் பார்ப்பனிய மதங்களையும் இலங்கையில் நிலைநிறுத்த பார்ப்பனியம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. இலங்கையில் குடியேறிய அனைத்து இந்தியர்களும் குலங்கள் எனும் நிலையில் வளர்ச்சி அடைந்திருந்த அவேதர்களே. இன்று சிங்களக் கரையார்கள் தம்மைச் சைத்திரியர்கள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் எவருமே வேத மரபின்படியான சைத்திரியர்களல்ல. அனைவரும் சூத்திரர்களே. இதனால்தான் இஸ்லாமும் கிறிஸ்தவமும் இலங்கைக்கு வருமுன்னர், தமிழர் சிங்களவரென்ற பேதமில்லாமல் இலங்கை மக்களில் ஏகப்பெரும்பான்மையினர் (சிங்களவர்களில் அனைவரும், தமிழர்களில் பெரும்பான்மையினர்) பௌத்த மதத்தைத் தழுவியிருந்தனர். பௌத்தம், பொருள்முதல்வாதத்திற்கு நெருங்கிய தத்துவமாகும். அது அவேதர்களின்  தத்துவமாகும். பார்ப்பனியத்தை முழுமூச்சாக எதிர்த்து நின்ற தத்துவமாகும். பார்ப்பனிய மதத்திற்கு எதிரான நிலையில் இருந்த, தீவிர பௌத்த சார்பு களப்பிரர் ஆட்சி இலங்கைவரை பரவியிருந்தமையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வேறெந்த வழியிலும் இலங்கையின் பௌத்தத்தை வீழ்த்த முடியாது போன இந்திய பார்ப்பனியமானது, பௌத்தத்தை வீழ்த்த தத்துவார்த்த வழியைத் தேர்ந்தெடுத்தது. இந்திய மண்ணில், பார்ப்பனியத் திணிப்பின் முதலாவது நடவடிக்கை மக்களின் தொன்மைக்கால கடவுளர்களை புராணத்துக்குள் சிறைபிடித்து மும்மூர்த்திகளான மைய தெய்வங்களின் துணைக்கடவுள்களாக்கி கோவில் கருவறைக்கு வெளியே காவல் தெய்வங்களாக நிறுத்தி வைத்ததுதான். இந்தத் தந்திரம் இலங்கையின் சிங்களமக்கள் மத்தியில் எடுபடவில்லை. மூல பௌத்தம் அவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாத படியால், சிங்கள மக்கள் மத்தியில் தொன்மைக் கடவுளர்கள் எவரையுமே காண முடியாதுள்ளது. ஆனால் இலங்கை பௌத்தம், இயக்கர்களினதும் நாகர்களினதும் தெய்வங்களை அழித்தது. தொன்மைத் தெய்வங்களைப் பற்றிய கௌதம புத்தரின் மௌனம் பௌத்ததைத் திரிக்க துணைபுரிந்தது. இதனால் பௌத்தம், இலங்கையில் இயக்கர்களுக்கும் நாகர்களுக்கும் எதிராக பல போர்களையும் நடத்தியுள்ளது. பூர்வீக மக்களும் அழிக்கப்பட்டார்கள், அவர்களை அடையாளப்படுத்தும் பண்பாட்டு அடையாளங்களும், வரலாற்றுச் சுவடேயில்லாமல் அழிக்கப்பட்டன. இலங்கை பௌத்தத்தின் இனச்சுத்திகரிப்பு வன்முறையின் தொடக்கப்புள்ளி இப் போர்களேயாம்.

ஆனால் இலங்கைத் தமிழரிடையே தொன்மைக்காலத் தெய்வங்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இங்கும் இயக்கர்களுக்கும் நாகர்களுக்கும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன, ஆனால் பார்ப்பனிய வழிமுறையும் பின்பற்றப்பட்டுள்ளது போலும். இது எவ்விதம் என்பது ஆராயப்படவேண்டும். தெய்வ சுவீகரிப்பில் அல்லது தத்தெடுப்பில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பார்ப்பனியம் தனது தத்துவார்த்த ஆயுதத்தை கைகளில் எடுத்துக்கொண்டு இலங்கைப் பௌத்ததிற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தில் இறங்கியது. இந்திய பௌத்த மக்களைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மஹாயான பௌத்தம் எனும் தத்துவார்த்த ஆயுதம் இலங்கையிலும்  பிரயோகிக்கப்பட்டது. ஆதிசங்கர் பிரசன்ன பௌத்தர் எனவும் (கேலியாக) அழைக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும். பிரசன்ன என்பது ஒளிவு மறைவான என்று அர்த்தப்படும். பௌத்ததை எதிர்கொள்ளக்கூடிய முறையில் வேதம் சுத்திகரிப்புச் செய்யப்படவேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளாத பழமைவாத வேதாந்திகள் ஆரம்ப நாட்களில் ஆதிசங்கரை இவ்விதம் கேலி செய்தார்கள். எவ்விதமோ பௌத்தத்தை வேத மயப்படுத்தும் மிகத் திறமை மிக்க பௌத்த வேதாந்திகள் தமிழ்நாட்டில் உருவானார்கள். தமிழ் நாட்டு பௌத்தம் மஹாயன பௌத்தமாகியது. இப்பிரிவைச் சார்ந்த பௌத்த துறவிகள், தமிழ்நாட்டிலும் தமது கருத்தைப் பரப்ப முற்பட்டார்கள், இதன் காரணத்தால் இலங்கை இரு உள்நாட்டு யுத்தங்களுக்கு முகங் கொடுத்தது.

மஹிந்த தேரோ எனும் தமிழ்நாட்டு தலைமைத் தத்துவார்த்த வித்தகப் புத்த துறவியொருவர் இலங்கையில் மரணதண்டனையும் பெற்றார். மஹாயன இலங்கையில், குறிப்பாக சிங்களவரிடையே தோல்வி கண்டது. ஹீனாயான வெற்றி பெற்றது. ஆனால் தமிழர்களின் நிலை அவ்விதம் இல்லைப்போல் தெரிகிறது இது ஆராயப்படவேண்டும். ஹீனாயான வெற்றி பெற்றது என்பதன் அர்த்தம் மூல பௌத்தம் வெற்றி பெற்றதென்பதல்ல. இலங்கையின் இன்றைய பௌத்தம் ஹீனாயானமாக இருந்தாலும், அது தனது மூலத்தை இழந்த பௌத்தந்தான். குலங்களின் அதிகார சச்சரவுகளுக்கு ஏற்ற முறையில் திரிவுபடுத்தப்பட்ட  பௌத்தந்தான்.  ஆனாலும் பௌத்தம் இலங்கையில் தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்ததுபோல் அது துடைத்தொழிக்கப்படவில்லை. ஆனால் இத் தக்கவைப்பு, இந்தியப் பாணியில் அல்லாமல் ஸ்ரீ லங்காப் பாணியில் சுத்திகரிக்கப்பட்ட (பொருள்முதல்வாதக் கூறுகள் அகற்றப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட) பௌத்தமாகியது. இந்தியா, பௌத்தத்தை அழிப்பதற்காகவே பௌத்தத்தை சுத்திகரித்தது. இந்தியா × ஸ்ரீ லங்கா என்ற வரலாற்று தொடர் நிகழ்வுக்கான அடிப்படைக் காரணம் இதுதான். ஸ்ரீ லங்கா தேசியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயான உறவு இதுதான். ஸ்ரீ லங்காத் தேசியத்தின் ஆணிவேர் பௌத்தத்தை இந்திய பார்ப்பனியத்தில் இருந்து பாதுகாப்பதில் இருந்தே ஆரம்பிக்கின்றது. வேதாந்தம், இந்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவமாக இருப்பதுபோலவே, பௌத்தம், ஸ்ரீ லங்கா ஆளும் வர்க்கத்தின் தத்துவார்த்த ஆயுதமாக உள்ளது. இரு ஆளும் வர்க்கங்களும் இருவேறு தத்துவங்களை தமது ஆயுதங்களாகக் கொண்டுள்ளன. மதம் ஆளும் வர்க்கத்தின் தத்துவார்த்த ஆயுதம் என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது. ஸ்ரீ லங்காவின் ஆளும் வர்க்கம் தனது தத்துவார்த்த ஆயுதத்தில் தனக்குள்ள பிடிமானத்தை எக்காரணம் கொண்டும் தானாக இளக்கிக் கொள்ளாது. அவ் ஆயுதத்தை அது மேலும் மேலும் இறுகத் தழுவிக்கொள்ளும். சுத்திகரிக்கப்பட்ட பௌத்தம் என்ற தனது சிந்தனைப் பள்ளியை விட்டு அது ஒரு போதும் விலகி வராது.

மஹாயனவுக்கு எதிரான சமகால நிகழ்வு ஒன்று இங்கு குறிப்பிடப்படுகிறது: செப்ரம்பர், 2011-இல், கொள்ளுப்பிட்டியில் (கொழும்பு நகரின் மத்தியில் உள்ளது) அமைந்துள்ள ஜப்பானிய பௌத்த கோவில் ஒன்று சுமார் 100 பௌத்தர்களால் தாக்கப்பட்டது. தேரவாத பிரிவின் பௌத்த பிக்குகள் இத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினாரகள். ஜப்பான் பௌத்த கோவில், ஜப்பானில் பின்பற்றிவந்த மஹாயனப் பிரிவைச் சொந்ததாகும். அது இலங்கையில் வாழும் ஜப்பானியர்களுக்கானது. ‘இலங்கையில் தேரவாத பௌத்தமே இருக்கவேண்டும், மஹாயன இருக்கக் கூடாது.’ என அப் பிக்குகள் ஆர்ப்பரித்தார்கள். ஜப்பான் ஸ்ரீ லங்காவின் நட்பு நாடு என்பது கூட கணக்கில் கொள்ளப்படவில்லை. (தகவல் May 17, 2012 Colombo Telegraph)

பௌத்தத்தைப் பாதுகாக்க எழுந்த ஸ்ரீ லங்கா தேசியம் எவ்விதம் தமிழ் எதிர்ப்புத் தேசியமாகவும் மாறியது? ஸ்ரீ லங்காத் தேசியத்தின் மொழிவழி இனக்குழுமக் குணாம்சம் பிற்சேர்க்கைதான். தோற்றம் மதமே, அப்போது மொழிபேதம் இருக்கவில்லை. தமிழர், சிங்களவர் அனைவரும் ஒரு மதக் குழுவினராகவே பார்க்கப்பட்டனர். அத்துடன் வேதர், அவேதர் பேதம் இலங்கையில் காணப்படவில்லை. அனைவரும் அவேதர்களே. ஆகையினால் இந்தியாவில் இருந்தது போல் தெய்வீக மொழி (சமஸ்கிருதம் உட்பட பிற ஆரிய மொழிகள்), நீசர் மொழி (தமிழ் உட்பட பிற திராவிட மொழிகள்) என்ற மொழி ஏற்றத்தாழ்வு இலங்கையில் இருக்கவில்லை. இது மிகப் பிற்பட்ட காலத்தில் வந்ததேயாகும்.

இதற்கான காரணங்கள் இரண்டாக இருக்கலாம். மீண்டும் மதமும் தேசியமும் தொடர்புபடுவதைக் காணலாம். களப்பிரர் காலத்தில், பௌத்தம் பேணிப் பாதுகாக்கப்பட்டது, பாளி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. பல பாளி மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பல பௌத்த தமிழ் இலக்கியங்கள் தோன்றின. பாளிமொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்த பல தமிழ் பௌத்த தத்துவப் பேரறிஞர்கள், சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அதேபோல் பாளிமொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்த பல சிங்ஹள பௌத்த தத்துவப் பேரறிஞர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ் மொழியில் புலமைத்துவம் பெற்றிருந்தமை பற்றித் தெரியவில்லை, ஆனால் தமிழைப் புறக்கணிக்கவில்லை. பாளி, தமிழையும் சிங்களத்தையும் இணைக்கும் மொழியாக இருந்தது. பாளி, பௌத்த அறிவியலின், மொழியாக இருந்ததேயல்லாமல், ஒரு மத ஆதிக்க மொழியாக இருக்கவில்லை. அரபு போன்றோ, லத்தீன் போன்றோ, சமஸ்கிருதம் போன்றோ, அது ஒரு போதும் தன்னை தெய்வீக மொழியெனக் கூறிக் கொள்ளவில்லை. பிற மொழிகளை நீசர்களின் மொழியெனக் கூறிக் கொள்ளவுமில்லை. நீசர்களின் (அடிமைகளின்) தத்துவமான பௌத்தம் யாரை நோக்கி “நீ நீசன்” என்று சுட்டிக்காட்ட முடியும். அது தன்னை நோக்கித்தான் அவ்விதம் சுட்டிக்காட்டமுடியும். அவ்விதமானால் ஸ்ரீ லங்காப் பௌத்த தேசியம் எங்கிருந்து மொழி அபிமானக் குணாம்சத்தைப் பெற்றது?

களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பௌத்தத்திற்கு எதிராக பக்தி இயக்கம் தென் இந்தியா எங்கணும் வீறுகொண்டெழுகிறது. இது படிப்படியாக இந்தியா எங்கணும் பரவுகிறது. சமண மதங்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெறுகிறது. பௌத்தத்தின் தத்துவம் ஏற்கனவே பல்வீனப்படுத்தப்பட்டிருந்தது.  ஆதிசங்கரர் அதில் வெற்றி பெற்றிருந்தார். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சியுடன் பௌத்தம், ஜைனத்தின் அரசியல் அதிகாரமும் வீழ்ந்தது. தற்பொது அதை இந்திய நிலப்பரப்பில் இருந்து துடைத்தெறியும் செயல் ஆரம்பமானது. பக்தி இயக்கம் இதில் பெரும் வெற்றி பெற்றது. பலபத்தாயிரக் கணக்கான பௌத்தர்கள் பல் வெறு இடங்களில் களுவேற்றி வதஞ்செய்யப்பட்டார்கள். தன்னால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்காலிற்காக ஸ்ரீ லங்கா அரசாங்கம் மனம் வருந்துவதாக நடிக்கின்றது. ஆனால் சைவம் நடத்திய முள்ளிவாய்க்கால்களிற்காக, இன்றும் பெருமைப் பட்டுக் கொள்கிறது. அதன் நினைவுநாள் இன்றும் மதுரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு மதவெறித் திருநாள் என்ற எதிர்ப்பு திராவிட இயக்கத்தாரிடம் இருந்துங்கூட வந்ததாகத் தெரியவில்லை. சைவம் இலங்கைத் தமிழரிடையேயும் பரவியது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில். சைவம், தமிழை முருகனின் மொழியாக அடையாளப்படுத்திக் காட்டியது. தமிழுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்து கொடுபட்டது. வேதர்களின் வழியில் சைவர்களும் பயணித்தனர்.
சைவத்தின் எதிர் விளைவுதான் ஸ்ரீ லங்கா பௌத்தம் மொழியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டமை எனக் கூறலாமா? இது ஆராயப்படவேண்டும். இதுவும் மதஞ்சார்ந்த ஒரு பிரச்சனையேயாகும்.

கடந்தகால வரலாறுகள் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், இன்றைய வரலாற்றின் பிற்போக்குக் கூறுகளை நியாயப்படுத்துவதாகவும் அமையலாம். தகவல்கள் வெறுமனே தகவல்கள்தாம். அவற்றிற்கு உயிரில்லை. அத் தகவல்களைப் பயன்படுத்துபவரின் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் அவை உயிர் பெறுகின்றன. கத்தோலிக்க மத பீடங்கள் மத்திய காலத்தில் பல இயற்கை அறிவியலாளர்களை  கொன்றன அல்லது நடைப்பிணங்களாக்கின. இது ஓர் உண்மையான தகவல். இதற்காக இன்றைய அறிவியலாளர்கள் இன்றைய கிறிஸ்துவ மதபீடத்தைப் பழிவாங்க முடியுமா? இவ்வித கூட்டம் ஒன்று இருக்கின்றது என்பதற்காக, வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டிருக்கும் இவ் உண்மைகளைத் தேடித் தேடி அழிப்பதோ அல்லது மறைப்பதோ முறையாகுமா? பதில் வாசகரிடமே விடப்படுகிறது. இந்திய வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி ஆராயும் ரொமிலா தாப்பர் அவர்கள், முடிவில் பின்வருமாறு கூறுகிறார்: “ வரலாற்றில் நடந்த எதையும் ஓரங்கட்ட முடியாது. அவ்வாறு செய்வதனால் பெரும் தவறு இழைக்கப்படுகிறது. வரலாற்றில் உள்ள கசப்பான நிகழ்ச்சிகளையும் வெளிக்கொணர வேண்டும். என்ன நேர்ந்தது என்றும் இந்த அணுகுமுறை ஏன் நிலவியது என்றும் விளக்க வேண்டும். போர்த்துக்கீச பாதிரிகளே, மசூதிகளையும் கோவில்களையும் தகர்த்தனர் என்று பழி சுமத்தும் அநாகரிகமற்றவர்கள் போல் நடந்துகொள்ளக்கூடாது. கடந்தகாலத்தை சரியாக வெளிப்படுத்துவது முக்கியமானது. அவர்கள் கோவில்களை இடித்ததனால் நாம் மசூதிகளை இடிக்க வேண்டுமெனும் வாதம் அபத்தமானது. நாம் கடந்த காலத்தை மாற்றமுடியாது. அதை முற்றிலும் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால் கடந்ததை மேலும் அறிந்துகொள்ள முயலலாம். அதைப்பற்றித்தான் வாதம் அமைந்துள்ளது.” (மதச்சார்பின்மையும் நமது எதிர்காலமும்- இந்திய மாணவர் சங்கம்-பக்கம்34)

தேசியத்திற்கும் மதத்திற்குமிடையயான தொடர்பையும் அதிகரித்துவரும் அதன் ஆபத்தையும் புரிந்து கொள்வதற்குத் துணையாக மேலும் சில தகவல்களுடன் கூடிய விளக்கங்களை பார்க்கலாம்.

May 17, 2012 Colombo Telegraph இதழில் An open letter to  Sri Lanka Anglican Bishop எனும் தலைப்பில் வெளியான கட்டுரையொன்றின் சிலபகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன். கட்டுரையாளர் ஒரு சிங்ஹள உயர் கிறிஸ்துவ புத்திஜீவி. தற்போது அவுஸ்திரேலியப் பிரஜையாக, அவுஸ்திரேலியாவில் உள்ளார்.
“அரசியல் செயற்பாடுள்ள பௌத்த துறவிகள் இனியில்லை என்றளவிற்கு கெடுக்கப்பட்டுள்ளார்கள். இனி, ஸ்ரீ லங்காவிற்குத் தேவையாகவுள்ளது, அரசியல் செயற்பாடுள்ள கிறிஸ்தவ பாதிரிகள்தான் போலும், இவ்வித பாதிரிமார்களின் உருவாக்கம், ஸ்ரீ லங்காவை அழிக்குமளவிற்கு புற்றுநோய் போல் பரவிவருகிறது. உலகப் பெரும் மதங்களில் ஒன்றான பௌத்தத்தின் மறுமலர்ச்சிக் காலம் நடைமுறைக்கு வந்துவிட்டதனால், அடுத்த பெரிய மதமான கிறிஸ்த்துவத்தின் மறுமலர்ச்சிக் காலம் ஆரம்பிப்பதற்கான காலம் கனிந்து விட்டது எனக் கூறலாம்.”

அரசியல் செயற்பாடுள்ள பாதிரிகளின் உருவாக்கமென இவர் இங்கு குறிப்பிடுவது, முற்றுமுழு அதிகாரத்துவ மஹிந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாதிரிகளையே ஆகும். கிறிஸ்தவ மறுமலர்ச்சி அக்கிறிஸ்தவர்களுக்கும் எதிராக அமையவேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். பயங்கரவாதத்தின் ஆரம்ப காலகட்டக் குறிக்கோள் துரோகிகள்தான் என்பதை என்றென்றும் மறவாதிருப்போமாக.

அவரின் கீழ்வரும் கூற்று இதற்கு ஆதாரமாக அமைகின்றது: “மஞ்சள் ஆடையினுள் புகுந்துள்ள, பௌத்த பிக்குகளெனும் கொலை வெறிக்கூட்டத்தின் நடவடிக்கைகளினால், மகத்தான மதங்களில் ஒன்றான பௌத்தம் சீரழிந்து போயுள்ளது. மற்றோர் மகத்தான மதமான கிறிஸ்துவம், உங்களாலும் (குருநாகல அங்கிலிகன் பிஷப்), உங்களைப் போன்றவர்களாலும் அரசியல் மயப்படுத்தப்பட்டுவருகிறது.”
“10கிறிஸ்தவ பாதிரிமார், பிரதானமாக றோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர், கடத்துப்பட்டு விட்டனர் அல்லது சர்வ சாதரணமாக காணாமல் போய்விட்டனர்.” எனக் கூறும் அவர், நிலமையை இவ்விதம் விளக்குகிறார். “தொலை-தூரப் பார்வையோ அல்லது அண்மிய-தூரப் பார்வையோ பொருத்தமானது என நான் கருதவில்லை. இது விவாதத்துக்குரிய வெற்று அபிப்பிராயங்களல்ல. கால தாமதமாகாமல், எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய செயல்களாகும். காலம் போய்க்கொண்டே இருக்கின்றது. காலங் கடந்து விட்டது என்று கூறினாலுங்கூட அது தப்பில்லை. இந்த சூழலை (மத ஒடுக்குமுறை) மாற்றியமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் கடந்து விட்டனவோ என்று தோன்றுகிறது. அத்துடன் கூடவே ஸ்ரீ லங்காவின் எதிர்காலமும் தொலைந்துவிட்டது.”

எரியும் பிரச்சனையென அடிக்கடி கூறப்பட்ட வார்த்தைகள் இங்கும் ஒலிக்கின்றன. தேசியத்தை மத மயப்படுத்த கிறிஸ்தவர்களும் களம் இறங்கத் தயாராகிவருகிறார்கள் என்பது புரிகிறதா? இதே கட்டுரையில் முன்வைக்கப்படும் தீர்வு இதைப் புரியவைக்கும்.

“மத சகிப்புத் தன்மையையும் தாண்டி, இந்த மதக் குழுக்கள் அனைத்தும் (கிறிஸ்துவம், இந்து, இஸ்லாமியம்) சிங்ஹள-பௌத்த இன-மதவாத பேரகங்காரவாதிகளுக்கும், இவ்வுணர்வைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களையும், ஆட்சியில் தொடர விரும்புவர்களையும் எதிர்த்து ஒன்று படுவார்களானால், ஸ்ரீ லங்கா முன்னோக்கிச் செல்லும். ஆனால் இது நடைபெறுமா என்பது சந்தேகமே. ஏனெனில், முழு நாட்டினதும் குறிப்பாக  தமிழர்களினதும் பார்வை இது விடயத்தில் பலவீனமானதாகவே உள்ளது.” தமிழ்த் தேசியம் மதவாதத் தேசியமாக மாறும்படி ஆலோசனை முவைக்கப்படுகின்றது

ஸ்ரீ லங்காவின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு (Bill on Prohibition of Forcible Conversion of Religions ) எதிராக National Christian Evangelical Association of Sri Lanka, World Evangelical Alliance Religious Liberty Commission, The Voice of the Martyrs ஆகிய அமைப்புக்கள் (இவை மூன்றும் பாதிரிவேத அமைப்புகள்) ஒன்றிணைந்து கடந்த சில வருடங்களாக இலங்கையிலும், அனைத்துலகளவிலும் இயக்கம் நடத்திவருகின்றன. United States Commission on International Religious Freedom (USCIRF) எனும் அமைப்பும் இவர்களுடன் கை கோர்த்துள்ளது. இவ் அமைப்புகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா அரசை அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் அரசாக ஆக்குவதில் நாட்டங் காட்டி வருகின்றன.

கிறிஸ்தவர்கள், பௌதத்தையிட்டு கொண்டுள்ள கடுங்கோபத்தை பின் வரும் வாக்கியங்கள் வெளிப்படுத்துவதைக் கவனிக்கவும்:

“ஸ்ரீ லங்காவில், சுமார் 20,000 புத்த பிக்குகள் உள்ளார்கள். இவர்கள் மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம்வரை இரு கூறுகளாகப் பிரிந்துள்ளனர். அரைப் பங்கினர், (சிலவேளைகளில் அதற்கும் குறைவாக இருக்கலாம்), கௌதம் புத்தரின் வழிகாட்டலின்படியான உண்மையான புத்தர்களாக உள்ளனர். அடுத்த அரைப்பங்கினர் மஞ்சள் அங்கி அணிந்த பொறுக்கிகளாகவும், கையாட்களாகவுமே உள்ளனர். அவர்கள் அங்கி அணிந்த அரசியல்வாதிகளேயாகும். அவர்கள் ஆகக் குறைந்தது தமது தலையை வழிப்பது கூட இல்லை. அவர்கள் தமக்கென்று அரசியல் கட்சியைக்கூட வைத்துள்ளார்கள், பாரளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். கௌதம புத்தர் அவர்களை இப்படியெல்லாம் இருக்கும்படி கூறவில்லை. இவர்கள்தான் இலங்கையின் அசிங்கங்களாகும்.”( May 17, 2012, COLOMBO TELEGRAPH )

“ஐந்து வருடங்களுக்கு முன்னால் Washington Post  சஞ்சிகை என்னைப்பேட்டி கண்டபோது “நீங்கள் தற்செயலாக ஸ்ரீ லங்காவின் ஜனாதிபதி ஆக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று” கேட்டார்கள். எந்தத் தயக்கமும் இன்றி நான் கூறிய பதில் “ அனைத்து பௌத்த துறவிகளும் தத்தமது தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கட்டளையிடுவேன். கௌதம புத்தர் போதித்தது போல், அவர்கள் மதிய நேரத்தில் பிட்சா பாத்திரத்துடன் தமது உணவுக்காக வீதிகளுக்கு வரலாம். இந்த நேரம் தவிர வேறு எந்த நேரத்திலும் பிக்குகள் வெளியில் வரக்க்கூடாது. அதுவும் குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளிலோ, குழப்பம் விளைவிக்கும் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. அவ்விதம் ஈடுபடுவார்களானால், அவர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்படும். அப்போதுதான் நீதியுடன் கூடிய ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமாகும்” ( May 17, 2012, COLOMBO TELEGRAPH ). நாஸ்தீக மணம் கமழும் மிகக் கடுமையான வார்த்தைகள். ஒரு சாதாரண கிறிஸ்தவனின் வாயில் இருந்து வந்திருந்தால் அவை புரிந்து கொள்ளப்படக் கூடியவை, ஆனால், வருங்கால ஜனாதிபதியென்று Washington Post குறிப்பிடும் ஒருவரின் வாயில் இருந்து இவ்வித வார்த்தைகள் வருவது ஒரு ஆபத்தின் அறிகுறியே. ‘மத’ யானைகள் இலங்கை மண்ணில் மோதிக்கொள்ளப் போகின்றன என்பதை அறிவிக்கும் ஒரு மணியோசையாகவே இதைக் கருதலாம்.

இவ்வாய்வின் அவசியத்தைப் புரிந்துகொள்ள மேலும் ஆதாரங்கள் தேவைதானா? அவசியமானால் தூங்குவதுபோல் நடிப்பவின் காதை செவிடாக்கலாமே தவிர, அவனை எவராலும் எழுப்பமுடியாது.
 தொடரும்……….
---------------------------------------------------------------------------------------------------------------------
தேசியமும் மதமும் தொடர்-3

முன்னறிவிப்பு 1 முன்னுரை பாகம் 2
சைவமும் தேசியமும்– சில தகவல்கள்
தேசியமும் மதமும் தொடர்-4
முன்னுரை பாகம் 3
பண்பாட்டுத் தேசியமும் தேசியப் பண்பாடும்– சில தகவல்கள்
முன்னறிவிப்பு 1
கட்டுரையின் சில உத்தேச உப தலைப்புகள்
இவை கீழ்வரும் வரிசைக் கிரமத்தில் அமையாது. தொடர் 4 கின் பின்னரேயே உப தலைப்புகளின் ஆக்கம் முழுமைபெறும். அதன் பின்னரே  வரிசைப்படுத்தப்படும். வாசகர்களின் ஒத்துழைப்பு மீண்டும் கோரப்படுகிறது.
‘இலங்கையின் நாஸ்திகம்’,
‘தமிழ்நாட்டின் பகுத்தறிவு வாதமும் பிரிவினையும்’
இலங்கையின் பௌத்தமும் தொன்மைக்காலக் கடவுளர்களும்’
இலங்கைச் சைவமும் பக்திமார்க்கமும்’
‘பண்பாட்டுத் தேசியமும், தேசியப் பண்பாடும்’

நன்றி:  எதுவரை on June 9, 2012

No comments: