Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Tuesday 6 August 2013

தோழர் சண்- உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : ஆசிரியர்-கைமண்

“ஒரு கம்யூனிஸப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழாவில் பேச்சாளராகக் கலந்து கொள்ள அழைத்தமைக்காக முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

மேற்படி விழாப் பேச்சாளன், நூல் பற்றி எதுவும் பேசாமல் நூல் ஆசிரியரின் செயற்பாடுகள் பற்றி மாத்திரம் பேசுவது அழகல்ல. இந்நூல் பற்றி மட்டும் நான் பேசினால் அது தோழர் சண் பற்றிய ஒரு எதிர்மறைப் படிமத்தை உருவாக்குவதாகவே அமைந்துவிடும். அதற்கான அவசியம் எப்போதும் ஏற்படாது. தோழர் சண்ணைத் தலைவராக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியொன்று செயற்படுகின்றது. இக் கட்சி 1984-இல் உருவாக்கப்பட்ட அனைத்துலக புரட்சி அமைப்பில்(RIM) உறுப்பினராகவும் உள்ளது. RIM-ஐ உருவாக்குவதில் தோழர் சண்ணிற்கு பிரதான பாத்திரம் உண்டு. ஆகவே இந்நூல் பற்றி மட்டும் பேச முற்பட்டால் அது கட்சியுடன் பகிரங்க வாதவிவாதம் ஒன்றுக்கு அறைகூவுவதாக அமைந்துவிடும். சகோதரர்கள் தமக்குள், இரு பகுதியினரினதும் சம்மதத்துடன் பகிரங்க உரையாடல்கள் நடத்திக் கொள்ளலாம். ஆனால் எக்காரணங்கொண்டும் தமக்குள் பகிரங்க விவாதங்கள் நடத்தக்கூடாது. “தோழர் சண்- உள் அரங்கிலும் அனைத்துலக் அரங்கிலும்” எனும் தலைப்பிலான எனது உரை தோழர் சண்ணுடனான ஒரு பகிரங்க கலந்துரையாடலாக இருக்கும் என விழா அமைப்பாளர்களிடம் அனுமதி பெற்றே இவ்வுரையை ஆரம்பிக்கின்றேன்.

சமூகப்புரட்சியாளர்களாகிய எமது இன்றைய தேவை, தோழர் சண்ணின் அன்றைய சரியான தப்பான நடவடிக்கைகளில் இருந்து கற்றுக்கொண்டு, இன்றைய வரலாற்றிலான எமது பங்காற்றல்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றிக்கொள்வதேயாகும். இவ்விதம் கற்றுக்கொள்வதற்காக நாம் எடுக்கும் பகிரங்கமுயற்சிகள் அவரைச் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அவரின் நேர்மறை, எதிர்மறை பங்களிப்புகள் இரண்டையும் பற்றிப் பேசக்கூடியதான ஒரு தலைப்பை, அமைப்பாளரின் அனுமதியுடன் நானே தேர்ந்தெடுத்துள்ளேன்.

எனது தலைப்புக்குள் செல்கிறேன்.

இலங்கைப் புரட்சியிலும், உலகப் புரட்சியிலுமான தோழர் சண்ணின் பங்களிப்புகளை இரு அரங்குகளாகப் பிரித்ததுவும், அவற்றில் உலகப்புரட்சி அரங்கை முதலாவதாக வைத்ததுவும் காரணத்துடந்தான். உலக அரங்கில் அவரின் பங்களிப்புகள் கல்மேல் எழுத்துப்போல் புகழுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் உள்நாட்டரங்கில் அவரின் பங்களிப்புகள் ஆரம்பத்தில் புகழுக்குரியதாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவரின் புகழ் மங்க ஆரம்பித்தது. அவரின் தவறுகளும் இதற்கோர் காரணமாக இருந்தன. ஆனால் அவரின் இறுதிக்கால உள்நாட்டரங்கு புரட்சிகர நடவடிக்கைகள் அவர் மீண்டும் புகழுடன் எழுவதற்குமான அடிப்படைகளை ஆக்கிவந்தன. ஆனால் இந் நடவடிக்கைகளின் வெற்றிகள் அறுவடை செய்யப்படும் முன்பாகவே அவர் செயற்படாமுடியா நிலைக்கு உள்ளாகிவிட்டார். ஆனால் உள்நாட்டரங்கில் புரட்சிகர எச்சத்தை விட்டுச் சென்றுள்ளார். அனைத்துலகரங்கில் புகழுடம்பு எய்திய அவர், தனது எச்சத்தின் வீச்சால் உள்நாட்டரங்கில் மீண்டும் புகழ்பெறுவார் என நம்புவோம். இந் நம்பிக்கைக்குத் துணைபுரிவதற்காகவே இத் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தோழர் சண்ணுடனான பகிரங்க வாத-விவாதந்தான் இங்கு தவிர்க்கப்படுகிறதே தவிர, அவரின் எதிர்மறைச் செயல்பாடுகளையும், சுபாவங்களையும் பற்றிய கலந்துரையாடல் தவிர்க்கப்படவில்லை. 1920-இல் பிறந்த நாகலிங்கம் சண்முகதாசன்தான் இறந்துவிட்டாரே தவிர 1969-இல் பிறந்த (கட்சியின் 9வது தேசிய மாநாடு) தோழர் சண் எனும் கருத்துக் கட்டுமான, அமைப்புக் கட்டுமான முன்னோடி இறக்கவில்லை.

அ. அனைத்துலக அரங்கில்
தோழர் சண்ணின் அனைத்துலக அரங்கப் புகழுக்கான காரணங்கள் மூன்றாகும். அவையாவன:
  1. அவரிடம் காணப்பட்ட ‘பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்’ குணாம்சங்கள்.
  2. பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக தத்துவார்த்தப் பங்களிப்புகள்.
  3. பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக அமைப்புப் பங்களிப்புகள்.

ஆ. உள்நாட்டரங்கில்

தோழர் சண் உள்நாட்டரங்கில் மதிக்கப்படுவதற்கான காரணங்கள் எட்டு வகைப்படும். அவையாவன:

  1. இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் மாஓ பிரிவுக்கு (அ) தத்துவார்த்தத் தலைமை ஏற்றது. (ஆ)அமைப்பு உருவாக்கத் தலைமை ஏற்றது.
  2. இறுதிவரை விலை போகாமை.
  3. சிறந்த அறிவாளி.
  4. மலையகத் தோட்டத் தொழிலாளர்களை போராளிகளாக அணிதிரட்டியமை.
  5. யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடத்தியது.
  6. பௌத்தம் பற்றிய அவரின் புரட்சிகரமான நிலைப்பாடு.
  7. 1983-ற்குப் பின்னர், இலங்கையின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாக நேர்மறைக் கொள்கையின் படி செயற்பட ஆரம்பித்தது.
  8. தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் சுய விமர்சனத்தில் ஒரு புதிய நேர்மறை வரலாற்றை ஆரம்பித்து வைத்தது.
இவ் எட்டு அம்சங்களிலும் அவரின் நேர்மறைப் பங்களிப்புகளும் உண்டு, எதிர்மறைப் பங்களிப்புகளும் உண்டு. இவை அனைத்தையும் சிறப்பான முறையிலும் அல்லது முற்போக்கான முறையிலும் தொடக்கிவைத்தார். அனால் அவை புரட்சிகரமான முறையில் தொடக்கி வைக்கப்படாத படியால் ஒன்றில் இடையில் கைவிடப்பட்டன அல்லது தவறான முறையில் முடிக்கப்பட்டன. பலராலும் தோழர் சண்ணின் மிகச்சிறப்பு அம்சமாகக் கருதப்படும் அவரின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் இருந்தே தொழிற்சங்க வேலைகள் திரிபுவாதத் தன்மை பெற்றதாகவே இருந்து வந்தது என்பதாலும், அவரின் உள் அரங்குத் தவறுகளுக்கெல்லாம் காரணமாக இருந்தது அவரின் தொழிற்சங்க கண்ணோட்டமும், பலமும்தான் என்பதாலும் அத் தலைப்பு இங்கு சேர்க்கப்படவில்லை.

இது அரை மணிநேரத்துள் அமையவேண்டிய ஒரு உரையாக உள்ளதால், இவற்றுள் சில தலைப்புகள் மட்டுமே இங்கு அலசப்படுகிறது. ஏனையவை முற்றாகவே தவிர்க்கப்படுகின்றன. அலசப்படும் தலைப்புகள்:

அ.1)  அவரிடம் காணப்பட்ட ‘பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்’                குணாம்சங்கள்.
அ.3) பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக அமைப்புப் பங்களிப்புகள்.

ஆ.1) இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் மாஓ பிரிவுக்கு அமைப்பு உருவாக்கத் தலைமை ஏற்றது.
ஆ.5) யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடத்தியது.
ஆ.6) பௌத்தம் பற்றிய அவரின் புரட்சிகரமான நிலைப்பாடு

அ.1) அவரிடம் காணப்பட்ட ‘பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்’ குணாம்சங்கள்.

இதன்படி மொத்தத் தலைப்புகளில் ஐந்து தலைப்புகளே எடுக்கப்பட்டுள்ளன.
இவரின் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல் கண்ணோட்டத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(மாஓ), Thousand Flowers என்ற தலைப்பிலான தனது Journal of the Ceylon Communist Party-Maoist (CCP-M) Volume 1, Issue 1 March 2008 இதழில் பின்வருமாறு கூறுகின்றது;

“ஒன்றில் நாம் அனைவரும் உலகைக் கம்யூனிஸமயமாகி ஒருமித்து விடுதலையடைவோம் அல்லது எம்மில் எவராலும் விடுதலையடைய முடியாது.” என்பதே பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலின் அனைத்துவியாபக விதியாகும். இவ்விதியானது, ஏகாதிபத்தியக் கட்டுமானம் ஆதியோடு அந்தமாகவும், வேரும் வேரடி மண்ணோடும் தூக்கியெறியப்படவும், நொறுக்கப்படவும், வேண்டுமெனும் ஆணித்தரமான உண்மையைப் பறைசாற்றுகிறது. அப்போதுதான், அனைத்து வளங்களும், சுதந்திரமும் அனைவருக்கும் உரித்தானது எனும் அடிப்படைக் குணாம்சத்தைக் கொண்டிருக்க கூடியதாக இன்றைய உலகையும் சமுதாயத்தையும் மறுநிர்மாணம் செய்யமுடியும். சமுதாயத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கங்களினது அனைத்து அதிகாரங்களையும் வல்லமைகளையும் பறித்தெடுப்பதன் மூலமே இவ்வித மறுநிர்மாணம் சாத்தியப்படும்…..”

“….கம்யூனிஸப் புரட்சியானது சாராம்சத்தில் மனித இனத்தின் அனைத்துலகளவிலான பரிணாம வரலாற்று நிகழ்வுப் போக்காகும். இப் பரிணாமம், தனிச்சொத்தின் பொருள்மய, சித்தாந்தமய அடித்தளத்தையும், தனிச்சொத்து அவா மனிதனின் சுயத்தை சக்தி மிக்கதாக்கிறது எனும் மாயையும் தகர்த்து எறிதலை மையக் குறிகோளாகக் கொண்டது. இது உலகையும் மனித இனத்தையும் விடுதலை செய்வதை நோக்கிய பரிணாமம் ஆகும். ‘ஒன்றில் நாம் அனைவரும் சொர்க்கத்தை உருவாக்குவோம் அல்லது எம்மில் எவராலும் இவ் நரகத்தில் இருந்து மீள முடியாது.’ இதுதான் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலை இயக்கும் அறிவியல் கோட்பாடாகும். ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறும் சுதந்திரமான புறச்சூழலே, அனைவருக்குமான சுதந்திரம் என்ற உண்மையின் வடிவமே, பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலாகும். அறிவிய-தத்துவவியத் தன்மைபெற்ற இக்கூற்றின் மூலம் மாக்ஸிஸமானது பிற அனைத்து தத்துவவியல், மதவியற் சிந்தனைகளையும் மேவி நிற்கிறது.”……….

பாரதி தனது கவித்துவ வார்த்தையில் இதை இவ்விதம் கூறுகிறார். “முப்பது கோடியும் வாழ்வோம் வீழின் முப்பது கோடியும் ஒன்றாய் வீழ்வோம்”

……. “மாக்ஸ் கூறியது போல ‘மனித இனத்தை மீட்காது பாட்டாளி வர்க்கத்தால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது.’ தன்னால் முன்வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் வேலைத்திட்டத்தை பின்வரும் அறைகூவலுடன் முடிக்கிறார். ‘ உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுவீர்! உங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. ஆனால் பெறுவதற்கோ ஒரு உலகமேயுண்டு.’……”

“தோழர் சண்ணின் மெச்சத்தகு தன்மையைப் புரிந்துகொள்வதற்கும், உண்மைப் புரட்சியாளர்களுக்கும் போலிப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்கும் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலின் அறிவியல் கோட்பாடுகளை சரியாகவும், ஆழமான முறையிலும், இறுக்கமாகவும் பற்றிக்கொள்ளல் அவசியமானதாகும்…………….எங்கும்-என்றென்றும், எச்சந்தர்ப்பத்திலும், என்றென்றும் புரட்சிக்கு வழிகாட்டவும், தலைமை தாங்கவுமான அறிவுபூர்வமான மார்க்கத்தை வகுப்பதில் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்தான் அடிப்படையாக இருக்கின்றது என்பதே ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் நம்பிக்கையாக இருக்கவேண்டும். தன்னாட்டில் தன்னால் கட்டிவளர்க்கப்படும், ஒழுங்குபடுத்தப்படும் புரட்சியானது உலகப்புரட்சியின் பிரிக்கமுடியாத அம்சம் என்பதையும், உலகப் புரட்சியில் இருந்துதான் அது முளைத்தெழுகின்றது என்பதையும் அவர் நினைவில் கொள்ளவேண்டும். தனியொரு நாட்டின் புரட்சியானது உலகப் புரட்சியை முன்னெடுக்கவும், துரிதப்படுத்தவுமான குறிக்கோளுக்கு சேவைசெய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். இதுதான் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் விதியும், பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலின் சாராம்சமுமாகும்.”

அனைத்துலகளவில் சண் நடத்திய வர்க்கப்போராட்டத்திற்குத் துணைநின்ற சண்ணின் சிந்தனைக் கட்டுமானத்தை இது தெளிவாக எடுத்தியம்புகின்றது. இரு பெரும் சோஷலிஸ நாடுகளும் தமது பாட்டாளிவர்க்க அனைத்துலக நலனைக் கைகழுவிவிட்ட நிலையில், உலகம் எங்கும் பரந்து வாழும் புரட்சியாளர்கள் அவநம்பிக்கையுற்று வாழ்ந்த நிலையில் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலை முன்வைத்ததுவும் அதன் அடிப்படையில் உலகளாவிய அளவில் கம்யூனிஸ்டுகளை ஒன்றுசேர்த்து அமைப்புக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டது உலகப்புரட்சிக்கும் இலங்கைப் புரட்சிக்கும் தோழர் சண் செய்த மகத்தான பங்களிப்பாகும். உலகப் புரட்சி செழுமைப்படுமென்றால் இன்றோ நாளையோ இலங்கைப் புரட்சியும் செழுமைப்படும்.

…….. “தனித்தனி நாடுகளில் நடைபெறும் புரட்சிகர போராட்டங்கள்தாம் உலகப் பாட்டாளி வர்க்க சமதர்மப் புரட்சியின் பிரிக்கமுடியாத, அத்தியாவசிய ஆக்கக்கூறுகளாகும். பழைய ஏகாதிபத்திய ஒழுங்குமுறையை அழித்தொழித்ததுவும், பாட்டாளிவர்க்கப் புரட்சியையும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் அனைத்து கட்டங்களிலும், அனைத்து நிலைகளிலும் முன்னெடுத்துச் செல்லவும், இவை எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளில் இருந்தும், திருப்புமுனைத் தடுமாற்றங்களில் இருந்து இவற்றைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நடவடிக்கைகள்தான் உலகப் புரட்சியைத் துரிதப்படுத்துவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் தனித்தனி நாடுகளின் புரட்சிப் போராட்டங்களின் பங்களிப்புகளின் சாராம்சமாகும். தனித்தனிநாடுகளில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களும், அவர்களால் நிறுவப்படும் பாட்டாளிவர்க்க அரசும், உலகப் புரட்சியின் தளப் பிரதேசங்களாகச் செயல்படுகின்றன. உலகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இவ்வரசுகளின் பங்களிப்புகள் என்னவாக இருக்கின்றன என்பதுதான் இவ் அரசுகளின் புரட்சிகரத்தன்மை பற்றிய மதிப்பீட்டிற்கான அளவுகோலாக இருக்கும். ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு வேறு எந்த மதிப்பீடும் இல்லை, இவ்வித புரட்சி நிலைத்து நிற்பதற்கான வேறு எந்தக் காரணமும் இல்லை. அதுபோலவே, ஒரு கம்யூனிஸ்ட் தனது சொந்த நாட்டின் பாட்டாளிவர்க்கப் புரட்சியை நேரடியாகவும் பிற நாடுகளின் புரட்சியை உலகளவில் கூட்டாகவும் முன்னெடுத்துச் செல்லாவிட்டால் அவனுக்கு எந்த மதிப்பீடும் இல்லை. அவன் இருப்பதற்கான காரணமும் இல்லை.”……..

…… “ஆகையினால், ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் வாழ்க்கை, அதிலும் குறிப்பாக, ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை, மா-லெ-மாஓயிசம் என்ற அறிவியலைப் பாதுகாக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளைக் கொண்டுதான் மதிப்பிடப்படவேண்டும். இந்த அர்த்தத்தில் உலகப் பாட்டாளிவர்க்க சமதர்மப் புரட்சியைப் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவுமான பணியில் மிகவும் முக்கியத்துவம் மிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். கம்யூனிஸ்ட் புரட்சியை எமது நாட்டில் நடத்துவதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்பும் எவராயினும் சரி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீர்மானகரமான இறுதி யுத்தத்தையும், வரலாற்றுக்கு முன்னைய அடிமைத்தனத்தையும் எதிர்ப்பதற்கான யுத்தத்தை நடத்த விரும்பும் எவராயினும் சரி, உலகளாவிய மனித ஈடேற்றம் பெற்ற புதிய உலகொன்றைப் படைக்க விரும்புவோர்கள் எவராயினும் சரி, அவர்கள் தமது கைகளை உயர்த்தி எமது நாட்டின் கம்யூனிஸ இயக்கத்தின் தந்தையும், அன்புக்குரிய ஆசானும், மதிப்புமிக்க தலைவனுமான தோழர் சண்ணிற்கு வணக்கம் செலுத்தாமல் இருக்க முடியாது.”

மேற்குறிப்பிடப்பட்ட இவ்விரு மேற்கோள்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, மூன்று விடயங்கள் எமது கவனத்தை ஈர்க்கின்றன. அவையாவன:

1.உலகப் புரட்சி தொடர்பான அனைத்துலகக் கோட்பாடு.
2.அனைத்துலகவியலுக்கும் தேசியவியலுக்குமான தொடர்புகள்.
3.தோழர் சண் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்பதுபற்றி.

1.உலகப் புரட்சி தொடர்பான அனைத்துலகக் கோட்பாடு.

எந்த வர்க்கத்தினது அனைத்துலகக் கண்ணோட்டமும் இல்லாத தேசியவாதிகளும், தாம் தேசியவாதிகள் அல்ல என்று பறைசாற்றிக் கொண்டு யதார்த்த நிலைக்கொப்ப(யதார்த்த நிலை என்பது தேசிய நிலைதான்) சிந்திக்கவேண்டும் என அழுத்திக் கூறி அனைத்துலகக் கண்ணோட்டத்தை நிராகரிக்கும் போலிகளும், இன்ன பிறரும், கம்யூனிஸ இயக்க உலகத் தலைவர்களின் படைப்புகளில் இருந்து நுனிப்புல் மேய்ந்தால் போல் சில மேற்கோள்களைக் கத்தரித்து எடுத்துக்கொண்டு தமது தேசியக் கண்ணோட்டத்திற்கு பயன்படுத்திவருவது கம்யூனிஸ சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதாகாது. அனைத்துலகவியல் பார்வை இல்லாதவர்களால், உலகை நேசிக்கத் தெரியாதவர்களால், மனிதத்தை முன்நிறுத்திச் சிந்திக்க முடியாதவர்களால் அனைத்துலகக் கோட்பாடு பற்றிப் புரிந்து கொள்ளவே முடியாது. ஒருவன் மாக்ஸிஸ்டாக இருப்பதற்கும் கம்யூனிஸ்டாக இருப்பதற்கும் எதுவித தொடர்பும் இல்லை எனச் சிலர் கருதுகிறார்கள். இவர்கள் மாக்ஸிஸத்தை ஒரு அறிவுத் தொகுப்பாகவும், அரசியல் வேலைத்திட்டத் தொகுப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு நூலகமாகவும் கருதுகிறார்கள். கம்யூனிஸ்டாக இல்லாதவனால் மாக்ஸிஸ்டாக இருக்கமுடியாது. ஏனெனில் மாக்ஸிஸம் உலகைப்பற்றிய ஒரு பகுப்பும் தொகுப்பும் மாத்திரமல்ல, அது உலகைப்பபற்றிய ஒரு அறிவுபூர்வமான விமர்சனம் மட்டுமல்ல. மாக்ஸிஸம் உலகை மாற்றுவதற்கான ஒரு உந்தமாகும். உலகைமாற்றுவதற்கான அறிவியல் பூர்வமான உந்தல்தான் மாக்ஸிஸமாகும். அந்த உந்தல்தான் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலாகும்.

இதனால் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல் கண்ணோட்டம் உள்ளவர்களால்தான் கம்யூனிஸப் புரட்சியின் அனைத்துலகக் கோட்பாடு தொடர்பாகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கமுடியும். இவ் அனைத்துலகக் கோட்பாடுதான் அவர்களின் உள் அரங்கு நடவடிக்கைகளையும் வழிநடத்துவதாகவும் இருக்கவேண்டும்.

3.தோழர் சண் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்பதுபற்றி.

அறிக்கை முழுமையையும் படித்துப் பார்த்தும் இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இக் கூற்றை இரு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய 1930களின் பிற்பகுதியில் இருந்து கூறப்படுவதாக இருக்கலாம். அல்லது கட்சியின் 9-வது மகாநாடுதான்(1969) கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தது, அதற்கு முன்னர் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ இயக்கமும் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டவைகள் அல்ல என்று கூறுவதாகவும் இருக்கலாம். முதலாவது அர்த்தத்திலேயே இக்கூற்று முன்வைக்கப்பட்டதுபோல் தெரிகிறது. எவ்விதம் கூறினாலும் இக்கூற்றுத் தவறானதே. இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரண்டாவது தலைமுறையினரின் தந்தை என்று கூறினால் அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படக் கூடிய எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு அறிவியல் கூற்றாக அமையும். இல்லையேல் இது ஒரு அறிவியல் கூற்றல்ல.

2. அனைத்துலகவியலும்-தேசியவியலும்

இதை நாம் இரண்டு தலைப்புகளில் அவதானிக்கலாம். அவையாவன:

   1.உலகளாவிய பொதுப்பார்வையும்- தேசியப்பார்வையும்
   2.அனைத்துலகவியலும்-சோஷலிஸ தாய்நாட்டியலும்

 2.1) உலகளாவிய பொதுப்பார்வையும்- தேசியப்பார்வையும்

உலகளாவிய பொதுப்பார்வை என்பது;

அ) உலக நாடுகளிடையேயான முரண்பாடுகளை உலகளாவிய தனியொரு சமூக நிகழ்வுப்போக்காக அல்லது தனி அலகாக எடுத்துக்கொண்டு, அம் முரண்பாடுகளை கம்யூனிஸ உலகப் புரட்சிக்குச் சாதகமாக கையாள்வது எவ்விதம் என்பது தொடர்பான அரசியல் பார்வையாகும். இது பிரதானமாக அரசியல் தளத்திலானது.

ஆ) மனித சமுதாயத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டு மனித சமூக இயக்கவிதிகளைப்பற்றி வகுத்துக் கொள்ளும் பொதுப்பார்வையாகும். இப்பார்வை அரசியல், தத்துவம், பண்பாடு, பொருளாதாரம் இத்தியாதி அனைத்தையும் உள்ளடக்கியதாகும். ஆனால் தத்துவவியலே இதில் முதன்மை பெறுகிறது. இது பிரதானமாக தத்துவத் தளத்திலானது.

இ) உலக நாடுகளை அவற்றின் அரசிய-பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் வெவ்வேறு கொத்தணிகளாகப் பிரித்து, ஒவ்வொரு கொத்தணிகளுக்குமென தனித் தனி பொதுவிதிகளையும் மார்க்கங்களையும் வகுத்துக் கொள்ளல். இது உண்மையிலேயே உலகளாவிய பொதுப்பார்வையல்ல. இது பிராந்தியப் பார்வையே. ஆனால் உலகளாவிய பொதுப்பார்வைக்கு உட்பட்ட, உலகளாவிய அளவிலான கம்யூனிஸப் புரட்சியுடன் ஒத்துப்போகக்கூடிய பிராந்தியப் பார்வையாகும். இது பெருமளவிற்கு அரசிய-பொருளாதாரத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் ஆனது.

தேசியப் பார்வை என்பது;

ஒவ்வொரு தேசங்களையும் அல்லது நாடுகளையும் தனிதனி அலகுகளாக எடுத்துக்கொண்டு அவ் ஒவ்வொரு அலகுகளிலும் கம்யூனிஸப் புரட்சியை எவ்விதம் நடத்துவது என்பது தொடர்பான விதிகளின் தொகுப்பாகும். இது முன்கூறிய உலகளாவிய பொதுப்பார்வையின் மூன்று பகுதிக்கும் உட்பட்டது. அம்மூன்றுடனும் பொருந்திப் போகக்கூடிய முறையில்தான் இத் தொகுப்பு அமையும். தேசியப்பார்வையின் தனித்துவம் என்பது இம்மூன்றில் இருந்தும் சுதந்திரமானது என்பதல்ல. இம்மூன்றின் துணையுடன், இம்மூன்றுக்கும் இணக்கமாகத் தனது தேசத்துக்கோ அல்லது நாட்டுக்கோ பொருந்தக்கூடிய முறையில், அத்தேசக் கம்யூனிஸ்டுகளின் சொந்த உள்நாட்டு ஆக்கமே இத் தேசியப் பார்வையாகும். தோழர் சண்ணிடம் இவ் உள்நாட்டு ஆக்கத்திறன் மிகப் பலவீனமானதாகவே இருந்தது.

2.2) அனைத்துலகவியலும்-சோஷலிஸ தாய்நாட்டியலும்

கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுகளும் தேசியப் பார்வை இல்லாதவர்களல்ல. அவை தேசியப்பார்வை இல்லாதவர்களாக இருக்கவும் கூடாது இருக்கவும் முடியாது. அவர்களது தேசியப் பார்வை தத்தமது அகநிலைக்குப் பொருத்தமானதாகவும், பிற சோஷலிஸம் அல்லாத நாடுகளுடனான உறவுகளில் அவ்வுறவு பாட்டாளிவர்க்க அனைத்துலக வியலுக்குப் பொருத்தப்பாடு மிக்கதாகவும் இருக்கவேண்டும். அது மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும், நாடுகளுக்கிடையேயான உறவுகளில் முதலாளித்துவ வழமையைக் கணக்கில் எடுக்காது தமக்கிடையே பரஸ்பர உறவுகளை தத்தமது இருத்தலுக்கு பாதிப்பில்லாத முறையில் பேணிவர வேண்டும். ஆனால் இவ்விதம் நடைபெறுகிறதா என்பதே இங்குள்ள கேள்வி. புரட்சிகர அனைத்துலக இயக்கத்தில் உறுப்பினராக உள்ள சில கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் அவ்விதம் நடந்து கொள்வதில்லை.

இரண்டாம் உலகயுத்தத்தின் பின்பான சோவியத் யூனியனும், கலாச்சாரப் புரட்சியின் பின்பான சீனாவும் கம்யூனிஸ உலகப்புரட்சி என்ற கண்ணோட்டத்தை கைவிட்டு, தத்தமது தேசிய நலனையே முன்நிலைப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ நாடுகளுடனான நல்லுறவே அவர்களின் தேசிய நலனாக உள்ளது. பாட்டாளிவர்க்க அனைத்துலக நலனைக் கைகழுவி விட்டதே இவ்விரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்த மாபெரும் தவறாகும். உலக கம்யூனிஸ இயக்கத்தில் உள்ள பிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் மிகப் பெரும்பானமையானவை இவ்விரு பெரும் கட்சிகளின் துதிபாடிகளாக மாறின. துதிபாடிய கட்சிகள் தத்தமது நாடுகளின் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அலங்காரப் பொம்மைகளாக மாறின. சில கட்சிகள் சீரழிந்தன. இவ்விதம் துதிபாடிய கட்சிகள் அனைத்தும் பெரிய சோஷலிஸ நாடுகளை சோஷலிஸத் தாய்நாடு எனக் கருதத் தொடங்கின. இத் தாய்நாடுகளின் தேசிய நலனுக்குப் பணிபுரிவதையே அனைத்துலகப் பாட்டாளிவர்க்கத்துவ்க்கான சேவை எனக் கருதின. சோஷலிஸ தாய்நாடுகளும் இக்கருத்தை ஊக்குவித்தன. சோஷலிஸ எஜமான்களிடமிருந்தும், அவ் எஜமானர்களின் தரகர்களிடம் இருந்தும் (அனைத்துவகைத் திரிபுவாதிகள்) உலக கம்யூனிஸ இயக்கத்தை மீட்டெடுப்பதுதான் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலர்களின் இன்றைய கடமையாகும். இக்கடமையை உள்நாட்டரங்கிலும், அனைத்துலக அரங்கிலும் முன்னெடுத்துச் செல்வதில் தோழர் சண் நல்லதோர் பங்காற்றியுள்ளார்.

அ.3) பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக அமைப்புப் பங்களிப்புகள்.

  • இந்திய கம்யூனிஸ்டுகள் புரட்சிகரப் பாதைக்குத் திரும்பத் துணைபுரிந்தமை.
தோழரின் நினைவுகளை குறிப்பிடுவது அவசியமானது. தோழர் சண்ணின் அனைத்துலக பங்களிப்புப் பற்றி எம்.என்.ராவுணி எனும் மலையாளத் தோழர் குறிப்பிடும்போது;

“1962-இல் நடைபெற்ற இந்திய-சீன யுத்தத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கடைகெட்ட வகை இந்திய தேசிய பேரகங்காரவாதத்துள் மூழ்கியிருந்தது. அப்போது அவர்(தோழர் சண்) இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ‘தொழிலாளி’யில் யுத்தத்திற்கான காரணம் ஏகாதிபத்தியவாதிகள்தான் என்பதையும் இந்திய தரகு முதலாளித்துவ அரசு ஏகாதிபத்தியவாதிகளின் இஷ்டப்படி செயற்படுகிறார்கள் என்பதையும் தெளிவு படுத்தி பல தொடர்கட்டுரைகள் எழுதிவந்தார்……

இந்திய-சீன உறவுகள் முடிவடைந்த பின்னர், குருஷேவிற்கு எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களைப் பெறுவது எமக்குச் சிரமமானதாக இருந்தது…..தோழர் சண்முகதாசன் எமக்கு உதவ முன்வந்தார். அவ் இலக்கியங்களை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளை வெற்றிகரமாக மேற்கொண்டார். ‘டொகிலியாட்டி பற்றி’ (இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்), ‘டொக்கிலியாட்டி பற்றி மேலும்’ எனும் நூல்கள் உட்பட பல நூல்களை இலங்கையில் அச்சாக்கி ஏராளமான பிரதிகள் எமக்கு அனுப்பிவந்தார்……………. 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாக்ஸிஸ்ட்) உருவானது. ஆனால் தலைமை மிக விரைவிலேயே தனது திரிபுவாதக் குணாம்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. சகோதரக் கட்சிகளுக்கு இடையேயான உறவுகள் தொடர்பான ஒழுங்குகளை மீறாத முறையில், அவர்(தோழர் சண்) தலைவர்களின் போக்கைத் தொடர்சியாக விமர்சித்துவந்தார். இக்கட்சியின் 7வது காங்கிரஸ், ‘திரிபுவாதம் பற்றி’ எனும் ஒரு அறிக்கையை கட்சியின் தீர்மானமாக முன்மொழிந்தது. இவ் அறிக்கையில் உள்ளடங்கியிருந்த திரிபுவாதத் தவறுகளை காலதாமதமின்றி நீண்ட அறிக்கைமூலம் எதிர்கொண்டார். கட்சியின் தலைமை இவரின் அறிக்கையை நிராகரித்தது. ஆனால் கட்சியினுள் இருந்த கம்யூனிஸ்டுகள் கட்சியின் தலைமையுடன் போராடுவதற்கும், தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்குமான திசைவழியை சுட்டிக் காண்பிப்பதில் இவ் அறிக்கை பெரும் துணைபுரிந்தது.

“………. இந்தியப் புரட்சிக்குத் தலைமைதாங்கக்கூடிய வலு மா-சே-துங் சிந்தனைக்கு மாத்திரமே உண்டு” எனும் தலைப்பில் ‘லிபரேசன்’ இதழில் இவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரபல்யமானது. (Theoretical Organ of the All-Indian Co-ordination Committee of Revolutionaries) இக் கமிட்டியின் நான்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக இக்கட்டுரை பேணப்பட்டுவந்தது. இதன் மலையாள மொழிபெயர்ப்பு கேரளாவில் மாத்திரம் பல ஆயிரக்கணக்கான பிரதிகள் பல பதிப்புகளாக வெளிவந்தன. அதே நேரம் இக் கமிட்டியின் ஒருமுனைவாதத் தவறுகள் எனத் தான் கருதியவற்றை அடிக்கடி சுட்டிக்காட்டவும் இவர் தயங்கவில்லை.

  • பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியை ஆதரித்து உள்அரங்கிலும், அனைத்துலகரங்கிலும் தத்துவார்த்தப் பிரச்சாரம் செய்தமை. மாநாடுகளில் கலந்துகொண்டமை. கட்டுரைகள் எழுதியமை. இவரின் இரு கட்டுரைகள் பீக்கிங் ரிவீயூ இதழிலும் வெளியாகின. இந்தோனேசியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய ஒரு கட்டுரையும் வெளியாகியது. இந் நடவடிக்கைகளின் மூலம் பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக்கொண்டவர்களிடையே தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டமை.
  • மாஓ சிந்தனையை நிராகரிக்கும் கொள்கையுடன் கூடிய அனைத்துலக புரட்சிகர இயக்கத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியை உலக அரங்கில் முறியடித்தமை.
  • மாஓ சிந்தனையை ஏற்றுக் கொண்ட அனைத்துலக புரட்சிகர இயக்கத்தின் (RIM)அமைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டமை.
  • இவ் அமைப்பால் வெளியிடப்படும் விழிப்புணர்வு ஏடான WIN இதழின் பத்திரியகையாளர் சந்திப்பிற்கு RIM சார்பில் தலைமை தாங்கியது. இவரின் நினைவுநாளைக் கொண்டாடும் விதமாக இவ்விதழ் நினைவுக் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
  • தெற்காசிய புரட்சி இயக்கங்களின் ஒன்றிணைப்புக் கமிட்டி ஒன்றின் அமைப்புக்கான அத்திவாரம் இட்டது. இக் கமிட்டி தற்போது அமைக்கப்பட்டுவிட்டது
ஆ.1.) இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் மாஓ பிரிவுக்கு அமைப்பு உருவாக்கத் தலைமை ஏற்றது.

இலங்கையின் இடதுசாரிகள் அமைப்பாகச் செயல்படும் விடயத்தில் மிகவும் பலவீனர்களாகவே உள்ளோம். இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் இரு பிரிவுகளான ட்ரொக்ஸிஸப் பிரிவும், மாஓயிஸ்ட் பிரிவும் அவை தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை குழுக்களாக தொடர்ந்தும் பிரிவுண்டு செல்வதையும், முக்கிய தோழர்கள் விலகுவதும் அல்லது விலக்கப்படுவதையுமே தமது வழமையாகக் கொண்டுள்ளன. கட்சிக்குள் நடக்கும் வர்க்கபோராட்டங்கள் இவ்விதம் தான் முடிவுறும் என்கிறோம். ஆனால் தேசியக் குழுக்கள் இவ்விதம் பிளவுண்டு கிடப்பது கண்டு, சிறு முதலாளித்துவவாதிகளால் ஐக்கியப்பட முடியாது எனக் கிண்டல் அடிக்கிறோம். எம்மை அளக்க தாராளவாதமும், பிறரை அளக்க மாக்ஸிஸமும்தான் எமது பண்பாக உள்ளது.

பிரிந்து செல்லும் ஒவ்வொரு குழுக்களும் தம்மைக் கட்சிகள் என்றே அழைத்துக் கொள்கின்றன. ஆனால் இவற்றில் எதுவுமே கட்சிகளல்ல. கட்சியென்பது தமக்குத் தாம வழங்கிக் கொள்ளும் பதக்கமும் அல்ல, பிறர் அவர்களுக்கு வழங்கும் பதக்கமும் அல்ல. கட்சி என்பது மக்கள் திரளின் (அமைப்புரீதியாக அணிதிரண்டுள்ள மக்கள்) அரசியல் தலைவர்களின் ஒன்றிணைவாகும். அதிலும் கம்யூனிஸ்ட் கட்சியென்பது பல்வேறுபட்ட வர்க்கங்களினதும், வர்க்கத் தட்டுகளினதும் இயங்குநிலைக் கூட்டுத் தொகுப்பாக அமைந்த மக்கள் திரளின் அரசியல் தளபதிகளின் கூட்டமைப்பாகும். ஒவ்வொரு தளபதிகளும் மக்கள் திரளின் வெவ்வேறு தொகுப்புகளுக்கு தலைமை தாங்குபவர்களாகும். இத்தலைமையும் கூட தனிநபர் பொறுப்பும் கூட்டு முடிவும் என்ற முறையில் அமைந்ததாகும். ஆனால் 1971-இல் இருந்து தோன்றத் தொடங்கிய ஒவ்வொரு ‘கட்சி’களும் படையில்லாத் தளபதிகளின் கூட்டாகவே உள்ளன. இக் கூட்டும் சிறு பேதங்கள் வந்தாலும் உடைந்துவிடும் தன்மை பெற்றதாகவெ உள்ளன. தனிநபர் பொறுப்புகள் இல்லாத தனிநபர்களின் கூட்டு இவ்விதமானதாகதான் இருக்கும். ஆகவே இடது ‘கட்சி’களின் அமைப்பு உருவாக்க வரலாறு என்பது எதிர்மறை வரலாறேயாகும். இதற்கான பழியை தோழர் சண்மீது சுமத்துவதே பொதுவான வழமையாக இருந்தது. அதுபற்றி சற்று அவதானிப்போம்.

1978-இல் கட்சியைவிட்டு விலகிச்சென்று இ.க.க.(இடது) எனும் பெயரில் இயங்கத் தொடங்கிய அணியின் கருத்தை நோக்குவோம்:

“….. அவற்றை(அனைத்துலக கோட்பாடுகளை) இலங்கையின் யதார்த்த நிலைமைக்கு பொருந்தும் வகையில் எவ்விதம் பயன்படுத்துவது என்பதில் சரியான தலைமைத்துவத்தை அவரினால் வழங்க முடியாத நிலைக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது. நடைமுறைபற்றிய கேள்விகள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டபோது சண்முகதாசன் தத்துவங்களுக்குள் மட்டுமே தலைபுதைந்து நின்றாரே தவிர அவற்றின் நடைமுறைக்கு உகந்த வழிமுறைகளை முன்வைக்கமுடியாத கையறுநிலைக்குத் தள்ளப்பட்டார். சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலை உருவாகியது. இதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது தலைமையை நிராகரித்து பல்வேறு குழுக்களாகவும், தனிநபர்களாகவும் பெரும்பாலானவர்கள் வெளியேறிச்செல்ல நேரிட்டது……..பிற்காலத்தில் எதனையும் எதிர்த்துக் கேள்விகேட்டால் அத்தைகையவர்கள் கட்சியைவிட்டுப் போய்விடவேண்டும் என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் அவரது தலைமையிலான கட்சி ஒரு ஜனநாயக மத்தியத்துவம் அற்ற கட்சியாகவும், தனிநபர் வழிபாடு மிக்க ஒரு சிலரை மாத்திரம் கொண்ட கட்சியாகவும் இருப்பதில் திருப்தி காணும் நிலைக்குச் செல்லவேண்டியிருந்தது.” (கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்-விமர்சன கண்ணோட்டம்-வெகுஜனன், இமயவரம்பன் பக்கம்10)

“அதே வேளை, சண்முகதாசனுடைய தலைமையின் தவறுகளும் நண்பர்களைப் பகைவர்களாக்கி ஐக்கியப்பட வேண்டியவர்களிடம் இருந்து கட்சியைத் தனிமைப்படுத்தின. அவர் செய்த ஸ்தாபனரீதியான தவறுகளையோ அவரது தனிப்பட்ட குறைபாடுகளையோ விட அவரது அகச்சார்பான அரசியல் மதிப்பீடுகளின் பாதிப்புகள் பாரியவை.” (அதே நூல்  பக்கம் 22)

“(மாக்ஸிஸ லெனினிஸக்) கம்யூனிஸ்ட் கட்சியில் சண்முகதாசனை ஒத்த அரசியல் ஞானமும் திறனும் ஆய்வுத்திறனும் கொண்டவர்கள் இருந்தாலும் பிளவுண்ட கட்சியைத் தலைமைதாங்கி நடத்திச்செல்லும் ஆற்றலில் அவர் அனைவரையும் மிஞ்சியே நின்றார். இதன் பாதகமான விளைவு சண்முகதாசனின் மிகை முக்கியத்துவம் என்றே எண்ணுகிறேன். சண்முகதாசனின் கொள்கைப்பிடிப்புக்கும் உறுதிக்கும் அடிப்படையாக இருந்த அவரது பிடிவாதப் போக்கு, கட்சிக்குள் தன்னுடன் முரண்பட்டோரை எதிரிகளாகவே காணும் போக்குக்கும் காரணமாயிற்று.” முன்னைய நூல் (பக்கம்20)

அவர் அனைவரையும் மிஞ்சி நின்றதற்கான முதன்மைக் காரணம் அவரின் ஞானமோ, திறனோ அல்ல. அது இரண்டாம் பட்சமானது. கட்சியின் ஒரே மக்கள் அமைப்பான தொழிற்சங்கம் அவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுவும், கட்சியின் சார்பிலும் தொழிற்சங்கத்தின் சார்பிலும் உருவாக்கப்பட்ட அந்நியத் தொடர்புகள் அனைத்தும் அவரின் ஊடானதாக இருந்ததுவும், இவை இரண்டுந்தான் கட்சியின் பிரதான பணவரவு மார்க்கமாக இருந்து வந்ததுவுந்தான் இதற்கான முதன்மைக் காரணமாகும். திரிபுவாதத் தலைவர் பாரளுமன்றத்துள் செல்வதைத் தடுத்து அந்த இடத்தை புரட்சித் தலைவரான தன்னைக்கொண்டு நிரப்புவதற்காக பீட்டர் கெனமனின் தேர்தல் தொகுதியான கொழும்பு மத்தியதொகுதியில் 1965 தேர்தலில் சண் நின்றதற்கான காரணம் இதுதான். அவரின் ஆசைக்கு மத்தியகமிட்டி தலையாட்டியது. ஆனால் கொழும்பு மக்கள், அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் தலையாட்டவில்லை. விழுந்த வாக்குகள் மிகக் குறைவானவை. 2விழுக்காடு. அதேபோல் மத்திய கமிட்டி தலையாட்டினாலும், இதனால் மத்திய கமிட்டிக்குள் முரண்பாடுகள் முளைவிட ஆரம்பித்தன. தோல்வி கண்ட சண், எட்டாப்பழம் புளிக்கும் என்ற நரியின் நிலைப்பாட்டை எடுத்து பாராளுமன்றத்துக்கு எதிராக மேலும் மேலும் முழங்கத் தொடங்கினார். ஆனால், சண்ணுக்கு துணைபுரிந்துவந்த வலதுசாரி அணியினர், முனங்கலைத்தான் எதிர்பார்த்தனரே தவிர முழக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் பிரேம்லால் குமாரசிறி தலைமையில் முதலாவது அணி கட்சியை விட்டு விலகியது. பாரளுமன்றப்பாதையையும், தொழிற்சங்கப்பாதையையும் முழுமையாகவே நிராகரித்த நடைமுறையை பின்பற்றவிரும்பியவர்கள் கட்சிக்குள் தனியாக அணிதிரள ஆரம்பித்தாரகள். ஒரு அணிக்கு விஜயவீராவும் மற்றோர் அணிக்கு காமினி யாப்பாவும் தலைமை தாங்கினர். விஜயவீராவால் தலைமை தாங்கப்பட்ட அணியே ஜே.வி.பி-யாகும், காமினி யாப்பாவால் தலைமை தாங்கப்பட்ட அணியே கீழைக்காற்று இயக்கமாகும் (சிங்களத்தில் பெரதிக சுலங்க).

Introduction-Interrogating an Obscured Legacy எனும் தலைப்பிலான கட்டுரையின் சில பகுதிகள்;

“சண்ணின் கட்சியில் இருந்து தொடர்சியான பல வெளியேற்றங்கள் நடைபெற்றன. சில பிரதான பிளவுகளை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். மாஓயிஸ்ட் கட்சியில் இருந்து வெளிவந்த ஜே.வி.பி மாஓவின் மக்கள் யுத்தப்பாதையை மட்டும் நிராகரிக்கவில்லை, கட்சியின் மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்- மாஓயிஸ மார்க்கத்தையும் நிராகரித்த்து. அவநம்பிக்கையுற்றிருந்த சிங்கள இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக ஜனரஞ்சகத் தன்மையுள்ள மார்க்கம் ஒன்றைக் கடைப்பிடித்து, 1971 ஏப்ரல் எழுச்சியை ஏற்படுத்தியது. அது தோல்விகண்டது. காமினி யாப்பா கட்சியைவிட்டு ஒரு அணியினருடன் வெளியேறி பெரதிக சுலங்க/கீழைக்காற்று எனும் அமைப்பை உருவாக்கினார். அது மாஓவின் அடிப்படைக் கொள்கையான நீடித்த மக்கள் யுத்தப் பாதையில் செயற்படுவதற்காக புரட்சிகர தளப்பிரதேசங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. `கறவிட்ட` மற்றும் `வாட்சன் பெர்னாண்டோ` தலைமையிலான மற்றோர் அணி தன்னை கம்யூனிஸ்ட் கட்சி என அழைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது.” பின்னர் செந்தில்வேல் அவர்களின் தலைமையிலான மற்றோர் குழு பிரிந்துசென்று புதிய ஜனநாயகக் கட்சி என்றோர் அமைப்பை உருவாக்கியது. புதிய ஜனநாயகக் கட்சி தமிழ்ப் பிரச்சனை தொடர்பாக 1983-க்கு முன்னர் சண் எடுத்த நிலைப்பாட்டையே எடுத்தனர். வைத்தீசஸ்பரா தனது முலாவது கட்டுரையில் புதிய ஜனநாயக் கட்சி பற்றி விவாதிக்கிறார். சண்ணின் கட்சியில் இருந்து வேறு பல சிறு குழுக்களும் வெளியேறினர்.”

உள்நாட்டில் கட்சி கட்டும் விடயத்தில் தோழர் சண்ணின் செயற்பாடுகள் பற்றிப் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியந்தான். அதைவிட அவசியமானது, தோழர் சண்ணை தமது கட்சியினதும், இலங்கைப் புரட்சியினதும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (மாஓ) என்ன சொல்கிறது என்பதைக் கவனிப்போம்.

" 1969-இல் நடைபெற்ற கட்சியின் 9வது காங்கிரஸ் மாக்ஸிஸம்-லெனினிஸம்-மா சே துங் சிந்தனையை உயர்த்திப் பிடித்தது. புரட்சியின் கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டமென்றும், புரட்சியின் பாதை நீடித்த மக்கள் யுத்தப் பாதை என்றும் முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் கட்சியானது புனரமைக்கப்படவும், சரிசெய்யப்படவும், புரட்சிகரமாக்கப்படவும் வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது. ஆனால் புனரமைக்கப்படலுக்கும், சரிசெய்யப்படலுக்கும், புரட்சிகரமாக்கப்படலுக்கும் பதிலாக, கட்சியானது தொடர் நெருக்கடிகளிலும் வீழ்ச்சிகளிலும் சிக்கி கீழ்நோக்கிய சுழற்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. தோழர் சண்ணே இந்நிகழ்வுப் போக்குக்கு நேரடியான காரணியாக இருந்தாலும், இந்நெருக்கடிகளை உருவாக்கிய வேறு பல காரணிகளும் இருந்தன. அனைத்துலக கம்யூனிஸ இயக்கம் சோவியத் யூனியனையும் அதனைத் தொடர்ந்து சீனாவையும் இழந்ததனால் ஏற்பட்ட அனைத்துலக அளவிலான பின்னடைவுகள், 1971-இல் ஏற்பட்ட குட்டி பூர்ஷ்வா ஆயுத எழுச்சியும் அதன் விளைவாக அரசால் ஏவிவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும், சீனத் தூதுவராலயத்தின் துணையுடன் திரிபுவாத முகாமின் முன்முயற்சியில் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட உடைவுகள் வெளியேற்றங்கள் ஆகிய இவை அனைத்தும் கட்சியைப் பலவீனப்படுத்தக் காரணமாயின. இருந்தும் தோழர் சண் தனது சுயவிமர்சனத்தில் புறநிலையில் குற்றம் சுமத்தாமல், நெருக்கடிகளுக்கும் சீரழிவுகளுக்குமான பிரதான காரணிகளாக பின்வருவனவற்றை சுட்டிக்காட்டினார்: கட்சி திரிபுவாதத்தில் இருந்து முற்றாக விடுபடாமை. சரியான புரட்சிகர மார்க்கத்தை வகுக்கத் தவறியமை. கூட்டுத் தலைமையையும் புரட்சிகர அமைப்புக் கோட்பாட்டையும் வகுக்கத் தவறியமை. புரட்சிகர நடைமுறையைப் பின்பற்றத் தவறியமை. மேலும் சொல்வதானால் கட்சி பொருளாதாரவாதத்துள் அமிழ்ந்து கிடக்கின்றது. கட்சி புறநிலை யதார்த்தத்தில் இருந்தும், புரட்சிகர மக்களிடம் இருந்தும், புரட்சிகர நடைமுறையில் இருந்தும் விலகிநிற்கின்றது. கட்சி உண்மையிலேயே ஓரங்கட்டப்பட்டு விட்டது. ஜனநாயக மத்தியத்துவம் இருக்க வேண்டிய இடத்தில் அதிகார மத்தியத்துவம் ஆட்சி புரிகிறது. அனைத்துலகளவிலான தத்துவார்த்த வர்க்கப் போராட்டத்தில் கட்சி முன்னணிப் போராளி என்ற பங்கை வகித்தாலும், உள்நாட்டளவில் உண்மையிலேயே அது ஒரு பகிரங்கமான, சட்டரீதியான, தொழிற்சங்கமையம் எனும் பங்கையே வகித்தது. நீடித்த மக்கள் யுத்தத்தின் ஊடாக புதிய ஜனநாயகப் புரட்சியைத் தொடக்கி வைப்பதற்கான எந்தத் திட்டமும், மார்க்கமும், மூலோபாயமும் கட்சியிடம் இருக்கவில்லை. தன்மட்டில் தானே கட்சி ஒரு திரிபுவாதக் கட்சியாக மாறியிருந்தது.”

கம்யூனிஸ்ட் கட்சி மேலும் தொடர்கிறது. அது சொல்லவருவதை அவதானிக்கும் முன் இதுவரை சொன்னவை பற்றிய ஒரு குறிப்பு. இதுவரை சொன்னவை நல்லதோர் விமர்சனமாகப் படலாம், அனால் அவை புத்தி பூர்வமான விமர்சனங்களல்ல. அவை உணர்ச்சி பூர்வமான தன்நிலை விளக்கங்களே. நேர்மையான ஒளிவுமறைவற்ற, பூச்சுமெழுக்கற்ற தன்நிலை விளக்கம். சுயவிமர்சனத்தின் முதற் படி தன்நிலை விளக்கந்தான். இரண்டாவது படி அத்தவறுகளுக்கான காரணங்கள் பற்றிய ஆய்வு. மூன்றாவது படி தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான வழிவகைகள் பற்றிய முன்வைப்பு. இந்த மூன்றும் இணைந்தால்தான் ஒரு விமர்சனம் முழுமைஅடையும். அப்போதுதான் அது சுய-விமர்சனம் செய்பவர்களுக்கும், அதில் ஆர்வமும் தொடர்பும் உள்ள பிறருக்கும் நன்மை பயப்பதாக அமையும். பிறரைப் பற்றிய விமர்சனமும் அவ்விதந்தான். பிறர் நிலை விளக்கம் விமர்சனம் ஆகிவிடாது. அது சிலவேளைகளில் அம்பலப்படுத்தல்களாக இருக்கலாம். ஆனால் விமர்சனம், சுய-விமர்சனம் என்பது நண்பர்களுக்கிடையேயான உறவைக் கையாள்வதற்கானதோர் வழிமுறையே தவிர பகைவர்களுக்கிடையேயான உறவைக் கையாள்வதற்கானதோர் வழிமுறையல்ல. விமர்சனம் பற்றி மாஓ கூறுவது நட்புக்கான அவாவில் இருந்து ஆரம்பித்து நட்பில் முடியவேண்டும் என்பதேயாகும். ஆகவே விமர்சனமும் இந்த மூன்று கட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(மாஓ)-வைத் தொடர்வோம். “RIM இன் தோற்றம்(1984-இல் தோற்றுவிக்கப்படுகிறது) கட்சிக்குள் நிலவிய இரு மார்க்கங்களுக்கிடையேயான போராட்டத்தை மேலும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்ல உதவியது. ஆனாலும் கூர்மையான, சிற்சில நேரங்களில் கசப்பான இரு மார்க்கப் போராட்டம் மற்றோர் பிரதான பிளவில் போய்முடிந்தது. மற்றோர் புறத்தில் இப்போராட்டம் கட்சியை மீண்டும் ஒன்றுபடுத்த உதவியது. மேலெழுந்த பல மோதல்களையும், பிளவுகளையும் தீர்த்துவைப்பதில் Co RIM தலையீடும் துணைபுரிந்தது. 1991 இல் நடந்த ஒரு விசேட மாநாட்டில் மா.லெ.மாஓ அறிவியலைப் பிரயோகித்து, கீழ்வரும் சித்தாந்த, அரசியல் மற்றும் அமைப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்சியைத் திருத்தி அமைத்து மீள் உருவாக்கம் செய்வதற்கான வழிகாட்டலை தோழர் சண் வழங்கினார். அவையாவன:

  • மக்கள் இராணுவத்தை கட்சியின் பிரதான வெகுஜன அமைப்பாகக் கொள்ளல்.
  • இ.க.க(மாஓ)-வை ஒரு இரகசிய, தலைமறைவான, புரட்சியை முழுநேரக் கடமையாகக் கொண்ட கட்சியாக மறுநிர்மாணம் செய்தல்.
  • புதிய ஜனநாயகப் புரட்சியை நீடித்த மக்கள் யுத்த வடிவில் தொடக்கிவைப்பதற்காக கிராமப் புறங்களிலான வேலைகளில் கட்சியின் கவனத்தைத் திருப்புதல்.”
தோழர் சண் தனது வைத்தியச் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதால் இவ்வேலையை முன்னெடுத்துச் செல்ல ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த நிலைபற்றி கட்சியின் தலைமை கூறுவதாவது:
“கட்சிக்குள்ளான இரு மார்க்கப் போராட்டம் மேலும் கசப்பானதாகவும், தீர்க்ககரமானதாகவும் மாறியது. இறுதியில் முக்கியத்துவம் மிக்க புதியதோர் பிளவில் முடிவடைந்தது. இதன் விளைவாக கட்சி இன்று வினைத்திறன் மிக்க கரு எதுவும் இன்றி மடிந்துவிடும் நிலையிலேயே உள்ளது. உண்மையிலேயே பழைய கட்சி தற்போது மடிந்துவிட்டது. புதிய அறிவியல் அடித்தளத்தில் புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியுள்ளது. மீதமாக இருப்பது மாஓயிசப் புரட்சியாளர்களின் சிறு கரு மாத்திரமேயாகும்.” தனது முயற்சியின் பலாபலன்களை அறுவடை செய்ய முன்னரேயே சண் மரணமடைந்தது பெரும் இழப்பேயாகும்.

முன் கூறியதுபோல் இலங்கையில் புரட்சிகரக் கட்சியைக் கட்டும் முயற்சியில் இன்னமும் வெற்றி பெறாமைக்கான காரணமென்ன? இ.க.க(மாஓ) இது பற்றிக் கூறும் கருத்தையும் அதற்கான எமது தெறிப்பையும் வெவ்வேறு அரங்கங்களில் தொடர்வோம்.அத்தெறிப்புகளின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பது தொடர்பான சிறு குறிப்பு;
இலங்கைப் புரட்சிகர இயக்கத்தின் இன்றைய நிலையில் அமைப்புக் கட்டுமானத்தை உருவாக்குவதில் ஏற்பட்டுவரும் தொடர் தோல்விகளுக்கான காரணத்தை கடைப்பிடிக்கப்பட்ட அல்லது கடைப்பிடிக்கப்பட்டுவரும் அமைப்புக் கோட்பாடுகளிலோ, செயற்பாடுகளிலோ அல்லது முன்னணி வகிக்கும் தோழர்களின் தவறான போக்குகளிலோ மட்டும் காணமுடியாது. அவற்றில் தவறுகள் உள்ளனதான், ஆனால் அவை துணைக்காரணங்களாகவே காணப்படுகின்றன. பிரதான காரணத்தை அல்லது காரணங்களை வேறு எங்கோதான் தேடவேண்டியுள்ளது. எங்கு?
அடிக்கட்டுமான மேற்கட்டுமான விதிகளைப் பிரயோகித்தால் தேடப்படவேண்டிய இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். வேலைத்திட்டம் கட்சி என்ற இவ்விரு அங்கமும் ஒன்றிலொன்று தங்கியுள்ள சுய செயற்பாடுடைய இரு வெவ்வேறு சமூக நிறுவனங்களாகும். இதில் இயல்பாகவே ஆகிவருவது எது, சில மனிதர்களால் ஆக்கப்படுவது எது? வேலைத்திட்டம் சுதந்திரமானது. எவரின் விருப்பு வெறுப்பும் இன்றி சமூகத்தில் நிலவும் பல்வேறு குழுக்களின் சிநேக, பகை முரண்பாடுகளின் செயற்பாடுகளினால் தீர்மானிக்கப்படுவது. கட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் கட்சி சுதந்திரமானதொன்றல்ல. தனக்கென்றோர் வேலைத்திட்டம் இருந்தால்தான் கட்சி செயல்படும். கட்சியின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் இருப்பது கட்சியின் வேலைத்திட்டந்தான். இங்கு எம்முன்னால் உள்ள பிரச்சனை கட்சியின் வேலைத்திட்டத்திற்கும் சமூகத்தின் இயல்பான வேலைத்திட்டத்திற்கும் இடையேயான பொருத்தப்பாடு எவ்விதம் இருக்கிறது என்பதுதான். பொருத்தப்பாடு சரியானதாக இருந்தால் கட்சி செழித்து வளரும், பொருத்தப்பாடு சரியாகச் சரியாக கட்சி மேலும் மேலும் வளரும். பொருத்தப்பாடு இல்லையானால் அல்லது பொருத்தப்பாடின்மைதான் மேலோங்கி நின்றால், கட்சி சாண் ஏறமுழம் சறுக்கும். அவ்விதமானால் இங்கு அடிக்கட்டுமானம் எது? சமூகத்தில் இயல்பாக இருக்கும் வேலைத்திட்டமே அடிக்கட்டுமானமாகும். கைவிட்டெண்ணக் கூடிய மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியும் அம்மனிதர்களின் மூளைகளில் இருந்து தோன்றிய கட்சி வேலைத்திட்டமும் மேற்கட்டுமானங்களே. கட்சியின் மூளையால் சமூகத்துக்கான அல்லது கம்யூனிஸ்ட் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை வரைந்து கொள்ளமுடியாது. கட்சியின் மூளையின் வேலை சமூகம்(ஒடுக்கப்படும் பிரிவினர்) தனது அக புற நிலைகளினால் வேண்டிநிற்கும் வேலைத்திட்டத்தை, மக்கள் அரைகுறையாகவும், தெளிவின்றியும் கடைப்பிடித்துவரும் வேலைத்திட்டங்களையும், தமக்கான ஒரு வேலைத்திட்டத்திற்காக மக்களால் வெளிப்படுத்தப்படும் விருப்பு வெறுப்புகளையும் இனங்கண்டு, வாசித்தறிந்து, அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றில் உள்ள எதிர்மறை அம்சங்களைக் களைந்து, நேர்மறை அம்சங்களை வளர்த்தெடுத்து தமது வேலைத்திட்டமாக ஆக்கிக் கொள்வதேயாகும். மாக்ஸிஸம்-லெனினிஸம்-மாஓயிஸம் எனும் அனைத்தும் தழுவிய அறிவியல் அணுகுமுறையை தனது நாட்டின் சூழலுக்கு ஏற்ப பிரயோகிப்பது என்பதன் அர்த்தம் இதுதான். ஆகவே இயல்பாக இருக்கும் வேலைத்திட்டம் எனும் அடிக்கட்டுமானத்தை சரியாக பற்றிக் கொண்டால் கட்சி கட்டுதல் என்பது பகீரதப் பிரயத்தனமாக இருக்காது. தோழர்கள் மீது கறையான் புற்றெடுக்கும் நிலை இனியும் வேண்டாம். மலையைக் குடைந்து எலியைப் பிடிக்கும் பரிதாப நிலையும் தொடரவேண்டாம்.

ஆ.5) யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடத்தியது.

யாழ் குடாநாட்டில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தோழர் சண்ணின் பங்களிப்பு தீர்மானகரமானதாகும். 1970-கள் வரை கட்சியால் நடத்தப்பட்ட புரட்சிப் போராட்டங்கள் எனக் கருதப்பட்டவற்றுள் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு உட்படாமல் முன்கொண்டு செல்லப்பட்ட போராட்டம் இது ஒன்றுதான். வாக்குத்தேடல் அபிலாசைகள் எதுவும் இப்போராட்டத்திற்கு இருக்கவில்லை. பெருந் தோட்டத்தொழிலாளர் மத்தியில் நடத்தப்பட்ட போராட்டமும் இது போன்றதுதான் ஆனால் அங்கு தொழிற்சங்கவாதம் ஆதிக்க நிலை வகித்தது. இருந்தும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் காட்டாறு போல் பெருக்கெடுத்து காட்டாறு போலவே தொலைந்து விட்டது. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டமாக இது முன்னெடுத்துச் செல்லப்படாமையே இதன் மறைவுக்கான காரணமாகும். தொழிற்சங்கப் போராட்டங்கள் எவ்விதம் விவகார மையப் (Issue oriented) போராட்டங்களாக இருந்தனவோ அது போலவே தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஆலயப் பிரவேசம், தேநீர் கடைப் பிரவேசம் எனும் விவகார-மையப் போராட்டங்களாகவே இருந்தன. பிரச்சனை-மையப் போராட்டங்களாக (Problem oriented) இருக்கவில்லை. இங்கு பிரச்சனை சாதியம், விவகாரம் ஆலய, தேநீர் கடைப் பிரவேசம். கோரிக்கைகள் வெற்றி பெற்றதும் போராட்டங்கள் முடிவடைகின்றன. முன்வைக்கப்பட்ட கோரிக்கை கூட முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைதான். போராட்டம் தொலைந்து போனமைக்கான காரணங்கள் இரண்டாகும்.

முதலாவது காரணம், தொழிற்சங்கவாதம் ஆகும்.
திரிபுவாதக் கட்சியில் இருந்து(மாஸ்கோ சார்பு) புரட்சிகரக் கட்சி(சீனசார்பு) எனப் பிரிந்தபோது, அனைத்துலக அரங்கில் இப்பிரிவு சோவியத் வழிமுறை சார்பு, சீன வழிமுறை சார்புப் போராட்டமாகவே இருந்தது. இப்போராட்டம் ஆரோக்கியகரமானதாகவும் இருந்தது. முரண்பாடு மிகவும் கூர்மையானதாகவும் இருந்தது. ஆனால் உள்நாட்டரங்கில் பீட்டர் கெனமன் தலைமையிலான பாராளுமன்ற ஜனநாயக திரிபுவாத அணியும், தோழர் சண் தலைமையிலான தொழிற்சங்க திரிபுவாத அணியும் தமக்குள் மோதிக்கொண்டார்கள். கட்சியில் இருந்துவெளியேறிய மூன்றாவதும் நான்காவதும் அணிகளான ஜே.வி.பி-யும், கீழைக்காற்றும் தொழிற்சங்கவாதத்தை எதிர்த்தே வெளியேறின. தோழர் சண்ணிற்கும் கீழைக்காற்றுக்கும் நடந்த கருத்துப் போராட்டத்தில் தொழிற்சங்க திரிபுவாதம் பிரதான பாத்திரம் வகித்தது. தோழர் சண்ணை கீழைக்காற்று இயக்கம் இலங்கையின் `ஐடிற்` எனவே அழைத்தது.

இரண்டாவது காரணம், யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை நிலப்பிரபுத்துவம் பற்றிய விழிப்போ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு உணர்வோ கட்சியிடம் இல்லாதிருந்தது. இதன் வெளிப்பாடுதான் ‘மிச்சசொச்சம்’ என்ற கோட்பாடாகும். இக்கோட்பாடு பற்றியே இங்கு அலசுகிறோம்.
“சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்சசொச்சமாகும். எமது நாட்டில் முதலாளித்துவம் ஒழுங்காக அல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ளபடியால்தான் சாதி அமைப்பு இங்கே நின்று பிடிக்கின்றது. ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அதை அழியாமல் இருப்பதற்குத் துணைபுரிகின்றது. எமது போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை முற்போக்கு இயக்கத்தின் பிறபகுதிகள் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மறுத்தன. வேறு எந்த அரசியல் கட்சியும் எமக்கு ஆதரவு தரவில்லை.” ஜேவிபி பற்றிய சண்ணின் ஆய்வு. பக்கம் 184

‘எமது போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்’ மிகச் சரியான நிலைப்பாடு. ஆனால் இம்முடிவுக்கு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதே கேள்வி. “ பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மறுத்த இந்த முற்போக்கு இயக்கத்தின் பிறபகுதிகள்” எவை? எஸ்.டி.பண்டா, றொனில் டி மெல் ஆகியோர் கூட்டிவரப்பட்டமை. ஊர்வலங்களுக்கு அவர்கள் தலைமை தாங்கியமை, ஆகியவை எதைக் காட்டுகின்றன? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அல்லது அக்கட்சியினுள் உள்ள ஒரு பகுதியினரைத்தான் முற்போக்கு இயக்கத்தின் ஒரு பகுதியினர் என்று குறிப்பிடுகிறார்.

அவரின் சுயசரிதையில் காணப்படும் கீழ்வரும் பகுதிகள் அதை நிரூபிக்கின்றன. “(1980-ற்கும் 1983-ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்) யூ.என்.பி. எதிர்ப்புச் சக்திகளின் ஐக்கியத்திற்கான புதியதோர் நடவடிக்கை நனவாகியது. லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, மஹாஜன எக்ஸத் பெரமுன, எமது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகள் தற்காலிகமாக யூ.என்.பி எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்க உடன்பட்டன. ……..இந்த முன்னணியின் காலம் குறுகியதாக இருந்தபோதிலும் சிறப்பான யூ.என்.பி எதிர்ப்புப் பிரச்சாரத்தை அது மேற்கொண்டது.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் மூன்று முக்கியமான கூட்டங்களை இம்முன்னணி நடத்தியது. யாழ்ப்பாணக் கூட்டம் மிகவும் பெரிதாக நடைபெற்றது………ஆகியோரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நானும் கலந்துகொண்டோம்……..எனது அரசியல் வாழ்வில் மிகச்சிறந்த சொற்பொழிவை நான் அதில் நிகழ்த்தினேன் என நினைக்கிறேன்.”(பக்கம் 271)

பாரளுமன்ற அரசியலிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் அவருக்கு இருந்த நம்பிக்கையை கீழ்வரும் வாக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன;

“திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றிக்கு அங்கு வாழும் கணிசமான தொகை சிங்கள மக்களும் துணைபுரிந்தார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் இதர பாகங்களில் தேர்தல்களைப் பகிஸ்கரித்த போதும் இப் பிரதேசங்களில் யூ.என்.பிக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி அபேட்சகர்களை ஆதரித்தது. வரலாற்றில் முதல் தடவையாக இத்தகைய விஷயம் நடைபெற்றது. எதிர்கால சிங்களவர் – தமிழர் உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது………அரசியல் அறிவு இருந்திருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த வாய்ப்பை இறுகப் பற்றி யூ.என்.பி எதிர்ப்பு சக்திகளின் புதிய ஐக்கியத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்.” பக்கம் 273
“எமது போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.” இவ்வாக்கியத்தில் ஒரு குழப்பம் காணப்படுகின்றது. தேசியளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியே என்பது தான் தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூ.என்.பி-க்கு எதிரான போராட்டம் என்பதே இதன் அர்த்தம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதைப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுகிறார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு தேசியக் கட்சி என்ற அர்த்தத்திலும் இதைக் கூறியிருக்கலாம். திரிபுவாதக் கட்சியில் இருந்து பிரிந்து தனியான கட்சி அமைத்ததன் பின்னர் வெளியான முதலாவது `கம்கறுவ`(தொழிலாளி) இதழ் பண்டாரநாயக்காவின் படத்தை தனது முதற் பக்கத்தில் தாங்கியே வெளிவந்தது. பண்டாரநாயக்கா தலைமையிலான எழுச்சி ஒரு தேசிய எழுச்சி என்பதே கட்சியின் அன்றைய நிலைப்பாடாக இருந்தது. யாழ் குடாநாட்டின் ஒடுக்கப்பட்ட சாதிமக்களுக்கும் பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. 80-களில் கூட சண் இந்தக் கருத்தில் இருந்து விடுபடவில்லை. இரு அர்த்ததில் பார்த்தாலும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தின் உள்நோக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான ஐக்கிய முன்னணிக்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவதாகவே இருந்துள்ளது. ஆலய தேநீர் கடைப் பிரவேசத்துடன் இப்போராட்டம் ஓய்ந்து போனமைக்கான காரணத்தை ஆராயும் போதும் இந்த முடிவுக்கு வரமுடியும்.

ஆனால் இது தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பது மிகச்சரியானது. அது தோசை-வடை எதிர்ப்பாளர்களினது தேசியப் போராட்டமல்ல. தோசைவடையினரது தேசியப்போராட்டமாகும். இப்போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீரமிகு தொழிற்சங்கப் போராட்டமும் தோசைவடைகளின் தேசியப் போராட்டத்தின் ஒரு அங்கந்தான். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் செயற்படுகள மக்களையும், அரசுக்கும், பெருந்தோட்டத்துறை அதிகாரவர்க்கத்துக்கும், எதிரான போராட்ட செயற்படுகள மக்களையும் தமிழ் தேசிய போராட்டத்தின் செயற்படுகள மக்களாக மாற வழிகாட்டியிருந்தால் இன்று இலங்கை வராலாறே வேறு விதமாக இருந்திருக்கும். இச் சந்தர்ப்பத்தைக் கட்சி தவறவிட்டுவிட்டது. சந்தர்ப்பந்தான் தவறவிடப்பட்டதே தவிர இச்சாத்தியப்பாடு இன்னமும் உள்ளது. இது பற்றிய கருத்துப் பரிமாற்றத்தை ‘1983-ற்குப் பின்னர், இலங்கையின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாக நேர்மறைக் கொள்கையின்படி செயற்பட ஆரம்பித்தது.’ என்ற தலைப்பின் கீழ் வேறோர் அரங்கில் அலசுவோம், சந்தர்ப்பம் கிடைத்தால்.

தற்போது “சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்சசொச்சமாகும்.” என்ற கூற்றிற்குச் செல்வோம். இது புதிய கூற்றுமல்ல, புதிய மறுப்புமல்ல. கீழைக்காற்று இயக்கத்தின் யாழ் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட மறுப்பாகும். பதில் இல்லை. வழமையான கிண்டலும் கேலியும், முத்திரை குத்தலுந்தான். அந்த மறுப்புச் சொல்லாடல் இம்மேடையில் தொடர்கிறது, கலந்துரையாடல் வடிவில்.

ஜே.வி.பி பற்றிய தோழர் சண்ணின் மதிப்பீட்டில் இருந்து சிங்களவர்களிடையேயான சாதியத்தின் இறுக்கத்தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

“……..ஆனால், மறைந்த திரு.S.W.R.D.பண்டாரநாயக்கா, 1956 தேர்தலில் மதம், இனம், மொழி ஆகியவை தொடர்பான நியாயமான அறைகூவலுடன், அவருக்கு முன்னால் இடது இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட தீவிர முழக்கங்களையும் இணைத்துப் பிரச்சாரம் செய்தார். மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்டுகளின் பிரச்சாரங்களினதும் பண்டாரநாயக்காவின் பிரச்சாரங்களினதும் நல் விளைச்சல்களை விஜயவீர அறுவடை செய்துகொண்டார். கூடவே தனது இந்திய எதிர்ப்புவாத(மலையகத் தமிழர்களுக்கு எதிரானது), சாதியவாத அறைகூவல்களையும் இணைத்து தனது அரசியல் இலாபத்தை உச்சப்படுத்திக் கொண்டார்.” சண், (ஜே.வி.பி பற்றிய அவரது ஆய்வு நூலில்)

“…….அவர்கள், இந்திய எதிர்ப்புவாதத்திற்கு ஒரு கடுமையான உள்ளடக்கத்தைக் கொடுத்ததுடன் புரட்சிகர வாய்ச்சொற்களால் அதை மூடிமறைத்தும் வந்தார்கள். இந்திய எதிர்ப்பு அறைகூவலும், ஒரு சாதியை நோக்கிய அறைகூவலும் ஒன்றிணைக்கப்பட்டன. ஜே.வி.பி இயக்கத்தின் தலைவர்களில் பலர் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகும்.”……… “ ஜே.வி.பி யால் செலவிடப்பட்ட அவ்வளவு தொகைப் பணத்துக்குக்கும் வரவு காட்டப்படுவதுவும் அவசியம். இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தால் மகிழ்ந்திருந்த தென்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதி வர்த்தகர்கள் தம்மை மகிழ்வித்ததற்காக பூரண விருப்புடன் ஆயிரக்கணக்கான ரூபாய்க்களை அள்ளிக் கொடுத்தனர்.” (அதே நூல்)

தோழர் சண் குறிப்பிடும் அந்த ஒரு சாதி கரவாஸ் ஆகும். இலங்கையில் நடந்த தோல்வி கண்ட இராணுவப் புரட்சிகளில் கரவாஸ்களின் பங்கு முக்கியமானது. கரவாஸ்களுக்கென தனியான பௌத்த மதபீடமேயுண்டு. இது 200 வருடங்களுக்குமேல் தொடரும் ஒரு நெருடல் முரண்பாடாகும். தேரவாதப் பிரிவைப் பின்பற்றும் ஆதி ‘சங்க’மே சியாம் நிக்காயாவாகும். சியாம் நிக்காயப் பிரிவு தனது நிறுவனத்துள் மதரீதியான உயர் பதவிகளுக்கு வரும் தகமை கொவிகம சாதியினருக்கு மட்டுமே உண்டு எனும் வழமையைக் கடைப்பிடித்து வந்தது. இதனால் ‘சங்க’-வில் சீர்திருத்தம் கோரி ஆரம்பித்த உள் கிளர்ச்சி 1803-இல் சங்க இரு கூறாகப் பிரிவடைவதில் முடிவடைந்தது. கரவாஸ் சாதியியனரையும் கொவிகம அல்லாத பிறசாதியியனரையும் உள்ளடக்கிய புதிய நிக்காய ஒன்று உருவாக்கப்பட்டது. இது அமரபுர நிக்காய என அழைக்கப்பட்டது. பெரியாரை முன்நிறுத்தி சூத்திரர் தலைமையில், சமூக சீர்திருத்த இயக்கமாக உருவான பார்ப்பனர் அல்லாதோரின் இயக்கம் இதற்குப் பின்னைய வரலாறேயாகும். இருந்தும் சங்கத்துள்ளான சாதிய முரண்பாடுகள் தீர்ந்தபாடில்லை. 1863-இல் சலுகம சாதிப்பிரிவினரை அதிகமானதாகக் கொண்ட ரமண நிக்காய என்ற மற்றோர் நிக்காய உருவாகியது. யாழ்ப்பாணத்தாரின் சாதிய மொழியில் இந்த மூன்று நிக்காயக்களையும் வெள்ளாள நிக்காய(சியாம்), கரையார் நிக்காய(அமரபுர), பஞ்சமர் நிக்காய(ரமண) என அழைக்கலாம்.

எதுவித ஒளிவுமறைவுமின்றி கரவாஸ்கள் தம்மை தனியாக அணிதிரட்டிவருகிறார்கள். ராஜபக்க்ஷ குடுமபத்திற்கும் சரத் பொன்சேகா குடும்பத்திற்கும் இடையேயான முரண்பாட்டிற்கான காரணமும் இதுதான். இருவரும் தென்பகுதியினர் ஆனால் ராஜபக்க்ஷ கொவிகம, சரத் பொன்சேகா கரவாஸ். ஜே.வி.பி யை வளர்த்துவிடுவதில் யூ.என்.பி க்கும் ஒரு பங்களிப்பு உண்டு என்பதை சண் தனது சுயசரிதையில் ஆதாரங்களுடன் கூறியுள்ளார். யூ.என்.பி கரவாஸ்களின் ஆதரவு பெற்ற கட்சியாகும். இப் பங்களிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கொவிகம பிரிவினரின் ஆதிக்கத்தின் கீழுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஏப்ரல் கிளர்ச்சியை அவ்வளவு கொடூரமாக அடக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அத்துடன் ஏப்ரல் கிளர்ச்சியானது இராணுவத்துள்ளும், யூ.என்.பி-யினுள்ளும், நிதி உடமையாளர்களிடையேயும் உள்ள கரவாஸ்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெளிப்படையான இராணுவச் சதியென்ற கருத்தும் உண்டு. 60-களின் பிற்பகுதியில் நடந்த இராணுவ சதியில் ரோஹன விஜயவீரவுக்கும் பங்குண்டு என்பதும் வெளிப்படை. இலங்கையின் இதுவரையான வரலாற்றில் ஒரு கொவிகம தவிர்ந்த வேறு எவரும் அரசியல் உயர் பதவிக்கு வரமுடியாது என்பதையும் தோழர் சண் தனது சுயசரிதையில் கூறியுள்ளார். பிரேமதாசவின் பதவி ஒரு வரலாற்று விபத்தாகும். பிரேமதாசவின் பதவிக்குப் போட்டியாக இருந்த கொவிகமவான அத்துலத் முதலியின் விபத்தில்லாத மரணத்தின் மூலம் இந்த விபத்து முழுமைபெற்றது. சிங்கள ஆளும் வர்க்க அரசியலின் இயக்க சக்திகளில் கொவிகம- கரவாஸ் முரண்பாடும் ஒன்றாகும்.

தமிழீழத்தின் உள்நாட்டு யுத்தத்தின் இயக்குசக்தியும் இந்த சாதிய முரண்பாடுதான். இது வெள்ளாள ஆதிக்கத்திற்குப் பதிலாக கரையாரின் ஆதிக்கத்திற்காக நடைபெற்றதொன்றாகும். நிலைமை இவ்விதமிருக்கக் கூடியதாக சாதியத்தை மிச்சசொச்சம் என்று கூறியது எப்படிச் சரியாகும்? மிச்சசொச்சத்திற்கு இவ்வளவு சக்தியா? இது சாத்தியமா?
இல்லை, இது சாத்தியமில்லை என்பதை, கலாச்சாரப் புரட்சி பற்றிய தோழர் சண்ணின் விளக்கத்திலும், அரை-நிலப்பிரபுத்துவம் பற்றி தோழர் சண்ணின் தலைமையிலான கட்சியின் விளக்கத்தில் காணக்கூடியதாக உள்ளது.
முதலில் கலாச்சாரப் புரட்சி பற்றிய சண்ணின் விளக்கத்திற்குச் செல்வோம்;
தனது சுயசரிதையில், 1966-இல் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி’ பற்றிய விளக்கத்தின் போது, சண் இவ்விதம் கூறுகிறார்:
“தோற்கடிக்கப்பட்ட எந்த வர்க்கமும் அதிகார ஆசனங்களில் இருந்து அது விலக்கப்பட்டதை இலேசாக எடுத்துக் கொள்ளமாட்டாது. மீண்டும் அதிகாரத்துக்குவர அது சதிசெய்து திட்டமிடும். இந்த முயற்சியில் அதன் பிரதான கூட்டணிகளில் ஒன்று பழைய பழக்கவழக்கங்களும் சிந்தனைகளும் மக்களின் மனதினில் உறைந்திருப்பதாகும். மனிதரின் சிந்தனையைப் புனருருவாக்கி பழைய பூர்ஷ்வா கறுப்புச் சித்தாந்தத்தின் மிச்சசொச்சம் அனைத்தையும் துடைத்தொழிக்க பாரதூரமான வெற்றிகரமான முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் பூர்ஷ்வாவர்க்கம் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் முயற்சியில் ஈடுபட சாதகமான நிலைமைகள் உருவாக்கப்படும்.” பக்கம் 195
‘பழைய’ என்று கூறுவது தூக்கியெறியப்பட்ட வர்க்கங்களின் பழக்கவழக்கங்களும், சிந்தனைகளும் என்று எடுத்துக் கொள்ளலாம். இதன் படி தோழர் சண்ணிற்கு தோற்கடிக்கப்பட்ட வர்க்க சித்தாந்தத்தின் மிச்சசொச்சம்தான் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியின் பிரச்சனையாக்கப் படுகிறது. இதுபற்றி லெனின் கூறுவதாக அவர் தனது நூலில் கொடுத்துள்ள மேற்கோளை நோக்குவோம்.

“லெனினுடைய வார்த்தைகள் வருமாறு: “தூக்கியெறியப்பட்டபடியால் (ஒரு நாட்டில் என்றாலுங்கூட) பத்து மடங்கு அதிகரித்த எதிர்ப்புடையதும் சர்வதேச மூலதனத்தின் பலம், பூர்ஷ்வா வர்க்கத்தின் சர்வதேசத் தொடர்புகளின் பலம், உறுதி ஆகியவற்றில் மாத்திரமல்லாது பழக்க சக்தி, சிறிய உற்பத்தி ஆகியனவற்றின் பலத்திலும் தங்கியிருக்கின்றது. துரதிருஷ்டவசமாக சிறிய உற்பத்தி இன்னமும் உலகில் மிகப் பரவலாக இருக்கின்றது. சிறிய உற்பத்தி முதலாளித்துவத்தையும் பூர்ஷ்வா வர்க்கத்தையும் இடைவிடாது தினசரி மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் தன்னிச்சையாக பெருமளவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.”

லெனின் பழக்க சக்தி என்று குறிப்பிடுவதையே தோழர் சண் மிச்சசொச்சம் என்று குறிப்பிடுகிறார். லெனின் கூற்றில் மிச்சசொச்சம் பற்றி எந்த மயக்கமும் இல்லை. தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்கள் தாம் மீளவும் ஆட்சிக்கு வருவதற்காக நான்கு வகையான சக்திகளில் தங்கியுள்ளன. ஒன்று, தமது மனோபாவமும், வைராக்கியமும், மற்றையது, தமது சகாக்களின் புற உலகபலம், இவை இரண்டும் மிச்சசொச்சங்களல்ல. அடுத்தது சமுதாயத்தில் காணப்படும் பழக்க சக்தி. இது இன்னமும் தோற்கடிக்கப்படாத ஒரு பண்பாட்டுக் கட்டுமானமாகும். இதுவும் மிச்சசொச்சமல்ல. மற்றையதும், இறுதியானதும்- மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் தன்னிச்சையாக பெருமளவில் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் சிறு உற்பத்தி முதலாளித்துவம். இதுவும் மிச்சசொச்சமல்ல. லெனின் கூறும் எதுவுமே மிச்சசொச்சங்களல்ல. இவை அனைத்துமே அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டுமானங்களாகும்.

கலாச்சார புரட்சி பற்றி மேலும் பல மேற்கோள்களை முன்வைக்கின்றார். அவற்றில் மற்றொன்று:

“சீன விடுதலைச் சேனைத் தினசரி சுட்டிக்காட்டியதாவது, “ஒவ்வொரு புரட்சியிலும் அடிப்படைப்பிரச்சனை அரசு அதிகாரப்பிரச்சனை என்பதை பாட்டாளிவர்க்கப் புரட்சியின் வரலாற்று அனுபவத்தில் இருந்து நாம் அறியலாம். நாம் நாட்டிலுள்ள எதிரியை வென்றடக்கி துப்பாக்கிமூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினோம். ஏகாதிபத்தியம் சரி, நிலப்பிரபுத்துவம் சரி, அதிகார முதலாளித்துவம் சரி, லட்சாதிபதிகள் சரி, கோடீஸ்வரர்கள் சரி, கோடானுகோடீஸ்வரர்கள் சரி இவர்கள் அனைவரையும் தூக்கியெறிய முடியும். இவர்களுடைய சொத்தைப் பறித்தெடுக்கமுடியும். ஆனால சொத்தைப் பறித்தெடுத்தால் அவர்களுடைய மனங்களில் இருக்கும் சிந்தனையைப் பறித்தெடுத்ததாகாது. தினம் தினம், மணிக்கு மணி அதிகாரத்துக்கு வர அவர்கள் கனவு காண்கிறார்கள்; தாம் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறக் கனவு காண்கிறார்கள். அவர்கள் மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரே என்ற போதும் அவர்களுடைய அரசியல் உள்ளார்ந்த சக்தி கணிசமானது. அவர்களுடைய எதிர்ப்புச் சக்தி அவர்களுடைய எண்ணிக்கையிலும் பார்க்க விகிதாசாரம் கூடியது.

சோஷலிச சமுதாயம் பழைய சமுதாயத்தின் கருப்பையில் இருந்து தோன்றுகின்றது. வர்க்க சமுதாயத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவாகிய தனிநபர் சொத்துடைமைச் சிந்தனையையும், தனிநபர் சொத்துடைமையுடன் தொடர்புடைய சுரண்டும் வர்க்கங்களின் பழக்கசக்தி, சித்தாந்த, கலாச்சார பாதிப்பு ஆகியவற்றையும் இல்லாது செய்வது அவ்வளவு இலகுவானதல்ல. நகரத்திலும் கிராமத்திலும் உள்ள குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் தன்னிச்சையான சக்திகள் புதிய பூர்ஷ்வா வர்க்கப் பிரகுரிதிகளைத் தோற்றுவிக்கின்றன…………” (பக்கம் 196-197)

சீன விடுதலைச் சேனையும் லெனின் சொன்னதையே தமது சூழலுக்கு ஏற்ப மிக அழகாக எந்தக் குழப்பமும் இன்றிக் கூறுகிறார். லெனின் சுட்டிக்காட்டிய நான்கு சக்திகளில் இரண்டாவதை செஞ்சேனை தவிர்த்துள்ளது. தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களின் அனைத்துலக நண்பர்களை எதிர்கொள்ளத் தயாரான நிலைக்கு தன்னை வளர்த்துவரும் செஞ்சேனை இதுபற்றிச் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. செஞ்சேனையும் முதலாவதாகக் கூறுவது தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களின் கனவுகளையும், உள்ளார்ந்த சக்திகளையுமேயாகும். மூன்றாவதாக நிலவும் பண்பாட்டுக் கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறார்கள். நான்காவதாக இவர்களும் குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் தன்னிச்சையான மீள் உற்பத்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

சுரண்டும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்தும், கேந்திரமான பொருளாதார அதிகாரங்களில் இருந்தும் தூக்கி எறியப்பட்ட பின்னர், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கோலோச்சும் நாடுகளிலேயே இந்த நிலையானால், முதலாளித்துவப் புரட்சி கூட முறையாக நடைபெறாத இலங்கை போன்ற நாடுகளின் நிலை எவ்விதமாக இருக்கும். நிலப்பிரபுத்துவ வர்க்கம் உட்பட எந்த ஆளும் வர்க்கத்தினதும் அரசியல் அதிகாரமோ, பொருளாதார அதிகாரமோ இன்னமும் தூக்கியெறியப்படவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் உட்பட அவற்றின் சுதந்திரச் செயற்பாடுகள் அச்சுறுத்தலுக்குக்கூட உள்ளாக்கப்படவில்லை. வர்க்கப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லவேண்டிய அரசியல் அணியினர் திரிபுவாதம், தொழிற்சங்கவாதம், முதலாளித்துவ அல்லது சிறுமுதலாளித்துவ தேசியவாதம் ஆகிய சேற்றினுள் சிக்கித் தவிக்கும்போது இது சாத்தியப்படுமா என்ன? நிலப்பிரபுத்துவ கட்டுமானம் இன்னமும் உயிர்த் துடிப்புடன் இருக்கும் இன்றைய நிலையில் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக் கட்டுமானமாகவும், வளங்களினதும், வரப்பிரசாதங்களினதும் அசமத்துவப் பகிர்வை நியாயப்படுத்தும் கட்டுமானமாகவும் இருக்கும் சாதியமும், தீண்டாமையும் எவ்விதம் மிச்சசொச்சமாகிவிடும். லெனின் சிறுமுதலாளித்துவம் பற்றிக் கூறியது போல், சாதியமும், தீண்டாமையும் ‘இடைவிடாது தினசரி மணத்தியாலத்துக்கு மணத்தியாலம் தன்னிச்சையாக பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.’ சிறுமுதலாளித்துவ அணியினர் தமக்குள் நடக்கும் போட்டியில் சாதியத்தையும் தீண்டாமையையும் புதுப்பித்துக் கொண்டேயிருப்பார்கள்.

லெனினும், சீனச் செஞ்சேனையும் பழக்கம் என்றும் பழக்கவழமையென்றும் கூறும் பண்பாட்டுக் கூறுகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவும் நாடுகளின் பண்பாட்டுக் கட்டுமானத்தின் எதிரோட்டங்களேயாகும். அவ்விதம் இருந்தும் அவர்கள் அதை மிச்சசொச்சம் என்று கருதவில்லை. ஆனால் இலங்கை உட்பட்ட தெற்காசிய நாடுகளில் சாதியமும், தீண்டாமையும் அதிக்கம் பெற்று நிலவும் பண்பாட்டுக் கூறுகளின் பிரதான ஓட்டமாக உள்ளன. அவை இன்னும் பழமையாகி விடவில்லை. சாதியத்தையும் தீண்டாமையையும் மிச்சசொச்சம் எனக் கூறுவது நிலப்பிரபுத்துவத்தின் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும், நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தையும் பாதுகாப்பதாகவே அமையும்.

கட்சி(CCP-M) நிலப்பிரபுத்துவக் கட்டுமானம் பற்றி இவ்விதம் கூறுகிறது:

“அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள், நவ- காலனியல் உற்பத்தி உறவுகளுடன் அருகருகில் தன்னை நிலை நிறுத்தி வைத்திருக்கவில்லை. அரை-நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளுள் அழுந்தியும் அதற்குக் கீழ்ப்பட்டுமே தம்மை நிறுத்தி வைத்திருக்கின்றன. ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகள் தம்முள் அழுந்தியுள்ள இவ் உற்பத்தியுறவுகளை மீளுற்பத்தி செய்தும், மீள் சக்திப்படுத்தியும், ஊக்கமுடன் செயற்படவைத்தும் வருகின்றன.”……. “பொதுவில் பார்க்கப்போனால் ஒடுக்கப்பட்ட நாடுகளின் உற்பத்தி முறைமையானது (Mode of Production). அரை-நிலப்பிரபுத்துவமாகவும், அரை-காலனியலித்துவமாகவுமே இன்னமும் நிலவுகின்றன. அரை-காலனியலித்துவமே இங்கு பிரதானமானதும், சாராம்சமானதுமாகும். இதன் அர்த்தம் உலக ஏகாதிபத்தியத்தினால் திணிக்கப்பட்ட புதிய வடிவிலான பொருளாதார ஆதிக்கத்தாலும், ஊடுருவலினாலும் இந்நாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை இந்நாடுகளின் உற்பத்தி முறைமையிலும், சமூக உருவாக்கத்திலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நிராகரிப்பது என்பதல்ல……… புதிய வடிவிலான இந்த ஊடுருவல் ஒடுக்கப்பட்ட நாடுகளின் வர்க்க மற்றும் மூலதன உருவாக்க இயக்கப் போக்கிலும் அரசியல் போராட்ட வடிவங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தவே செய்கின்றன…. இதனால் பொதுவாகப் பார்த்தால் நிலப்பிரபுத்துவ நில உடமையாளர்களால் சுரண்டப்படுவதைவிட விவசாயிகள் உலக ஏகாதிபத்தியத்தாலும் அனைத்துலக நிதி மூலதனத்தாலுமே அதிகமாகச் சுரண்டப்படுகிறார்கள். பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளே விவசாயப் பொருளாதாரத்தின் செயற்பாட்டை தீர்மானிக்கும் தீர்மானமான சக்தியாகத் திகழ்கிறது.”

இலங்கையின் சமூக உருவாக்கம் பற்றிய CCP(M)-இன் மதிப்பீடு நிலப்பிரத்துவக் கட்டுமானத்தை மிச்ச சொச்சமென்று சொல்லவில்லை. இக்கட்டுமானத்தின் இருத்தலையும், தன்மையையும், அதன் மீளுருவாக்கத் திறனையும், அதன் பாதுகாவலர்களையும் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகின்றது. பிரபுத்துவக் கட்டுமானம் மிச்சசொச்சம் என்றால் எதற்காக புதிய ஜனநாயகப் புரட்சி? சோஷலிஸப் புரட்சியையே பிரகடனப் படுத்தலாமே.
நிலப்பிரபுத்துவ நில உரிமைமுறையுடன் எதுவிதத் தொடர்பும் இல்லாமல், முலாளித்துவ நிலஉடமை முறையின் கீழ் ஏகாதிபத்திய அதிகாரத்துவக் கட்டுமானத்தால் நேரடியாகவே சுரண்டப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கூட சாதியம் ஒரு மிச்சசொச்சம் அல்ல என்பதைக் கட்சியின் அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது.

“உச்சபட்ச சலுகைகளை அனுபவிப்பவர்களாகவும், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்துகொண்டு மலையகத் தமிழ் மக்கள்மீது எஜமானத்துவம் செலுத்திவரும் ஆளும் வர்க்கத்தை மேலும் வலுப்படுத்துவதே பாரளுமன்ற பிரதிநிதித்துவக் கட்டுமானத்தின் பங்களிப்பாக இருந்து வருகின்றது. தொழிற்சங்க ராஜாக்கள் இந்த ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளார்கள். பெரும் தோட்டத் தொழிலாளர்களை பசியால் வாடும் தெருநாய்களாகக் கருதி எலும்புத் துண்டுகளைத் தூக்கிப்போடும் இவ் ராஜாக்கள், ஆளும் வர்க்கங்களின் சுகபோக நிகழ்வுகளில் பங்கெடுக்கத் தவறுவதில்லை. இந்த நவீன பிரபுத்துவ-காலனிய தந்தைவழி அதிகாரக் கட்டுமானமானது பல்வேறு விதமான தேசிய, வர்க்க, சாதிய மற்றும் பாலிய அடக்குமுறை வடிவங்களை தோற்றுவித்துக் கொண்டும் புதுப்பித்துக் கொண்டுமிருக்கின்றன”……. “ தமிழ்த் தோட்ட சமூக உருவாக்கத்தின் உள்ளடக்கம், தொழிலாளர்கள் மீது மிக இறுக்கமான மரபுவழி-பிரபுத்துவத் தந்தைவழிக் கட்டுமானத்தைத் திணிப்பதாகவே அமைந்துள்ளது. மலையகத் தமிழர்கள், தேசிய ஒடுக்குறை, வர்க்கச் சுரண்டல் ஆகியவற்றுடன் சேர்த்து அதிகார அடுக்குகளால் பிரயோகிக்கப்படும், மிகத் தொன்மைக்கால சாதிய, பாலியல், பிரபுத்துவ வடிவங்களைக் கொண்ட முறைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.”

எவ்வளவு தெளிவான கணிப்பீடு. தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாம் வாழ்ந்துவந்த நிலப்பிரபுத்துவக் கட்டுமானங்களில் இருந்து வேரும்-வேரடி மண்ணோடும் பிடுங்கி எடுக்கப்பட்டவர்களாகும். அதன் அவ் உற்பத்தி உறவுகளின் மிச்ச சொச்சத்தைக் கூட காணும் வாய்ப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, முதலாளித்துவக் கட்டுமானத்துள் திடீர் எனத் திணிக்கப்பட்டவர்கள். முதலாளித்துவ கட்டுமானத்துள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தாலுங்கூட முன்னைய பிரபுத்துவ பண்பாட்டுக் கட்டுமானத்தை தமக்குள்ளான உறவுகளில் பேணி வருகிறார்கள். அவர்கள் புதிதாக அறிமுகமாகியிருந்த முதலாளித்துவக் பொருளாதாரக் கட்டுமானத்துக்கு அவை புதியவைதான், ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவை புதியனவுமல்ல, பழையனவுமல்ல. அது அவர்களின் வழமை. முக்காலத்துக்கும் உரியவையாக அவர்களால் கருதப்படுபவை.

எந்தப் பொருளாதார வேரும் இன்றி தனிமனித மனங்களிலும் மலையக சமூக மனங்களிலும் மட்டும் வாழும் இந்த பிரபுத்துவ பண்பாட்டுக் கட்டுமானத்தை முதலாளித்துவம் அழித்ததா. இல்லை. அதை வளர்த்தது. அதை தனது அதிகாரக் கட்டுமானத்துடன் இணைத்துக் கொண்டது. முதலாளித்துவ அடிக்கட்டுமானத்தில் நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானம் வளர்க்கப்பட்டது. புத்துயிர் ஊட்டப்பட்டது, புனரமைக்கப்பட்டது, தகவமைக்கப்படது. சாதியம் மிச்சசொச்சம் அல்ல என்ற நிலைமையை மலையகத்தில் ஏற்படுத்துவதில் காலனிய முதலாளித்துவம் வெற்றிபெற்றுவிட்டது. செம்மை மா-லெனினிஸ்டுகள்(Classical) இதனை நம்பமாட்டார்கள், அல்லது இது ஒரு வரலாற்று விபத்து எனக் கூறி இதன் காரண காரியத் தொடர்பை மறுப்பார்கள். ஆனால் இது நடக்கின்ற உண்மை.

இ.க.க.(மாஓ)-யின் இக்கருத்துக்கள்தான் தோழர் சண்ணின் இன்றைய கருத்துக்கள் என நாம் நம்பலாம். சில வேளை இக்கருத்துகளுக்கு அவரே காரணமாகவும் அமையலாம். இதன் மூலம் கடந்தகாலச் செயற்பாடுகளை ஆராய்வதற்க்கானதோர் சித்தாந்த ஆயுதத்தை தந்துள்ளார் என்றும் கூறலாம். ஆகவே அவரின் முன்னைய தவறான கருத்துக்களைச் சுட்டிக் காட்டுவது அவர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக அல்ல. தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் இடையில் தொலைந்து போனமைக்கான காரணம் இத் தவறான அணுகு முறையேயாகும் என்பதைச் சுட்டிக்காட்டவேயாகும்.

அத்துடன், வடபகுதியில் தீண்டாமை இன்னமும் ஒழியவில்லை. சாதிய அடக்குமுறையும் , ஓரங்கட்டப்படலும். முன்பைவிட உயர்வான முறையில் தீண்டாமையும், விளிம்புநிலையாக்கப்படலும் இன்னமும் தொடர்கிறது. புதிய வடிவத்தில் புதுப்பிறப்பெடுத்துத் தொடர்கிறது, ஆகவே இதற்கெதிரான போராட்டத்தின் அவசியம் இன்னமும் உள்ளது. முன்பைவிட அதிகமாக உள்ளது. அகவே பஞ்சமர்களை தமிழ்த் தேசியப் போராட்டத்தின் பிரதான செயற்படுகளமாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இன்னமும் காலாவதியாகிவிடவில்லை. புதிய ஜனநாயகக் கோட்பாட்டாளர்கள், தமிழ் தேசியப் போராட்டத்தை, தமது தலைமையின் கீழ் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கு இனியும் எதற்காகத் தாமதிக்கவேண்டும். களம் உண்டு, படையுண்டு, தளபதிகளை மட்டும் காணோம். மிச்சசொச்சம் பற்றிய அலசலுக்கான காரணம் தளபதிகளைத் தேடும் இந்த ஆதங்கந்தான், வேறு எதுமில்லை.

ஆ.6) பௌத்தம் பற்றிய அவரின் புரட்சிகர நிலைப்பாடு.

இலங்கையின் முதல் தலைமுறை இடதுசாரிகளும், தேசியவாதிகளும், இலங்கை அரசியலில் பௌத்த மதபீடங்களின் ஆதிக்கம் பற்றி எதுவுமே பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் சில பௌத்த குருமார்களின் அல்லது சில ‘பிரிவினர்களின்` ஒழுங்குமீறிய நடவடிக்கைகளாகவே இவற்றைப் பார்க்கிறார்கள். இது ‘சங்க’-வின் பொதுக்குணாம்சம் என்பதை எவருமே ஒத்துக்கொள்வதில்லை. சண் தலைமையிலான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், அக்கட்சியை விட்டுப் பிரிந்த குழுக்களும் இதே நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். இவ்விதம் இருக்க சண் தனது சுயசரிதையில் இதற்கு நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளதன் மூலம் இலங்கைப் புரட்சிக்கு ஒரு புதிய வழிகாட்டலை சுட்டிக் காட்டியுள்ளார். அவரின் கூற்றை அவதானிப்போம்:

“ஆகவே இலங்கையில் புத்தமதச் சங்கம் அநேகமாக எதிர்மறைப் பாத்திரத்தையே வகித்திருக்கிறது. சிங்களவர்கள் அதாவது புத்தமதத்தவர்கள் சங்கவின் ஆதிக்கம்- அடிமைத்தனத்தில் இருந்து விடுபடாமல் இருந்தால் எதிர்காலம் இருண்டதாக இருக்கும்…………… மதத்தை அரசியலில் இருந்து பிரிக்காவிட்டால் இலங்கைக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது.” பக்கம்- 285
இங்கு அடிமைத்தனம் எனக் குறிப்பிடுவது மாக்ஸிய நிலைப்பாடாகும். பௌத்த மதச் சங்கங்கள் சிங்கள மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை மட்டுமல்ல சிங்கள மக்கள் அவ் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதையும் கூறுகிறார். அத்துடன் நிற்கவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியிடம் சங்கவின் அடிமைப்படுத்தலுக்கு எதிராக எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தற்போதும் இருப்பதாகத் தெரியவில்லை. 2008-ஆம் ஆண்டு கொள்கைப் பிரகடன அறிக்கையில் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு ‘சொல்லொன்றும் செயல் வேறொன்றுமாக’ இல்லை. ஆனால் ‘சொல்வதுடன் சரி’ என்ற நிலையே காணப்படுகின்றது.

‘சங்க’-வின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கான எந்தத் தனியான வேலைத்திட்டமும் தேவையில்லை, புதிய ஜனநாயகப் புரட்சியின் போது அது தானாகவே நிறைவேறும் என்றோ அல்லது புதிய ஜனநாயகப் புரட்சியின் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்றோ கருதுவது தவறானது. பண்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் வர்க்க அடிப்படையிலான அரசியல் அதிகார மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற நிலையில் பல நாடுகள் இருந்துள்ளமையையும் தற்போதும் இருந்துவருவதையும் நாம் காண்கிறோம். இலங்கையில் சிங்கள மக்களின் நிலையும் இவ்விதமானதே. சிங்கள மக்களின் பண்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் சிங்கள மக்களிடையே புதிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த முடியாது. சிங்களத் தேசிய இனம் தொடர்ந்தும் தேசிய ஒடுக்குமுறைக் குணாம்சம் கொண்ட இனவாதத் தேசிய இனமாகவே இருக்கும். ஆசியாவின் யூதர்களாக அவர்கள் இருப்பார்கள். இலங்கை தெற்காசியாவின் ஒரு இஸ்ரேலாக இருக்கும். நேட்டோவின்(NATO) இஸ்ரேலா, பிறிக்ஸின்(BRICS) இஸ்ரேலா என்பது இன்னமும் நிச்சயமாகவில்லை. ஆகவே, முழு இலங்கைக்குமான புதிய ஜனநாயகப் புரட்சியையோ அல்லது சோஷலிஸப் புரட்சியையோ முன்வைக்கும் தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ எவராயினும் சரி, அவர்கள் புரட்சியாளர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ‘சங்க’-வின் அடிமைத்தளைகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் முன்கொண்டு செல்கிறார்களா இல்லையா என்பதுதான்.

ஆனால், ‘இலங்கைக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது’ எனும் நிலையை உருவாக்கியதும், அந்நிலையைப் பாதுகாத்து வருவதுவும் பௌத்தம் மட்டுந்தானா? பார்பனிய மதங்களினதும்(சைவம், இந்து, வைணவம்), இஸ்ரேலிய மதங்களினதும்(கிறிஸ்துவம், இஸ்லாம்) சித்தாந்தம் நேர்மறை சீர்திருத்த அம்சங்கள் கொண்டனவா? இல்லை. இலங்கையின் இன்றைய அரசியலில் பௌத்தம் போல் அவை நேரடியான அரசியல் பங்கு வகிக்காவிட்டாலும் அவை தீய பங்கு வகித்துள்ளன. தற்போதும் வகித்து வருகின்றன. ஆகவே கம்யூனிஸ்டுகளுக்கு மதம் பற்றிய ஒரு ஸ்துலமான கண்ணோட்டமும் வேலைத்திட்டமும் இருக்கவேண்டும். கறிக்குதவாத சில ஏட்டுச் சுரைக்காய்களை மட்டும் வைத்திருப்பதால் பயனில்லை.

தோழர் சண் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூல் அறிமுகவிழா 20.10.2012 லண்டனில் நடைபெற்றது. தங்கவடிவேல் மாஸ்டர், தோழர் தம்பிராசா,காதர் மாஸ்டர் ,யமுனா ராஜேந்திரன், சபேசன் , சஜீவன் , கௌரிகந்தன் சார்பாக முத்து, தோழர் விக்கும் , மாசிலாபாலன், நாவலன், ராமமூர்த்தி, ராகவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
 
தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்”என்னும் நூல் அறிமுக கூட்டத்தில் தோழர் முத்து (சிறீ) அவர்களால் படிக்கப்பட்ட தோழர் கைமண் அவர்களின் முழு அறிக்கை.
நன்றி:  இனிஒரு

2 comments:

Anonymous said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

ஜோர்ஜ் said...

சிறந்த விரிவான பார்வை.